ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2018

வியூகத்தைத் தகர்த்து… அதனுள் சென்று… நீ அதுவாகு…! - வியாசகர் சொன்னது…


செடி கொடிகளினுடைய சத்தை எல்லாம் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்திருக்கின்றது.

அந்தச் செடிகளின் வித்தை எடுத்துக் கொண்டு போய் நிலத்தில் ஊன்றினோம் என்றால் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு சூரியன் கவர்ந்து வைத்த அந்த சத்தை எடுத்து அந்தச் செடி செழிப்பாக வளர்கின்றது.

அதைப் போல நாம் நுகர்ந்த உணர்வுகளை எல்லாம் உயிர் என்ன செய்யும்…? உடலுக்குள் அணுக்களாக மாற்றுகின்றது. தீமை செய்வோர் உணர்வை நாம் அறியாமல் நுகர்ந்திருந்தால் அத்தகைய அணுவாக உருவாக்கிவிடுன்றது.

அணுக்களாக மாற்றிய பின் அதனுடைய பசிக்காக உணர்ச்சிகளை உந்தும் பொழுது யார் உடலில் அந்தத் தீயவினைகள் இருந்ததோ அந்த உணர்வுகளைச் சாப்பாடாக உயிர் எடுத்துக் கொடுக்கும். “அது உயிருடைய வேலை…!”

ஆனால் நாம் உயர்ந்த ஞானத்தை நமக்குள் அணுவாக்கி விட்டால் அதற்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினால் அதை வளர்க்கின்றது நமது உயிர்.

அடிக்கடி மகரிஷிகளின் அருள் உணர்வைப் பெறவேண்டும் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வளரும். அது நம்மைப் பாதுகாக்கும்.

நம் வீட்டில் ஆடு மாடு கோழிகளை வளர்க்கின்றோம். பாம்பை என்ன செய்வோம்..? அடித்துத் துரத்துகிறோம். அல்லது கொல்கின்றோம்.

வீட்டில் நாயை வளர்க்கின்றோம் என்றால் பாதுகாப்புக்காகக் கொண்டு வருகின்றோம். அதே மாதிரி நமது நல்ல குணங்களைக் காத்திட அந்தப் பாதுகாப்பான நிலைகளை நாம் கொண்டு வர வேண்டும்.

அதற்குத்தான் உங்களை அடிக்கடி மகரிஷிகளை எண்ணி ஆத்ம சுத்தி செய்யச் சொல்கின்றோம்.

தீமைகள் வந்தால் அடுத்த நிமிடமே கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைப் பெற்று அதைத் தடுத்து அந்தத் தீமைகள் வளராது தடுக்க வேண்டும்.

இரண்யன் என்ன வரம் கேட்கின்றான். எனக்கு எதிலேயும் இறப்பு வரக்கூடாது…! என்று தான் கேட்கின்றான்.

கீதையிலே கண்ணன் என்ன சொல்கிறான்…?
1.எவரும் மடிவதில்லை உணர்வுகள் தான் மாறுகின்றது.
2.உணர்வுக்கொப்ப உடல்கள் தான் மாறுகின்றது.
3.மரணம் என்பதே இல்லை.

எது மடிகின்றது…? ஒரு உருவாக என்று உருவாகியதோ அந்த உருவின் தன்மை தான் மாறுகின்றதே தவிர எதுவும் மடிவதேயில்லை…!

என்றும் நிலைத்திருப்பது மாற்றங்கள் தானே…! இந்தப் பூமிக்குள் வந்துவிட்டால் மாற்றங்கள் தான் ஏற்படுகின்றது.

ஒன்றுக்கொன்று கொன்று விட்டது என்று சொல்கிறோம். ஆனால் கொன்றாலும் அல்லது தின்றாலும் எது எது எப்படி இருக்கின்றது…?

உயிர் என்ன செய்கின்றது…?
1.புல்லைத் தின்று மானை (உடலை) வளர்க்கின்றது
2.அந்தச் சாந்தமான மானை அடக்கி ஒரு புலி அதை உணவாக எடுத்துக் கொள்கின்றது.

புலியின் உயிர் மானை உணவாக உட்கொண்டு அந்த உடலை வளர்க்கின்றது. மானை நீ சாப்பிட்டுக் கொள்…! என்று சொல்கிறது.

ஆனால் மானின் உயிரோ அந்தப் புலியின் வலுவான உணர்வுகளை உணவாக எடுத்து “இதே மாதிரிப் புலியாக.. நீ ஆகு…!” என்று உருவாக்குகின்றது.  ஆக மான் புலியாகின்றது….!

பல மான்களை உணவாக உட்கொண்ட புலியோ காண்டாமிருகமாக அடுத்து உருவாகின்றது.

வியாசகர் வியூகத் தத்துவமாக அதைக் கண்ணன் சொல்வதாகக் மகாபாரதத்தில் காட்டுகின்றார். கண்ணன் என்றால் நம் கண்கள் தான்…!
1.அந்த வியூகத்தைத் தகர்த்து…
2.நீ அதனுள் சென்று…
3.”நீ அதுவாகு…!"

இப்போது நாம் என்ன செய்றோம்…? எனக்கு இப்படித் துன்பம் செய்தான்… துன்பம் செய்தான்…! என்று துன்பம் செய்தவனையே அதிகமாக எண்ணினால் நம் உயிர் அந்த வியூகத்திற்குள் இழுத்துக் கொண்டு போய் விட்டு விடும்.

இந்த உடலில் எந்தத் துன்பத்தை அனுபவித்து இறக்கின்றோமோ அதே உணர்வை அந்த உடலிலும் படச் செய்து வேதனைகள் அதிகமாகி அதற்குத் தகுந்த அடுத்த வியூகமாகி நஞ்சு கொண்ட உடலுக்குள் உயிர் அழைத்துச் சென்று அதன் உருவாக நம்மை மாற்றிவிடும்…!

இதை எல்லாம் நதெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

ஆகவே நம்முடைய வியூகம் எதுவாக இருக்க வேண்டும்…?

1.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும்
2.முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் வாழும் அந்தச் சப்தரிஷி மண்டலத்தின் வியூகத்திற்குள் சென்று
3.“அதுவாக…. நாம் மகரிஷிகளாக மாற வேண்டும்….!”