ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 27, 2018

வான்மீகி போதித்த "லவா குசா” யார்...?

விஞ்ஞான அழிவிலிருந்து மீட்டிடும் நிலையாக கருவில் வளரும் சிசுக்களுக்கு அருள் ஞானத்தை ஊட்டி உலக ஞானம் பெறச் செய்ய வேண்டும்.

வான்மீகி ஆசிரமத்தில் சீதா கருவுற்றிருக்கும் பொழுது கருவிலிருக்கும் குழந்தைகளுக்கு வான்மீகி ஓதிய உணர்வுகள் சீதாவின் கருவில் வளரத் தொடங்குகிறது.

இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக நிலைகளையும் இந்த உலகிற்கே எடுத்துச் சொல்லக்கூடிய நிலைகள் அந்தக் குழந்தைகளுக்கு  வந்தது.

இதைப் போல நம் குடும்பத்தில் வரும் அறியாத நிலையும் உலகத்தில் வரும் தீமைகளிலிருந்து மீட்டிடும் அருள் ஞானிகளை நாமும் உருவாக்கிடல் வேண்டும்.

விஞ்ஞானத்தை வெல்லும் மெய்ஞானத்தை உருவாக்கச் செய்யும் அருள் ஞானிகளை உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மறைவில் தான் நாமும் வாழ முடியும்.

கருவில் வளரும் சிசுக்களில் இந்த ஞானத்தை வளர்த்துவிட்டால் பேரருளைப் பெறும் ஞானிகளாக அவர்கள் வளரத் தொடங்குவார்கள்.

சீதா பல துன்பங்களை அனுபவித்தாலும் அன்று வான்மீகி இராமனைப் பற்றிய உண்மைகளையும் உலக ஞானத்தையும் சீதாவின் கருவில் வளரும் சிசுக்களுக்கு எடுத்து ஓதினார்.

1.உலகைக் காத்திடும் தன்மையாக ஞானத்தைப் பெறும்படி செய்து
2.ஞானத்தின் உணர்வின் தன்மையைப் போதித்த நிலைகள்
3.அங்கே உருப்பெற்றது தான் லவா குசா என்று உணர்த்தினார்.
4.விஷ்ணுவிடம் சொர்க்கமடைய அதாவது உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறும் மார்க்கத்தைக் காட்டினார் வான்மீகி.

இன்றும்,” உலகில் பரவிக் கொண்டிருக்கும் அந்த “மெய்ஞானியின் உணர்வுகள் – லவா குசா தனக்குள் எடுத்து அந்த அருள் ஒளியை நமக்குள் வளர்க்க வேண்டும் என்று உணர்த்தினார்.

இருளை அகற்றிய அருள் உணர்வை நமக்குள் சேர்ப்பிக்கும் சக்தியின் தன்மையைத் தான் அன்று வான்மீகி காவியமாகப் படைத்துள்ளார்.

1.மனிதன் எப்படி வாழ வேண்டும்?
2.உணர்வுகளும் எண்ணங்களும் எப்படி வருகின்றது?
3.நாம் நுகரும் (குணங்கள்) சுவையின் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் நம்மை இயக்குகின்றது? என்ற உண்மைகளைக் காவியமாகக் காட்டினார்.

ஆகவே, நம் உயிரின் இயக்கமும் உடலின் தன்மையும் “கடைசி நிலை என்ன?” என்பதை இராமாயணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் வழி நாம் வாழ்வோம்.

நம்முடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற நம் மூதாதையர்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்வோம்.

அவர்கள் மீண்டும் ஒரு உடல் பெறும் நிலையை மாற்றி பேரொளி என்ற நிலையை அடையச் செய்வோம்.

அவர்கள் முன் சென்றால் நம் வாழ்க்கையில் அவர்கள் பெற்ற அந்தப் பேரருள் உணர்வை நாம் எடுத்து நாமும் அடுத்துப் பிறவியில்லா நிலை அடைவோம்.


அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற தியானிப்போம். தவமிருப்போம்.