ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2018

நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு நாம் கொடுக்க வேண்டிய சாப்பாடு எது…?


கோபப்படும் ஒரு மனிதனைப் பார்த்தவுடனே நம் கண்களில் உள்ள கருவிழி ருக்மணி அந்த உணர்வை நம் விலா எலும்புக்குள் பதிவாக்கி விடுகின்றது.

பதிவான பின் நம் கண்ணுடன் சேர்ந்த இன்னொரு சக்தியான “காந்தப்புலன்” சத்தியபாமா அந்த வேதனைப் பட்ட மனிதனின் உடலிலிருந்து வெளிப்பட்ட இயக்க அணுக்களைக் கவர்ந்து அதை இழுத்து நம் ஆன்மாவாக மாற்றுகின்றது.

அப்படி ஆன்மாவாக மாறியதைத்தான் நாம் மூக்கின் வழியாகச் சுவாசிக்கின்றோம். சுவாசித்த அந்தக் கோபமான உணர்வலைகள் புருவ மத்தியிலிருக்கும் நம் உயிரிலே பட்டு அந்த இயக்க அணுக்கள் நம்மை இயக்கத் தொடங்கிவிடுகிறது.

கோபமான உணர்வு உடலுக்குள் சேரும்பொழுது “ஓ...ம் நமச்சிவாய....! கோப உணர்வின் சத்து நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் சேர்ந்து விடுகிறது.

ஒரு நல்ல மணமுள்ள பதார்த்தத்தையோ அல்லது மற்ற எந்த நல்ல சுவையான உணவுப் பொருளாக இருந்தாலும் நீங்கள் நுகர்ந்து பார்த்தால் சந்தோஷமாகின்றது.

அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலக்கும் பொழுது ஆகாரத்தை ஜீரணிக்கக் கூடிய அணுக்கள் சந்தோஷமாக இயக்கும்.

ஆனால் உங்களுக்குப் பிடிக்காததைத் தொடர்ந்து நுகர்ந்தீர்கள் என்றால் உடனே வாயில் உமிழ் நீர் சுவை மாறி “என்னமோ போல் இருக்கிறது என்பீர்கள்…! அடுத்து வாந்தியே வந்துவிடும்.

கசப்பான மணத்தைச் சுவாசிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அது “ஓ...ய்..! என்று இயக்கப்படும் போது இந்த உணர்வு உமிழ் நீராகி ஆகாரத்தை ஜீரணிக்கும் போது இனம் புரியாமல் வாந்தி வரும். நமக்கு ஒவ்வாத நிலையாக இயக்கும்.

அதாவது கசப்பான அந்த இயக்க அணுக்கள் நமக்குள் வந்தவுடனே உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலக்கும் பொழுது நல்ல முறையில் ஜீரணிக்கக்கூடிய அணுக்கள் மயக்கமடைந்து விடுகிறது.

அப்பொழுது நாம் சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டிருந்தாலும் கூட அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி இழக்கும். ஜீரணிக்கக்கூடிய சக்தி இழந்தவுடனே சாப்பிட்ட ஆகாரமும் கெட்டதாக மாறும்.

பாலில் பாதாமைப் போட்டு ஒரு துளி விஷத்தைப் போட்டு அதை நாம் சாப்பிடுகிறோம் என்றால் என்ன ஆகும்...? பாதாமில் சத்து இருக்கிறது. ஆனால் அதற்குள் விஷம் கலந்திருக்கிறது என்றால் நம்மிடம் இருக்கும் எல்லா நல்ல சத்தையும் கொண்டு போய்விடுகிறது. மயக்கம் அடைந்துவிடுகின்றோம்.

1.பாதாம் மிகவும் நல்லது என்று நாம் நினைத்துச் சாப்பிட்டாலும்
2.அந்த விஷத்தை நுகர்ந்து அதைத் தெரிந்த பிற்பாடு விலகிவிட்டோம் என்றால் ஒன்றுமில்லை.
3.ஆனால் அப்படியே போட்டு முழுங்கி விட்டோம் என்றால் உடனே அதனுடைய வேலையைச் செய்ய ஆரம்பித்துவிடும் அல்லவா...!

