ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 5, 2018

நாம் பார்ப்பது அனைத்தும் நமக்குள் ஊனாகி உடலானாலும் அதை நாம் ஆலயமாக்குகின்றோமா...? ஞானிகள் சொல்லும் அந்தத் தெய்வீக நிலைகளைப் பெறுகின்றோமா...?

பிறருடைய துன்பத்தை நாம் நுகர்ந்த பின் அவரின்று நாம் விலகிச் செல்லவில்லை. ஏனென்றால் நமது கண்களில் உள்ள கரு விழி படமாக்கி நம் எலும்புக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

சூரியனின் வெப்ப காந்தங்கள் தாவர இனங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைக் கவர்ந்து வைத்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

மீண்டும் அந்தத் தாவர இனத்தில் விளைந்த வித்திற்கு கவர்ந்து வைத்த அலைகளை அந்தந்தத் தாவரத்திற்கு உணவாகக் கொடுத்து அந்த  இனத்தை வளர்க்கச் செய்கின்றது.

தாவர இன சத்தைக் கவர்ந்து அலைகளாக மாற்றி வைத்துக் கொள்வது போல ஒவ்வொரு உயிரினங்களில் (மனிதருக்குள்) விளைந்த உணர்வுகளையும் இதே சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அந்தந்தக் குணத்தின் அலைகளாக மாற்றி வைத்துக் கொள்கின்றது.

எவரொருவர் உற்றுப் பார்க்கின்றனரோ எந்தக் குணத்தை நுகர்கின்றார்களோ அது அவர் உடலுக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிந்து அந்த உண்மையின் உணர்வை உணர்த்துகின்றது.

பிறதொருவர் உடலில் விளைந்த உணர்வின் தன்மை நமக்குள் ஊழ் வினை என்ற வித்தாகப் பதிவாகும் பொழுது அந்த வினை நமக்குள் வளரத் தொடங்குகின்றது.

நம் உயிரோட வேலை எது…?
1.தான் நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றுகின்றது.
2.அணுவின் மலம் நம் உடலாகின்றது.

உதாரணமாக உடலிலிருந்து இயற்கையாக நாம் கழிக்கின்றோம். அதற்குள் ஜீவ அணுக்கள் உருவாகின்றது. அப்படி உருவாகும் ஜீவ அணு மலத்தில் இருந்து கவரும் உணர்வை அந்த மலத்தையே உணவாக்கிப் புழுவாகி விடுகின்றது.

புழு மலத்திலிருந்து தவறி வெளியில் போனது என்றால் மடிந்து விடுகின்றது.

இதைப்போல அதனின் மலம் தான் நாம்

இது எனது…! நமது…! நாம்...! “எனது சரீரம்...!” என்பது எல்லாமே அணுக்களின் மலம் தான் நம் சரீரம். அதனின்று ஜீவ அணுக்கள் குடிகொண்டு நமக்குள் ஒன்றென்ற நிலைகள் இணைத்துச் செயல்படுகின்றது.

எனது என்று சொன்னாலும் உயிருடன் ஒன்றிய இயக்கமாக உடலாக வரும் போது மகிழ்ச்சியின் தன்மை வரும் போது... “எனதாகின்றது....!”

ஆனால் அதே சமயத்தில்
1.ஒரு வெறுக்கும் உணர்ச்சியைத் தனக்குள் எடுத்து
2.அந்த வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது
3.எனது என்ற நிலைகள் வந்தாலும்
4.எனக்குள் எப்போதும் அந்தத் துன்பத்தின் உணர்வின் தன்மையே உருவாக்குகின்றது.

அந்த வேதனையின் உணர்வுகள் அதிகரித்து விட்டால் அந்த வேதனையான அணுக்களைப் பெருக்கும் தன்மையை இங்கே உடலுக்குள் வளர்க்கின்றது அந்த உயிர்.
இந்த உணர்வைத் தாங்காது உயி எப்போது இந்த உடலை விட்டு வெளியேறலாம் என்ற உணர்வின் வலுவைப் பெறுகின்றது.

ஆனால் இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த வேதனையைத் தாங்கும் சக்தி கொண்ட உணர்வின் உடலாக மாற்றுகின்றது உயிர். ஏனென்றால்
1.அது நுகர்ந்த உணர்வைக் (வேதனை) காத்திடும் உணர்வுகள் அணுக்களாக உருவானதால்
2.அந்த அணுவின் மலமாகி அந்த உடலாகின்றது.

மகிழ்ச்சி தரும் உணர்வு வரப்போகும் போது உடலின் தன்மை மகிழ்ச்சி அடைகின்றது.

வெறுப்படைந்த வேதனையான உணர்வுகள் எல்லை கடந்து வரப்போகும் போது இந்த உடலை விட்டுப் பிரித்திடும் நிலை வருகின்றது.

அதாவது மகிழ்ச்சியான உடலுக்குள் வேதனையான அணுக்களின்  மலம் இணைக்கப்படும் பொழுது அது ஒவ்வாது
1.இரத்தத்தை உருவாக்கும் அணுக்கள்
2.இரத்தத்தை நீராக மாற்றும் அணுக்களாக வந்து விட்டால்
3.நமக்குள் இயக்கச் சக்தி சோர்வடைகின்றது
4.உடல் உறுப்புகள் கரையத் தொடங்கி விடுகின்றது.

ஒன்று நம்மை வளர்க்கின்றது. மற்றொன்று கொல்கின்றது என்ற நிலைகளை நாம் அறிகின்றோம்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் கார்த்திகேயா. கார்த்திகேயா என்றால் வெளிச்சம். அறியும் சக்தி வருகின்றது.

வாழ்க்கையில் துன்பங்கள் வரும் பொழுதெல்லாம் நம் ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகர்ந்து நம் உடலுக்குள் விளைய வைத்தால் ஒளியின் அணுக்களாக உடலுக்குள் உரு பெறும்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகள் ஒளியின் சுடராகப் பேரொளியாக மாறும் பொழுது உயிராத்மா ஒளியாகின்றது. அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.   

ஞானிகள் இப்படித்தான் ஒளிச் சரீரம் பெற்றார்கள். விண்ணுலகில் இன்றும் சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

இதைத்தான் திருமூலர் ஊன்... உடம்பு... “ஆலயம்...!” என்றார்.