ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2018

நம் உடலிலுள்ள ஜீவான்மா சுத்தமானால்தான் “நம் உயிரான்மா ஒளியாகும்...!”


நீங்கள் ஒரு சமயம் பேசிக் கொண்டு இருக்கின்றீர்கள். கஷ்டம் என்று சொல்கின்றீர்கள். அது என்னிடம் பதிவாகிவிடுகின்றது. அதே போல நீங்கள் அடுத்தவர்களுடைய கஷ்டங்களைக் கேட்கின்றீர்கள். அது உங்களிடம் பதிவாகிவிடுகின்றது.

இப்படி அந்தக் கஷ்டம் என்ற உணர்வின் வலிமை தான் ஒவ்வொருவருக்குள்ளும் சேர்கின்றது. இதைக் காட்டிலும் வலிமையான நல்ல உணர்வைச் சேர்க்கின்றோமா…? என்றால் இல்லை.

அதற்குத் தான் அந்த இருளை வென்ற
1.அருள் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வேண்டும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை எல்லோரும் பெற்று அவர்கள் நலமும் வளமும் பெற வேண்டும் என்று எண்ணச் சொல்கிறோம்.

அதிகாலையில் படுக்கையில் எழுந்தவுடன் ஈஸ்வரா என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று நம் கண்களின் நினைவாற்றலை அங்கே கொண்டு போக வேண்டும்.

துருவ தியானத்தில் அங்கே நம் பூமியின் வட துருவப் பகுதியில் விண்ணிலே உள்ள அந்தத் துருவ நட்சத்திரத்துடன் நாம் ஒன்ற வேண்டும். அந்த அருள் ஒளியின் உணர்வுகள் உங்களுக்குள் இணைகின்றது. தீமைகள் புகாது தடுக்கின்றோம்.

 மற்றவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிகின்றது. நம் கண் தான் காட்டுகின்றது. நீங்கள் போய் உதவி செய்கின்றீர்கள். ஆனால் அவனுக்குள் அந்தக் கஷ்டம் இருக்கத்தான் செய்கின்றது.

பாலில் நஞ்சு விழுந்து விட்டது என்றால் என்ன செய்யும்..? அந்த நஞ்சு பாலுக்குள் இறங்கி விடுகின்றது. அதை யார் குடித்தாலும் இறந்துவிடுவார்கள்.

கஷ்டம் என்று யார் கேட்டாலும் அடுத்த நிமிடம் தப்புவிக்கின்றதற்குக் கண்ணன் தான் வழி காட்டுகின்றான். ஒருவன் கெடுதல் செய்தாலும் அதிலிருந்து தப்பிப்பதற்கு இந்தக் கண் தான் வழி காட்டுகின்றது.

1.உடலைத் தான் காக்க முடிகின்றது
2ஆனால் நாம் நுகர்ந்த அந்தக் கஷ்டமான உனர்வையோ கெடுதல் செய்யும் உணர்வையோ
3.அதில் சிக்காமல் காப்பாற்ற வேண்டுமா...? இல்லையா...?

அதைப் பழக்கப்படுத்துவதற்குத்தான் "ஈஸ்வரா "என்று சொல்லி உயிரை எண்ணி
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும்.
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.
3.எங்கள் ஜீவாத்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம் உடலுக்குள் செலுத்த வேண்டும்.
4.பிறர் கஷ்டப்படுகின்றார்கள் என்றால் மகரிஷியின் அருள் சக்தியால் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
5.வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ அந்த வைரத்தைப் போல வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்.
6.எங்கள் செயல் அனைத்தும் வைரத்தை போல ஜொலிக்க வேண்டும் என்று
இப்படி நாம் எண்ணிப் பழக வேண்டும்.

எல்லாரும் இப்படி எண்ணும் போது என்ன நடக்கின்றது...? காலையில் ஆறு மணிக்கு மேல் சூரியன் வந்தவுடனே நாம் இழுக்க மறுத்த தீமையான உணர்வலைகளைக் கவர்ந்து சூனியப் பிரதேசத்திற்குக் கொண்டு போய் விடுகின்றது.

அப்போது
1.நம் பரமான இந்தப் பூமி பரமாத்மா சுத்தமாகின்றது.
2.நம் ஆன்மாவும் சுத்தமாகின்றது.
3.நம் ஜீவ ஆன்மாவும் சுத்தமாகின்றது.

துருவ நட்சத்திரத்தை நினைவுபடுத்தி ஒவ்வொரு நிமிடமும் அதை நமக்குள் சேர்த்துப் பழக வேண்டும்.

1.நமக்கு முன்னாடி இருக்கும் இந்தக் காற்று மண்டலத்தைச் (பரமாத்மா) சுத்தப்படுத்தினால் நம் ஆன்மாவிற்குள் நல்ல உணர்வுகள் படர்கின்றது.
2.நம் ஆன்மாவில் நல்ல உணர்வுகள் படர்வதால் அதைச் சுவாசிக்கும் பொழுது நம் உடலுக்குள் உள்ள ஜீவான்மா சுத்தமாகின்றது
3.ஜீவான்மா சுத்தமாகும் பொழுது “நம் உயிரான்மா ஒளியாகின்றது...!