இதைப்போல தான் நாம் வேதனைப்படுவோர் உணர்வுகளையோ கொதிப்படைவோரின் உணர்வுகளையோ நுகரப்படப் போகும் போது வேதனை எரிச்சல் என்ற உணர்வுகள் உமிழ் நீராகி நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

 இப்படிக் கலந்து வரும் உணர்வுகளால் ஆகாரத்தை ஜீரணிக்கும் அணுக்கள் மயக்கப்பட்டுத் தன் ஜீரணிக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அந்த விஷத்தின் தன்மை கொண்டு அது இயக்க ஆரம்பிக்கும் போது அதே இயக்க அணுக்கள் இரத்தத்தில் கலந்தபின் அதனின் இயக்கமாக “கருத்தன்மை” (முட்டையாக) அடைந்து விடுகின்றது.

அதாவது நம் உயிர் இருக்கின்ற பாகம் எல்லாவற்றையும் இயக்கும் இடம் ஈஸ்வரலோகம். நாம் சுவாசித்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து அது அணுவாக உருவாகும் போது இந்திரலோகம். ஏனென்றால் இரத்தத்தில் கருவாக உருவாகும் நிலையை அது காரணப்பெயர் வைத்து இந்திரீகம் இந்திரலோகமாகக் காட்டுகின்றார்கள்.

கோபமோ வேதனையோ அது எந்த உணர்வை நுகர்கின்றோமோ அதை உருவாக்கும் தன்மை பெறுகின்றது. உருவாக்கும் தன்மை பெறப்படும் போது அத்தகைய அணுக்கள் நிறையப் பெருகி உடல் முழுவதற்கும் அந்த இரத்தம் சுற்றுகின்றது.

அந்த இரத்தத்தைக் குடித்துத்தான் நம் உடலிலுள்ள அணுக்கள் எல்லாமே வளர்கின்றது. நாம் சாப்பாடாகச் சாப்பிட்டாலும் அந்தச் சாப்பாடு நேராக நம் அணுக்களுக்குக் கிடைப்பதில்லை. அப்பொழுது…
1.நம் உடலை உருவாக்கிய நல்ல அணுக்களுக்கு
2.எரிச்சலான (கோபம்) உணர்வின் சத்துகளும்
3.விஷமான (வேதனை) உணர்வின் சத்துகளும் உணவாகச் சேரும் பொழுது
4.அந்த அணுக்கள் சோர்வடைந்து உடலில் இனம் புரியாத வலிகள் தோன்றுகிறது.

இதை மாற்ற என்ன வைத்திருக்கின்றோம்…? இரத்தத்தில் கலந்து செல்லும் அந்தத் தீமையான உணர்வின் சத்துகளை அகற்றி நம் இரத்தத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும் அல்லவா…!

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலந்து அதிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று
1.கண்ணின் நினைவு கொண்டு உடல் முழுவதும் சுழலச் செய்ய வேண்டும். (CIRCULATION).
2.இவ்வாறு ஐந்து அல்லது ஆறு முறை உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதிலும்
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் படரச் செய்ய வேண்டும்.
4.அதாவது ஒரு நிமிடத்திற்குள் எடுத்து இரத்தத்திற்குள் கலக்கச் செய்யும் பழக்கம் வர வேண்டும்.

பின் எந்தக் காரியம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதை வலுவாக எண்ணிச் செயல்படுத்த வேண்டும். எப்பொழுதெல்லாம் நாம் தீமைகளைச் சந்திக்கின்றோமோ அல்லது நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்பொழுதெல்லாம் இவ்வாறு ஆத்ம சுத்தி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

தீமைகளை அகற்றும் உபாயங்களும் நோய்களை நீக்கும் வழிமுறைகளும் சிந்தித்துச் செயல்படும் ஞானமும் உங்களுக்குள் தோன்றி நல்வழியில் அது உங்களை வழி நடத்தும்.

செய்து பாருங்கள்…!