ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 25, 2018

சிரமத்தை நீக்கும் உபாயத்தை ஒவ்வொரு மக்களுக்கும் நீங்கள் காட்டி “அவர்களின் வாழ்த்துக்குரியவராக நீங்கள் வளர வேண்டும்… என்று வேண்டிக் கொள்கின்றேன்…!


மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் நடந்து அதைச் சீராகக் கடைப்பிடிப்போர் நீங்கள் ஒவ்வொருவரும் மெய் ஞானிகளின் உணர்வை “இந்த உலகம் முழுவதும் பெருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்…!”

எம்முடைய உபதேசங்கள் ஒலி நாடாக்களில் பதிவாகியிருந்தாலும் அதைக் கேட்டு நூல் வடிவில் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். அதை மீண்டும் திரும்பத் திரும்ப வாசித்தால் அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் அபரிதமாக வளர்கின்றது. அந்த அருள் உணர்வின் இயக்கம் பெருகுகின்றது.

“ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி” மகரிஷிகளின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டால் உங்கள் இருளை அகற்றி உங்கள் உணர்வு பிறரின் இருளையும் அகற்றும் நிலையாகச் செயல்படுத்தும்.

ஏனென்றால் நாம் செய்வது நமக்கு மட்டும் அல்ல. நம் உயிரான ஆண்டவனுக்குச் சேவை செய்கின்றோம்.

அதே போல எத்தனையோ உணர்வுகள் ஒவ்வொரு உடலையும் ஆளும் அந்த ஆண்டவனுக்கும் (மற்றவர்களுக்கும்) பரிசுத்தமான நிலைகளைச் செயல்படுத்தும் தன்மை வருகின்றது.

நம் பூமியான பரமாத்மாவிற்குள்ளும் அருள் உணர்வுகள் படர்கின்றது,   பரமாத்மாவிலிருந்து தான் நாம் அனைவருமே சுவாசிக்கின்றோம். ஆகவே இந்தப் பரமாத்மா பரிசுத்தமானால் நம் ஆன்மாவும் தூய்மையாகி ஜீவாத்மா தூய்மையாகி உயிராத்மா ஒளியாகின்றது.

1.இந்த உபதேச உணர்வுகளைப் படிக்கும் பொழுதும்
2.ஆசைப்பட்டு அதைப் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுதும்
3.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்கள் உடலில் பாய்ந்து கொண்டேயிருக்கும்.

இருளை நீக்கி மெய்ப்பொருளைக் காணும் அருள் ஞான சக்தி உங்களுக்குள் வளர்ந்து “அகஸ்தியனுடன் ஒன்றி வாழும் தகுதி பெறுவீர்கள்...!” அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்கள் உடலுக்குள் தீமை அகற்றும் அருள் ஞான அணுக்களாக உருவாகும்.

அதை வளர்த்து இந்த உலகம் முழுவதும் அருள் உணர்வுகளைப் பெருகச் செய்யுங்கள். அனைத்து மக்களையும் மகிழ்ச்சியாக வாழச் செய்யும் நிலை பெறுங்கள். அனைத்து உயிரான ஆண்டவனுக்கும் காணிக்கையாக நல் உணர்வைச் செலுத்துங்கள். அவர்கள் எண்ணத்தால் எண்ணும் பொழுது அந்த ஆன்மாக்கள் பரிசுத்தமாகும்.

ஆண்டவன் வீற்றிருக்கும் ஒவ்வொரு ஆலயமும் (உடலும்) பரிசுத்தமாகும். அந்த உடலுக்குள் இருக்கும் தெய்வ குணங்கள் மகிழ்ச்சியாகும்.

ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக வாழும் உணர்வுகளைப் பாய்ச்சி அதனால் மகிழ்ந்து அவர்கள் குடும்பங்களில் நல்வழி வரப்படும் பொழுது அதைப் பார்த்து நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

1.சிரமத்தை நீக்கும் உபாயத்தை மக்கள் ஒவ்வொருவருக்கும் காட்டி
2.அவர்களை அதன் வழி பெறச் செய்து
3.அவர்கள் சிரமங்களிலிருந்து மீளச் செய்யுங்கள்.
4.அதன்வழி கொண்டு அவர்கள் மகிழ்ந்து வாழ்கின்றார்கள் என்ற உணர்வின் தன்மையை
5.அவர்களை வாழ்த்த வைத்து நீங்கள்
6.அந்த வாழ்த்துக்குரியவராக நீங்கள் பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றேன்.
7.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் உணர்வுகள் “பரிபூரணமாக உங்களுக்குள் இப்பொழுது படர்கின்றது…!”
8.அது உங்களுக்குள் ஊடுருவி அருளைப் பெறும் சக்தியாக உங்கள் உடலில் பெருகும்.
9.நல் உணர்வுகளைப் பெறும் உணர்ச்சிகளைத் தூண்டும்..
10.அருள் ஞானம் பெருகும். மெய்ப் பொருள் காணும் சக்தி உங்களுக்குள் பெருகும்.

ஆகவே அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம். உலக ஞானம் பெறுவோம். உலகைக் காக்கும் அருள் ஞானிகளை உருவாக்குவோம். அருள் வழியில் நாம் வாழ்வோம் பேரின்பம் பெறுவோம்...! என்றும் ஏகாந்த நிலையாக வாழும் அருள் உணர்வை நமக்குள் பெருக்குவோம்.

எமது அருளாசிகள் உங்களுக்குள் என்றும் நிறைந்திருக்கும்…!