ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 23, 2017

100 மணி நேரம் நல்லது செய்தாலும் 100 தரம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி வேதனைப்படும் உணர்வை நுகர்ந்தால் அது தான் நம்மை இயக்குகின்றது – அதைத் தூய்மைப்படுத்தும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்

இப்போது ஒரு வேதனைப்படுவோரின் உணர்வை நாம் நுகர்ந்தால் எவை இயக்குகின்றது?

உற்றுப் பார்த்த உணர்வுகள் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் வேதனை உணர்ச்சிகளைத் தூண்டி நமது உடலையும் வலு இழக்கச் செய்கின்றது.

ஆகவே நாம் நுகர்ந்த உணர்வே நம்மை இயக்குகின்றது. அதன் வழி அன்றைய வாழ்க்கையும் அமைகின்றது.

ஒரு குடம் பாலில் நீங்கள் பாதாமைப் போட்டாலும் அதைக் காட்டிலும் பல உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும்
1,ஒரு துளி விஷம் பட்டால்
2.பால் அனைத்தும் நஞ்சாகி விடுகின்றது.

1.அதில் ஆயிரம் குடம் பாலை விட்டால்
2.நஞ்சின் தன்மை சிறுத்துப் பாலின் தன்மை வீரியத்தன்மை அடைகின்றது.

ஒரு சமயம் 100 தரம் நாம் நல்லதைச் செய்தாலும் ஒரு நொடி அந்த வேதனை என்ற உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனை தான் நம்மை இயக்குகின்றது.

100 மணி நேரம் நாம் நல்லதை நுகர்ந்தாலும் அந்த 100 மணி நேரமும் நல்லவைகளை உருவாக்குகின்றது நமது உயிர்.
1.ஆனால் ஒரு நொடி வேதனை என்ற உணர்வை நுகரப்படும்போது
2.அது நம் நல்ல குணங்கள் அனைத்தையும் செயலற்றதாக மாற்றி விடுகின்றது.

இது இயற்கையின் நியதிகள். இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பண்புடன் அன்புடன் பரிவுடன் நாம் நடந்தாலும் சந்தர்ப்பத்தால் நாம் நுகர நேரும் அந்தத் தீமையான உணர்வுகளை அகற்றியே ஆக வேண்டும்.

அன்றாடம் உடலையும் உடைமைகளையும் நாம் எப்படித்தான் தூய்மைபடுத்தினாலும் அழுக்குப்படியத்தான் செய்யும். அதைத் தூய்மையாக்கவில்லை என்றால் அழுக்குகள் கூடிவிடும்.

அதற்குத்தக்க நமக்குக் கெடுதலும் ஏற்படும்.

அதைப் போன்று தான் நாம் அவ்வப்போது நம் மனதைத் தூய்மைப்படுத்த வேண்டும். மனதைத் தூய்மை செய்தால்
1.நம் உடலிலுள்ள அணுத் தன்மைகள் தூய்மை ஆகும்.
2.நம் உணர்வுகள் தூய்மை ஆகும்.
3.நம்முடைய எண்ணங்கள் தூய்மை ஆகும்.

இப்படி அடிக்கடி நாம் தூய்மைப்படுத்தும் உணர்வினை நுகர்தல் வேண்டும்.

அதற்காகத்தான் உங்களுக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி சொல்லி அதை வலுவாக உங்களுக்குள் நினைவு படுத்திக் கொண்டே வருகின்றோம்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அதைத் தூய்மைப்படுத்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை மறவாது எடுத்துப் பழகுங்கள். உங்கள் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

சிறிது நாள் எடுத்துப் பழகிக் கொண்டீர்கள் என்றால் தன்னிச்சையாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைக் கவரும் பழக்கம் வந்துவிடும்.