ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2018

கடலில் திசை அறியாது செல்வோருக்கு வழிகாட்டுவது துருவ நட்சத்திரம் – இந்த மனித வாழ்க்கையின் எல்லையை அடைய வழிகாட்டுவதும் “அதே துருவ நட்சத்திரம் தான்…!”


அக்காலங்களில் கடலில் செல்வோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தைப் பார்த்துத்தான் பாதை அறிந்து செல்ல வேண்டும்.

இரவாகிவிட்டால் அந்த நட்சத்திரம் எங்கே தோன்றுகின்றதோ வடக்கு கிழக்கு தெற்கு என்ற நிலைகளில் அந்தத் திசைகளை நோக்கிச் செல்ல முடியும்.  

அங்கே வழியைக் காட்டும் கை காட்டியோ ரோடுகளோ கிடையாது. தான் வந்த ஊரும்… தான் சென்ற நிலைகளும்.. தான் செல்லும் ஊரும் அது எந்த இடம் என்று கப்பலில் செல்வோர் அதை வைத்துத்தான் அறிகின்றார்கள்.

இன்று விஞ்ஞானிகளோ வடக்கு தெற்கு என்ற நிலையில் பாதரசத்தை விட்டு அதற்குள் ஈர்க்கும் சக்தி கொண்டு இயந்திரத்தின் துணை கொண்டு திசைகளைக் காண்கின்றனர்.

ஆனால் அன்றோ இயந்திரத் துணை இல்லாத அக்காலங்களில் வாழ்ந்தவர்கள்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தைத்தான் உற்று நோக்கி
2.அதனையே எல்லையாக வைத்து வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் “பலர்…!”

மீனவனாக வாழ்ந்த வியாசகரும் கடலில் மீன் பிடிக்கும் சந்தர்ப்பத்தில் புயலில் சிக்கிக் கடலில் வீழ்ந்து உயிருக்காகத் தத்தளிக்கும் பொழுது எந்த மீனைப் புசித்தாரோ அதே மீன் இனமே அவரை முதுகில் சுமந்து கரை சேர்த்துக் காக்கின்றது.

ஒரு மீன் தன்னைக் காத்தது என்ற அந்த ஏக்கத்தில் எண்ணும் பொழுது அவருக்குள் சிக்கப்பட்டதுதான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்த பின் தான் அந்த மீனவன் மகாபாரதத்தையும் அதற்குள் கீதாச்சாரத்தையும் வெளிப்படுத்திக் காட்டினார்.

ஏனென்றால் வியாசகருக்கு அந்த ஞானம் எப்படி வந்தது என்று நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குவதற்காகவும் தான் இதைச் சொல்வது.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறுவதன் மூலம்
2.உங்கள் வாழ்க்கையில் எழும் எத்தகைய வினாக்களுக்கும்
3.நீங்கள் விடைகளைக் காணலாம்.

உங்களிடம் எதிர் நிலையாக வந்து மோதும் உணர்வுகளிலிருந்து விடுபடச் செய்து உங்கள் சிந்தனைகளை அது சீராக்கி உங்களைத் தெளிந்த மனதாக மாற்றிப் பிறவியில்லா நிலை அடையச் செய்யும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள்.

தீமை என்ற உணர்வுகள் உங்களை மோதி அதனின் இயக்கமாக நீங்கள் மாறிடாது
1.உங்கள் உணர்வே உங்களை இயக்கும் நிலையாக
2.உங்களிலே அது வளரும் தன்மையாக நீங்கள் பெறவேண்டும் என்றும்
3.இன்றைய விஞ்ஞான அறிவால் வரும் பேரழிவிலிருந்து உங்களை மீட்டிடும் நிலைகள் நீங்கள் பெறவேண்டும் என்பதற்காகத்தான்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பற்றித் தெளிவாக்குகின்றோம்.

நலம் பெறுக… வளம் பெறுக… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக…!