ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 9, 2017

“உயிரின் இயக்க நிலைகளையும்… கண்களின் இயக்க நிலைகளையும்…” பற்றி ஞானிகள் காவியங்களில் நமக்கு உணர்த்தியது என்ன?

1.ஆண்டவன் எங்கோ இருக்கின்றான்
2.இறைவன் எங்கோ இருக்கின்றான்
3.தெய்வங்கள் எங்கோ இருக்கின்றது என்று தான்
இன்றும் நாம் தேடிக் கொண்டேயுள்ளோம்.

ஆனால்
1.நாம் எண்ணிய உயர்ந்த குணங்கள் தான் நமக்குள் தெய்வமாக இருந்து
2.உயர்ந்த குணங்களை எண்ணியதை நம் உயிர் ஆள்கின்றது
3.அந்த நல்ல வழியில் நம்மை இயக்குகின்றது என்பதை
நாம் மறந்துவிட்டோம்.

நாம் எதையெல்லாம் அந்த நல்லதை எண்ணுகின்றோமோ அதன் வழி கொண்டு நமக்குள் இருக்கும் கண்கள் அந்த நல்ல வழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

இதை மகாபாரதத்தில் கண்ணன் (கண்கள்) கீதா உபதேசம் செய்கிறான் என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

ஒவ்வொரு நிலையிலும் உலகிலுள்ள உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் அடக்கி மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவது கண்களே.

நாம் எதை எண்ணுகின்றோமோ அவை அனைத்திற்கும் கண்களே தான் காரணமாக இருக்கின்றது
1.கண்களே தான் கெட்டதைக் காட்டுகின்றது
2.அந்த உணர்வைப் பதிவு செய்வதும் கண்கள் தான்.
3.மீண்டும் நினைவு கொள்ளும் பொழுது அதே கண் தான் அந்த வழியைக் காட்டுகின்றது.

பார்த்த உணர்வுகள் கொண்டு ஒவ்வொரு உறுப்புகளும் எவ்வாறு இயங்குகின்றது என்ற நிலையைத் தெளிவுறக் காட்டுவற்காக வேண்டி மகாபாரதப் போர் என்று காவியமாக உருவாக்கினார்கள்.

அதில் நடு மையமாக கீதை என்ற நிலையை வைத்துக் கண்ணன் “சாரதியாக வந்து” வழி நடத்துகின்றான் என்றும் “குருக்ஷேத்திரப் போர்” என்றும் எத்தனையோ வகைகளில் நாம் தெளிவாகத் தெரிந்திட நாம் புரிந்து கொள்ளும் வண்ணம் மாமகரிஷிகள் காட்டியுள்ளார்கள்.

ஆனால் மகரிஷிகள் காட்டியதை காலத்தால் படித்துணர்ந்தவர்கள் அவரவர் சுயநலன்களுக்காகத் திசை திருப்பிவிட்டு விட்டார்கள்.

தான் எல்லாவற்றையும் கற்றுக் கொண்ட பெரிய மகான் என்ற நிலைகள் கொண்டு அவரைக் கண்டு நாம் வணங்கும் நிலையும் அவருக்குப் பொருள்களைக் கொண்டு குவிக்கும் நிலை தான் இன்று உள்ளது.

உண்மையின் நிலைகள் மறைந்து விட்டது. மறைந்த நிலைகள் கொண்டு தான் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதிலிருந்து விடுபட்டு இந்த விஞ்ஞான உலகால் மனிதனின் நினைவு அழிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் நாம் அனைவரும் இதைப் போன்ற மகரிஷிகள் காட்டிய அருள் நெறிகளை நாம் பின்பற்றி அதனின் சக்தியைப் பெறுவோம்.

நமது குருநாதரோ பித்தரைப் போன்று மிகவும் எளிய நிலையில் அவர் சாக்கடையிலும் மற்ற அதைப் போன்ற இடங்களிலும் தான் அமர்ந்திருந்தார்.

அந்தச் சாக்கடையைச் சாக்கடை என்று எண்ணவில்லை. உலகத்தைச் சாக்கடையாகக் கருதினார்.
1.அந்தச் சாக்கடையிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று
2.அருள் ஞானிகளின் உணர்வின் சத்தைத்தான் அவர் நுகர்ந்து கொண்டிருந்தார்.

தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வின் தன்மையை நீ உலகுக்கு எவ்வாறு காட்ட வேண்டும் என்ற நிலையை எனக்கு உணர்த்துவதற்காக என்னைச் சாக்கடையில் அமரச் செய்தார்.

மகரிஷிகள் கண்டுணர்ந்த உண்மைகளை எனக்குச் சாக்கடை உபதேசமாகக் கொடுத்துத் தீமைகளிலிருந்து விடுபடும் நிலையைத் தெளிவாக உணர்த்தினார் பித்தரைப் போன்று திரிந்த குருநாதர்.

எனக்குக் கல்வியறிவு இல்லை என்றாலும் இந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையும் அது அவர் உணர்த்திய உபதேசத்தின் அருள் வழியில் அவர் காட்டிய நெறிப்படி அதை நான் கவர முடிந்தது.

எனக்குள் அந்த மெய்ஞானத்தை வளர்த்துக் கொண்டேன்.

தீமைகள் வராதபடி காத்திடும் நிலையாக அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அவர் உபதேசித்தார். அந்த அருள் வழிப்படித்தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

ஆகையினால்
1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் உணர்த்திய அந்த அருள் வழிப்படி
2.இதை ஒவ்வொருவரும் நாம் பின்பற்றுவோம்
3.விஞ்ஞான உலகின் தீமைகளிலிருந்து விடுபடுவோம்
4.இந்த மனித உடலிலேயே முழுமையான நிலைகள் அடைவோம்
5.உலகைக் காத்திடும் ஞானிகளாக உருவாவோம்.