ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2017

“சந்தர்ப்பம்தான்…” எல்லாவற்றுக்கும் காரணம் – ஆனாலும் சந்தர்ப்பங்களையே நல்லதாக மாற்றியமைக்கும் சக்தி “நமக்கு உண்டு”

ஒரு தாய் கருவுற்ற தாயைத் தேள் கொட்டிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். மருந்து போட்டு தாய் தப்பித்துக் கொள்கின்றது. ஆனால் கருவில் வளர்ந்த அந்தக் குழந்தை பிறந்த பின்பு
1.தேள் அவனைக்  கொட்டினால்
2.தேளின் விஷம் அவனை ஒன்றும் செய்யாது.

இதே மாதிரிக் கருவிலே இருக்கும் போது ஒரு  தேனீ கொட்டினால்  இந்தக் குழந்தை தேனீயைப்  பிடித்தானென்றால்   அவனைக் கொட்டாது. இதைப் போல
1.கருவுக்குள் (சிசு) உணரும் உணர்வுகள் அதன்  வழி கொண்டு
2.இங்கே  சந்தர்ப்பத்தால் இத்தகைய தன்மை பெறுகின்றது.

இப்போது இங்கே மெய் ஞானிகளைப் பற்றிப் பேசுகின்றோம்.  ஒரு கருவுற்ற தாய் இதைக் காதில் கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
இந்த ஞானத்தைப் பேசும் போது
1.அது தாயின் உணர்வுக்குள் பதிவாகின்றது.
2.ஞானிகளின் உணர்வுகளை நுகர்கின்றது.
3.கருவுக்குள் இருக்கும் சிசுவும் ஞானிகளின் உணர்வைப் பெறுகின்றது.
4.அந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடைகின்றது.

எதனின்  தன்மை அங்கு உருவாகின்றதோ அந்தக் குழந்தை பிறந்தபின் இந்தத் தத்துவத்தைப் பெறும் சக்தி பெறுகின்றது.

ஆகவே கருவுற்ற தாய்மார்கள் தீமைகளை அகற்றிவிட்டு உண்மையின் உணர்வைப் பேசும்  அருள் ஞானிகளின் உணர்வை நுகரப் பழகிக் கொள்ளுங்கள்.

கருவுற்ற காலங்களில் அருள் உணர்வுகளை நுகர்தறிந்தால் அந்த உணர்வின் கருவே  சிசுக்களுக்குத் தீமையை அகற்றும் வல்லமை கிடைக்கின்றது.

அந்தக் குழந்தை பிறந்தபின் உங்கள் துன்பத்தைப் போக்கும். நீங்கள் பேரின்பத்தைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

பல இன்னல்கள் பட்ட குடும்பங்களில் பார்தோம் என்றால் அந்தக் குடும்பங்களில் ரொம்பத் தரித்திரத்திலும்  சிரமத்திலும் இருப்பார்கள்.

பல நோய்வாய்ப்பட்டுப் பல இன்னல்கள் கொண்டு பல தரித்திரத்தில் வாழப்படும் போது  இதையெல்லாம்  மறந்துவிட்டு கருவுற்ற தாய்
1.தான் “என்றைக்கு நல்லதைப் பெறப் போகிறோம்… என்று ஏங்கித் தவிக்கின்றதோ”
2.அந்தச் சிரமமான காலங்களில் தாய் தான்  எப்படியும் மீளவேண்டும் என்ற உணர்வினை அது  சிந்தித்து
3.ஞானிகளையோ தன்னைக் காக்கும் உணர்வு கொண்ட  ஞானத்தின் உணர்வுகளை நுகர்ந்தது என்றால்
4.அந்தக் கருவில் வளரும் குழந்தைக்கும் அந்த நிலைகள் பெற்று
5.அது பிறந்தபின் பெரிய கலெக்டர் ஆகின்றான் அல்லது
6.பெரிய தத்துவ ஞானியாக உலகம் போற்றும் நிலைக்கு வருகின்றான்.

அவனுடைய சந்தர்ப்பம் தரித்திரத்தில் வாழ்ந்தாலும் தாய் பல சிரமங்களிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வை அது நுகர்ந்ததால் அந்தக் குழந்தை அத்தகைய நிலை பெறுகின்றது.

