ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2017

மகரிஷிகளுடன் எப்படித் தொடர்பு கொள்வது...?

மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டிய முறையைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

கண்களின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பூமியின் வட கிழக்குப் பகுதியில் நினைவினை விண்ணிலே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியின் வழியாக ஏங்கிச் சுவாசிக்க வேண்டும்.

“கிரகணம்” பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்து முழுவதும் மறைத்தால் அந்த நேரத்தில் சூரியனின் சக்தி முழுவதும் தடைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் சந்திரனுக்கோ பூமிக்கு வந்து சேரும் சூரியனின் அனைத்து சக்திகளையும் பெற அந்தச் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது.

அதே சமயத்தில் பூமிக்கோ சூரியனின் சக்திக்குப் பதிலாகச் சந்திரனின் சக்தியை நுகர வேண்டிய கட்டாயமாகின்றது.

ஏனென்றால் இவை ஒரே நேர்கோட்டில் வருவதால் இத்தகைய நிலை ஏற்படுகின்றது. அதிக பலன் இதிலே சந்திரனுக்குத்தான்.

இதைப் போன்று தான் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வலைகள் வெளி வரும்போது அதை நாம் இடைவெளியில் “கிரகணம்” போன்று பிடிக்க வேண்டும்.

இதைத்தான் தடுத்து நிறுத்துவது என்பது. அப்பொழுது நம் ஆன்மாவில் உள்ள மற்ற உணர்வலைகளுக்கு ஆகாரம் கிடைக்காது துருவ நட்சத்திர உணர்வே ஆகாரம் ஆகின்றது.

ஆகவே இவ்வாறு தடுத்து நிறுத்தும்போது… தியானத்தில் சிலர் எனக்கு..
1.ஒளி அலைகள் தெரிந்தது
2.வெளிச்சமாக இருந்தது
3.புருவ மத்தியில் குறு..குறு.. என்று இருந்தது
4.சூடாகித் தலை பாரமானது
5.மிதப்பது போல் இருந்தது
6.நல்ல நறுமணங்கள் வந்தது
7.உமிழ் நீர் சுவையாகச் சுரந்தது
8.இனம் புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றெல்லாம் சொல்வார்கள்.

அதே போன்று மாறுபட்ட எண்ணம் கொண்ட சிலருக்கு
1.தொண்டை கர.. கர.. என்று ஆகிவிட்டது
2.சிந்தனைகள் ஒரு நிலைப்படுத்த முடியாமல் கட கட என்று எங்கெங்கோ செல்கிறது
3.என்னை உட்காரவே விட மாட்டேன் என்கிறது என்றெல்லாம் சொல்வார்கள்.

தடுக்கவும் இல்லை… நிறுத்தவும் இல்லை… என்பவர்களுக்கு – ஒரே வார்த்தையில் “அமைதியாக நன்றாக இருந்தது” என்று சொல்லிவிடுவார்கள்.

தன் ஆன்மாவில் உள்ளது மீண்டும் மீண்டும் சர்க்குலேசன் ஆகிக் கொண்டேயிருப்பதால் இவ்வாறு சொல்வார்கள்.

ஆகவே நாம் துருவ நட்சத்துரத்துடன் மோதியே ஆகவேண்டும். அதைத் தடுத்து நிறுத்தினால் தான் அது நமக்குள் வரும். உணர முடியும்.

ஆனாலும் அந்த மகரிஷிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் மேலே சொன்ன (நல்லது 8 & கெட்டது 3) அந்த அத்தனை உணர்வலைகளையும் மறுபடியும் தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வேண்டும்.

1.“விசாரணை” என்பது தனக்குத் தானே கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி தானே உணர்தல் என்று பொருள்.

2.“கேள்வி எழுப்புதல்” என்றால் புருவ மத்தியில் உயிரின் தொடர்பு கொண்டு குரு உபதேசித்ததை (குருவை) எண்ணி மறுபடியும் துருவ நட்சத்திரத்துடன் 1, 10, 100, 100000 கோடி கோடி என்று மோதிக் கொண்டேயிருந்தால் உணர முடியும்.

3.“உணர்தல்” என்பது ஒரு வருடத்திலோ ஒரு மாதத்திலோ ஒரே நாளிலோ ஒரு நிமிடத்திலோ வரும். அதனின் வளர்ச்சி ஆக ஆக கணப்பொழுதில் (சுவிட்சைப் போட்டவுடன் லைட் எரிவது போல்) உணர முடியும்.

இந்த உணர்தல் வந்துவிட்டால் நாம் உணர்வது அனைத்துமே அல்லது அப்பொழுது நாம் “மகரிஷிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றோம்” என்று அர்த்தம்.

நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய நிலைகளாக இருந்தாலும் கண்ணின் நினைவினைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பால் நம் நினைவினைச் செலுத்தி அதை அறிய வேண்டும் உணர வேண்டும் என்ற எண்ணத்துடன் கேள்வி எழுப்பினால் அங்கிருந்து வரும் உணர்வலைகள் நமக்குள் உண்மையைத் தெளிவாக உணர்த்தும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.