ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2018

செல்வம் நம்மைத் தேடி வர வேண்டும்...! செல்வத்தை நாம் தேடக் கூடாது...! செல்வத்தைத் தேடினால் பிழையான வழிக்கு இட்டுச் செல்லும்..!


நமது வாழ்க்கையில் நமக்கு வேண்டியவர் ஒருவர் மிகுந்த வேதனைப்படுகின்றார் என்றால் பார்த்துப் பதிவாக்கி விடுகின்றோம். அப்போது அவரைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது அதே வேதனை வருகின்றது.

அந்த வேதனை என்ற உணர்வு வந்தபின் நம்மால் சரியாகத் தொழில் செய்ய முடியவில்லை. வேதனையுடன் நடந்து போனால் சாலையில் இருக்கும் மேடு பள்ளம் தெரிவது இல்லை.

இதைப் போல நம் மீது ஒருவர் கோபிக்கின்றார் என்றால் அதைப் பதிவு செய்து கொள்கின்றோம். அந்த உணர்வுகள் வரும் போது நமக்குள் கார உணர்ச்சிகள் தோன்றுகின்றது. நாமும் கோபக்காரனாக மாறுகின்றோம்.
1.வாழ்க்கையில் இப்படி எதுவெல்லாம் நமக்குள் பதிவாகின்றதோ
2.அது மீண்டும் நம்மை இயக்கத் தொடங்கி விடுகின்றது.

அகஸ்தியன் எவ்வாறு இருளை அகற்றி உணர்வை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமானானோ அந்த உணர்வின் அலைகளை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

பதிவான பிற்பாடு அந்த அகஸ்தியனின் உணர்வை நீங்கள் நினைத்தவுடன் கிடைக்கும்படியாகத் தகுதியையும் ஏற்படுத்துகின்றோம்.

அந்தத் தகுதியை ஏற்படுத்திய பின் எப்போது வாழ்க்கையில் தொழிலில் கஷ்டமோ நஷ்டமோ நோயோ மற்ற எதுவானாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலுக்குள் செலுத்துங்கள்.

உங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று உணர்வை ஏற்றிவிட்டால் அந்த அருள் ஆற்றல் உங்கள் உடலில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும்.

இப்படிப்பட்ட முறையில் நாம் வளர்ச்சியின் தன்மை அடைந்தால் இந்த உடலுக்குப்பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம். அதற்குத்தான் யாம் (ஞானகுரு) இப்போது இந்தத் தியானப் பயிற்சியே கொடுக்கின்றோம்.

செல்வங்கள் வர வேண்டும் என்று விரும்பினால் இந்த வாழ்க்கைக்கு உதவும்.
1.ஆனால் அதையே பெற வேண்டும் என்று ஏக்கமாகி
2.செல்வத்தைத் தேடி நீங்கள் சென்றால்
3.அது தவறின் நிலையாக பிழையான உணர்விற்கே அழைத்துச் சென்றுவிடும்.

ஞானிகள் காட்டிய அருள் வழியில் அருள் உணர்வுகளை உயிர் வழியாகச் சுவாசித்து அந்த உணர்வின் தன்மையை வலுவாக்கினால் உங்கள் தொழில் தன்னாலே அது சீராக நடக்கும்... செல்வம் பெருகும். ஆகவே
1.செல்வம் உங்களைத் தேடி வர வேண்டுமே தவிர...
2.செல்வத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டியதில்லை...!
2.அந்த அருள் செல்வம் உங்களைத் தேடி வரும்.

ஆகவே செல்வத்தை நாடாது அருளைப் பெருக்குங்கள். இருளை அகற்றுங்கள். அருள் ஞானச் செல்வத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆக மொத்தம் நீங்கள் எப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எண்ணினாலும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டு உங்கள் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ளும் தன்மை வருகின்றது.

அருள் செல்வம் என்றுமே நமக்குள் இருந்து அகச்செல்வம் அருளாகி இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் உணர்வின் தன்மையாக ஒளியின் உடலாக மாற்றும் தன்மை பெறுங்கள்.