ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 9, 2018

"சுருக்...” என்று யாராவது சொன்னால் நம்மால் தாங்க முடிகின்றதா...?


வேதனைப்படுத்துகின்றார்கள் என்று தெரிகின்றது. அவர்களால் மற்றவர்கள் வேதனைப்படுகின்றார்கள் என்றும் தெரிகின்றது. இரண்டையும் தான் நாம் நுகர்கின்றோம்.

வேதனைப்படுபவர்கள் மீது நாம் பிரியமாக இருந்தால்... “இப்படிச் செய்கிறான் பார்...!” என்று நாமும் அந்த வேதனையை நுகர்கின்றோம்.

வேதனைபடுத்துவனைப் பார்த்து இந்த மாதிரிச் செய்து கொண்டிருக்கின்றான் என்று ஆத்திரத்தை நுகர்கின்றோம்.

வேதனையையும் ஆத்திரத்தையும் இந்த இரண்டையுமே நாம் வளர்க்கின்றோம். இது இரண்டையும் நம் எண்ணத்துடன் சேர்த்தவுடனே வேதனை ஒரு பகுதி வளரும். ஆத்திரம் ஒரு பகுதி வளரும்.

அவர்கள் எப்படிப் பகைமையை வளர்த்தார்களோ அந்தப் பகைமையான அணுக்களே நமக்குள் விளைகின்றது. எதிரியை உள்ளே விட்டுவிடுகின்றோம்

இரண்டு பேரும் சண்டை போட்டு விட்டுப் போய் விடுவார்கள். நாம் இதைப் பார்த்து விட்டு வீட்டிற்குள் வருகின்றோம். பார்த்துவிட்டு வந்த பின்
1.நிம்மதியாகச் சோறு சாப்பிட முடியுமா...?
2.சமையலைச் சரியாகச் செய்வீர்களா...? வேலையைச் சீராகச் செய்வீர்களா...?
3.அப்போது நம் ஆன்மாவில் பட்ட அந்த அழுக்கை நீக்க வேண்டும் அல்லவா...!

அதற்குத்தான் மகரிஷிகளின் அருள் ஒளியை நம் ஆன்மாவில் புத்தாடையாக அணிவதற்காகத் தீபாவளி என்று காட்டுகின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் சண்டை போட்ட இருவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று சிந்தித்துச் செயல்படும் அருள் சக்தி பெறவேண்டும் என்று இதை நம் ஆன்மாவில் பெருக்க வேண்டும்.

அந்த உணர்வை நமக்குள் வளர்த்துப் பழக வேண்டும். அந்த வேதனையான உணர்வை அது அடக்கிவிடும்.

நீங்கள் வெறுமனே புது சட்டையைப் போட்டுவிட்டு அன்றைக்கு “சுருக்...!” என்று ஒருவர் சொல்லி விட்டால் என்ன ஆகும்...? மகிழ்ச்சியாக இருக்குமா...?

நல்ல வெள்ளை சட்டையைப் போட்டிருக்கின்றோம். ஒருவன் கல்லைக் கொண்டு எறிகின்றான். சாக்கடையில் விழுந்து தெறித்து நம் வெள்ளைச் சட்டையில் பட்டுவிட்டது.

அப்பொழுது என்ன சொல்கிறோம்...? நாம் போகும் போது கல்லைக் கொண்டு எறிகின்றான் பார்...! அயோக்கியப்பயல்...! என்று
1.அவன் மீது வெறுப்படைகின்றோம்
2.சட்டை அழுக்காகிப் போகின்றது
3.மனதும் அழுக்காகிப் போய் விடுகின்றது.

அதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா...! நம் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டுமல்லவா...!

சந்தர்ப்பத்தால் நம் வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத்தான் ஞானிகள் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி எல்லாவற்றையும் தூய்மைப்படுத்தியவன் மகரிஷி. அந்த அருள் ஒளியை நமக்குள் பெற்று நம் ஆன்மாவில் அழுக்கு சேராமல் உடனுக்குடன் துடைக்க வேண்டும்.

இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்,