ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 19, 2018

அகஸ்தியரைப் பற்றி ஆழ்ந்து எண்ணி அவருடைய மூச்சலைகளை நுகர்ந்தால் பச்சிலை மூலிகை மணங்கள் நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்...!


துருவ நட்சத்திரம் பற்றி உங்களிடம் அடிக்கடி சொல்லிப் பதிவு செய்கின்றோம்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நம் பூமியில் வாழ்ந்த அகஸ்தியன் துருவத்தின் ஆற்றலைப் பெற்றவர். இருளை நீக்கி நஞ்சை வென்று மகிழ்ச்சி என்ற உணர்வை எடுத்து ஒளியாக மாறியவர். துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களைச் சொல்லும் போது இப்பொழுது உங்களிடம் என்ன வாசனை வருகின்றது…? என்று பாருங்கள்.

ஒவ்வொருவருக்கும் உங்களுக்குத் தகுந்த மாதிரி
1.பல பல பச்சிலை வாசனைகள் வரும்...!
2.ரோஜாப்பூ வாசனை வரும்...!
3.தீமையை நீக்குகின்ற உடலுக்குள் விஷக் கிருமிகளை நீக்குகின்ற பல தாவர இன மூலிகைகளின் வாசனை வரும்....!

வருகின்றதா...?.

ஏனென்றால் அந்த அகஸ்தியன் உணர்வுகளைச் சொல்லப்படும் போது இங்கே நமக்கு முன்னாடி காற்றில் இருக்கிறது. அந்த உணர்வலைகள் உங்கள் ஈர்ப்புக்குள் (சுவாசத்திற்குள்) வந்து சேர்கிறது.

ஆனால் உங்களால் அந்த மணத்தை அறிய முடியவில்லை என்றாலும் கூட
1.நுகரும் போது உணர்ச்சிகளால் அறிய முடியும்.
2.புது விதமான உணர்ச்சிகள் உங்கள் இரத்தத்தில் கலப்பதும்
3.அந்த ஆற்றல்கள் உடலில் ஊடுருவுவதும் அது தெரியும்.

சிலர் மணத்தால் அறியலாம்.... சிலர் உணர்வால் அறியலாம்.... சிலர் உணர்ச்சியால் அறியலாம்....! அதாவது உணர்ச்சி என்கிற போது உடலுக்குள் அது இயக்கச் சக்தியாக மாறும்.

அப்போது நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுகள் வரும். உங்களுக்குள் அது வந்து சேர்கின்றது. சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகின்றதல்லவா....!

உதாரணமாக நேரம்... காலம்... என்ற நிலையில் ஜாதகக்காரன் ஜோசியக்காரன் சொன்னதை எல்லாம் பதிவு செய்து வைத்துக் கொண்டோம் என்றால் அது நமக்குள் விளைந்து அதுவாகின்றோம்.

தீமைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிய அகஸ்தியரின் உணர்வை நமக்குள் பெற்றால் நாமும் ஞானியாகின்றோம்.

ஆகவே வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் கஷ்டங்களையும் நஷ்டங்களையும் பார்க்கும் போதெல்லாம் ஞானிகளின் உணர்வை நுகர்வதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட வேண்டும்.

மற்றவர்கள் அவர்கள் கஷ்டத்தைச் சொல்கிறார்கள் என்றால் எல்லாம் சொல்லி கேட்டு முடித்தவுடனே “டக்...” என்று புருவ மத்தியில் ஈஸ்வரா... என்று சொல்லி நிறுத்திப் பழக வேண்டும்.

ஆனால் “என்னிடம் கஷ்டத்தைச் சொல்லாதே...!” என்று நாம் சொன்னால் பதிவான வேகத்தைக் கொண்டு
1.பார்...! ஏதோ இப்படிப் பண்ணிக் கொண்டு இருக்கின்றார் என்று நான்கு பேரிடம் சொல்வார்கள்
2.இவரைப் பாருங்கள்... ஏதாவது சொன்னால் ஒன்றுமே கேட்க மாட்டார் என்பார்கள்.
3.ஏன்....? இவருக்கெல்லாம் ஒரு காலத்தில் எந்தக் கஷ்டமும் வராதா..? என்று கூடிப் பேசுவார்கள்.
4.அப்போது கூடிப் பேசும் போது அந்த உணர்வு நம்மைப் பாதிக்கும்.
5.அந்த நான்கு பேருடைய பகைமையை வாங்கினால் நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மாற்றும்.

ஆகையினால் அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்கள் நமக்குள் வராமல் “தடுக்க வேண்டும்....!”

முதலில் துருவ நட்சத்திரத்தை எண்ணி எடுத்து நமக்குள் (மனதிற்குள்) வலுவாக்கிக் கொள்ள வேண்டும். அடுத்து அவர்களைப் பார்த்து
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நீங்கள் பெறுவீர்கள்
2.உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும்.
3.உங்கள் உடம்பு நன்றாக இருக்கும் என்று சொல்ல வேண்டும்.

இப்படி அவர்கள் உணர்வு நமக்குள் வராதபடி இதை மாற்றி அமைத்து நாம் உயர்ந்த சொல்லாகச் சொல்லப்படும் போது நாம் சொல்வது அவர்கள் கஷ்டத்தை நீக்கும் செயலாக இயங்கத் தொடங்கி விடுகின்றது.

இது எல்லாம் நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அருள் நெறிகள். நம்மைக் காக்கின்றோம். மற்றவரையும் காக்கும் சக்தியாக நம் செயல்கள் அமைகின்றது.

ஞானிகள் செயலாக நம் செயல்கள் ஒன்றுபடுகின்றது...!