சில குடும்பங்களில் படிப்பதற்கே வசதி இல்லை என்றாலும் அவன் ஞானத்தின் நிலை கொண்டு அதீத  வளர்ச்சி அடைந்திருப்பதை நாம் பார்க்கலாம். இதைப் போன்ற நிலைகள்
1.”அத்தகைய சந்தர்ப்பங்கள் தான்”
2.அந்த நேரத்தில் நாம் “நுகரும் உணர்வுகள்” தான்
3.நம்மை உருமாற்றுகின்றது  வாழ வைக்கின்றது.

ஆனாலும்
1.அருள் மகரிஷியின் உணர்வு கொண்டு
2.நாம் எந்தச் சந்தர்ப்பத்தையும் உருமாற்றக் கூடிய சக்தி பெற்றவர்கள் என்பதை
3.உணர்தல் வேண்டும்.

சந்தர்ப்பத்தால் பகைமை கொண்ட உணர்வுகளையோ நோய்வாய்ப்படும்  உணர்வுகளையோ தீமை செய்யும் உணர்வுகளையோ நுகர்ந்து விட்டால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கணமே அருள் ஞானிகளின் உணர்வை நாம் நுகர்ந்து அந்தச் சந்தர்ப்பத்தால் வந்த தீமைகளை அகற்றிடல் வேண்டும். ஏனென்றால் ஆறாவது அறிவு கொண்ட நாம் நல்லதை உருவாக்கும் பண்பு பெற்றவர்கள் என்று உணர்தல் வேண்டும்.
1.நாம் இதைச் செய்ய தொடங்கினால்
2.நமக்குள் தீமைகள் வராது தடுக்கலாம்.
3.இதைத்தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது.

அதே சமயத்தில் உங்களுக்குள் உபதேசத்தின் உணர்வின் நினைவுகள் பதிவானால்தான் அது செயல் முறைக்கு வரும்.

டாக்டருக்குப் பயிற்சிக்குச் செல்பவர்கள் மற்ற கற்றுணர்ந்த டாக்டர்கள் சொல்லும் கருத்துக்களைப் பின்பற்றி அதன் வழி பெறவேண்டும் என்ற அந்த ஞானத்தைச் செலுத்தினால் உயர்ந்த டாக்டர் ஆகின்றார்.

ஆனால் பயிற்சி செய்யும் நேரத்தில் சிந்தனை இழந்திருந்தால் அவர் டாக்டர் ஆவதற்குப் பதில் சோர்வின் தன்மை அடைந்து அவர் வைத்தியம் பார்த்தாலும் அதனால்  பிறருக்குத் தீமையே உருவாகும்.

கல்வி கற்கும் நிலையும் இதே போலத்தான்.  எதைப் பெறவேண்டும் என்று குறிக்கோள் வைத்துச் செலுத்துகின்றோமோ  அதன் வழி அங்கே வழி செய்கின்றது.

ஆகவே உங்கள் வாழ்க்கையில் அருள் ஞானத்தின் உணர்வைப் பதிவாக்கப்படும் போது
1.அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் உங்களை வாழவைக்கும்
2.தீமைகளிலிருந்து விடுபடச் செய்யும்
3.பொருளறிந்து செயல்படும் சக்தியும் நீங்கள் பெறமுடியும்.
4.பேரின்பத்தை இந்த வாழ்க்கையில் நீங்கள்  பெறமுடியும்.

இன்றைய விஞ்ஞான உலகில்  அஞ்ஞான வாழ்க்கை  வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் மெய்ஞான உணர்வை நமக்குள் வளர்த்துத் தீமைகளை அகற்றி நமக்குள் தெளிந்திடும் மனம் பெறும் அந்தச் சக்தி பெறவேண்டும்.

நம் பேச்சும் மூச்சும் இந்தக் காற்று மண்டலத்தில் பரவியுள்ள நச்சுத் தன்மைகளை அகற்றிடும் சக்தியாகப் படரவேண்டும். எமது அருளாசிகள்.