ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2017

தியானம் என்றால் பெரிய மலை போல நினைக்கின்றோம்...! அப்படி அல்ல...!

உதாரணமாக சண்டை போடுபவர்களுக்குச் சந்தோசமாக இருப்பவர்களைப் பார்த்தால் வெறுப்பின் நிலை வளரும். ஒருவர் சந்தோசமாக இருப்பவரைப் பார்த்தால்
1.ஏதாவது அவருக்குக் கெடுதல் செய்து கொண்டே இருப்பார்கள்.
2.வேண்டாததைச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.
3.ஏனென்றால் அதனால் அவர்கள் சந்தோசப்படுகிறார்கள்.

நீங்கள் துன்பப்படுவதைப் பார்த்து அவர்கள் ஆனந்தப்படுவார்கள். இப்படிப் பல பேர் இருக்கிறார்கள். ஒருவர் துன்பப்பட்டால் போதும் அவர்களை அறியாமலேயே அந்த மகிழ்ச்சி இருந்து கொண்டேயிருக்கும்.

ஏனென்றால் இதைப் போன்ற உணர்வின் தன்மையினுடைய நிலைகள் அதற்குத்தக்க நிலைகளைப் பார்த்தால்தான் அவர்களுக்கு ஆற்றல் கொடுக்கும்.

இரண்டு பேர் சண்டை போடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். சண்டை போடும்பொழுது
1.“இப்படித் தொலைந்து போ அப்படித் தொலைந்து போ” என்று
2.ஒருவருக்கொருவர் விளைய வைத்திருக்கிறோம்.

அவ்வாறு ஒருவர் பல இடைஞ்சல்கள் பட்டு அவஸ்தைப்பட்டதைப் பார்த்தார்கள் என்றால்… அவருக்கு மகிழ்ச்சி தன்னாலே வரும்.

ஏனென்றால் அவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து மகிழ்ச்சி வருகிறது. இதைப் போல இவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதைப் போன்று
1.நாம் எந்த உணர்வை “ஏற்றுக் கொள்கிறோமோ”
2.அதற்கு அது மகிழ்ச்சி ஊட்டுகின்றது.
3.இதைப் போன்றுதான் “உணர்வின் செயலாக்கங்கள்”.

இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பக்தி என்ற நிலைகளில் ஆராதனை செய்துகொண்டு “சாமி செய்யும்… என்றால் ஒன்றும் செய்யாது”.

சாமி செய்யும் என்ற நல்ல எண்ணத்தை
1.நாம் வேதனையுடன் கலந்து ஜெபித்தால்
2.அந்த வேதனை கலந்து நல்ல குணமும் சேர்ந்து உங்களுக்குள் வேதனையைத்தான் ஊட்டும்.
3.கடைசியிலே அந்தத் தெய்வத்தை நினைக்கும் பொழுதெல்லாம்
4.வேதனையைத்தான் நினைக்கத் தோன்றும்.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளைத்தான் தெய்வமாக உணர்த்தப்பட்டு அதை முன்னிறுத்தி இந்தக் குணம் உங்களுக்கு இன்னது செய்யும். இந்தக் குணம் நம் உடலிலே இருக்கிறது என்று காட்டினார்கள்.

1.உடலிலே இருக்கக்கூடிய அவற்றின் இயக்கச் சக்திகளை
2.அதற்குப் பெயர்களை வைத்து
3.உருவத்தைக் (தெய்வ உருவங்களாக) காட்டி
4.அதன் செயலாக்கங்களாக கதைகளாகச் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால் நாம் ஆராதனை செய்துவிட்டுச் “சாமி செய்யும்” என்றால் எப்படிச் செய்யும்?

தியானம் என்றால் என்னமோ “பெரிய மலை” என்று எண்ணுகிறோம். நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது.
1.திரும்பத் திரும்ப நினைத்து
2.அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெறுகின்றோம்.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்குக் குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். தீமைகள் எப்படி வருகிறது? தீமைகளை நீக்கும் வழி என்ன? என்று அனுபவபூர்வமாக என் உடலுக்குள்ளேயே நடத்திக் காட்டினார்.

1.மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று
2.உனக்குள் அதை வளர்த்துக் கொண்டால்
3.தீமைகளை அகற்ற முடியும் என்று சொன்னார்.

அவர் காட்டிய அருள் வழியில் மகரிஷிகளின் அருள் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.

அப்படி யாம் வளர்த்த சக்தியைச் சொல்லாலே பேச்சாலே இந்த உணர்வாலே கொடுத்து உங்களுக்குள் நீங்களும் வளர்த்துக் கொள்ள வழி சொல்லித் தருகிறோம். அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம்.

இதுதான் “தியானம்” என்பதின் நிலைகள்.