ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2017

குருநாதர் தன் கை கால்களில் கிழிந்த துணிகளைக் கட்டுவார் அது போல் செடி கொடி மரங்களிலும் துணிகளைக் கட்டுவார் – அதனுடைய சூட்சமும் மெய் ஞானத்தை உணர்த்தும் அவருடைய பரிபாஷையும்

நாம் எதையெல்லாம் பார்க்கின்றோமோ எதையெல்லாம் கேட்கின்றோமோ எதையெல்லாம் நினைக்கின்றோமோ இவை அனைத்தையும் நாம் நுகர (சுவாசிக்க) நேருகின்றது.

நுகர்ந்த உணர்வுகள் அனைத்தையும் “ஓ...” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்...” என்று நம் உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.

இப்போது இங்கே உபதேசிக்கும் உணர்வுகளை எண்ணி அதைப் பெறவேண்டும் என்று ஏங்கினால் அந்த உணர்வுகளை உயிர் “ஓ...ம் நமச்சிவாய...” என்று உடலாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அகஸ்தியன் வாழ்க்கையில் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அரும்பெரும் சக்திகள் அவை அனைத்தும் இன்று பூமியில் கலந்துள்ளது.

அவைகளை நாம் எண்ணத்தால் எண்ணி அதைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானித்தோம் என்றால் அதை “ஓ...ம் நமச்சிவாய...” என்று நம் உடலாக மாற்றிக்கொண்டே இருக்கும் நமது உயிர்.

உதாரணமாக விஞ்ஞானிகள் நிரூபிக்கின்றனர். பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரணுக்கள் அவைகளின் உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளதைக் கம்ப்யூட்டர் மூலம் காண்கின்றனர்.

அது வாழ்ந்த இடங்களில் மடிந்து புதைந்து கிடக்கும் அவைகளைக் கம்ப்யூட்டர் மூலம் அறிகின்றனர்.

அந்த மணங்கள் பூமியில் மடிந்திருந்தாலும் நுண்ணிய அதிர்வுகளைக் கவரும் கம்ப்யூட்டர்களை வைத்து அந்த உணர்வினைப் பதிவாக்கிக் கொள்கின்றனர்.

அதைப் பல மடங்கு பெருக்கி
1.இங்கே எவை வாழ்ந்தது? எத்தகைய ரூபம் கொண்டது? என்று
2.ஒலியின் அதிர்வை வைத்துப்
3.பூமியில் மடிந்திருக்கும் படிந்திருக்கும் அந்த உடல்களின் எலும்புக் கூடுகளைக் காண்கின்றனர்.

அந்த எலும்புக்கூட்டுகளில் அமைந்துள்ள உணர்வலைகளைக் கம்ப்யூட்டர் மூலம் அதிர்வுகளைக் கண்டுபிடித்து
1.அதிர்வுகளை ஆயிரம் மடங்கு பெருக்கி
2.அதன் வழி கொண்டு அன்றைய காலம் வாழ்ந்த மிருகங்களின் உருவங்களை அமைக்கின்றனர்.

இன்றும் பார்க்கின்றோம். ஒரு திருடனை முந்தியெல்லாம் கைரேகை மூலம் கண்டுபிடிப்பார்கள்.

இப்போது கைரேகை பதிந்தால் அந்த ரேகையின் வழி கொண்டு அந்த மனிதன் எவ்வழியில் ரூபம் கொண்டிருந்தான் என்ற நிலையைக் கம்ப்யூட்டர் மூலம்
1.அந்த ரேகையின் உணர்வின் அதிர்வலைகளை வைத்து
2.அவன் ரூபத்தையே படமாக்குகின்றனர்.
3.அதன் வழியில் இன்று திருடனைக் கண்டுபிடிக்கின்றனர்.

இதை நிரூபிக்கின்றது விஞ்ஞானம்.

இதைப்போல அகண்ட அண்டத்தையும் இந்த பிண்டத்திற்குள் எப்படி இயங்குகின்றது என்ற உண்மையினை உணர்ந்தவன் முதன் முதல் மனிதன் அகஸ்தியன்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அவனுக்குள் விளைந்த உணர்வுகள் இன்றும் பூமியில் படர்ந்துள்ளது. அகஸ்தியன் கண்டுணர்ந்த (மறைந்த) அந்தப் பேருண்மையின் உணர்வுகளை அறியும்படிச் செய்தார் குரு.

பல காலம் 20 வருடம் காடு மேடெல்லாம் அலையச் செய்தார் குருநாதர். அவர் உபதேசித்து உணர்த்திய உணர்வுகளை எமக்குள் பதிவாக்கி அந்த நினைவு கொண்டு
1.அகஸ்தியர் உணர்வுகள் எங்கெங்கெல்லாம் எவ்வழியில் இருந்தது?
2.அகஸ்தியன் எங்கெங்கெல்லாம் சென்றான்?
3.அவன் நடந்து சென்ற பாதைகளில் உணர்வுகள் எவ்வாறு படர்ந்துள்ளது? என்று பார்க்கும் படிச் செய்தார்.

உதாரணமாக அவர் உடலோடு இருக்கும் போது பித்தனாக இருப்பினும்
1.கைகளில் அடிக்கடி ஒரு கிழிந்த துணியைக் கட்டுவார்.
2.காலில் ஒரு துணியைக் கட்டுவார்.
3.வித விதமான துணிகளைக் கட்டுவார்.

பார்ப்போருக்கு அவர் பைத்தியம் போலவும் இருப்பினும்
1.அவர் செடி கொடிகளில் துணிகளைக் கட்டுவார்.
2.என்னென்னமோ புரியாத பாஷையில் சொல்வார்.

நான் அதைக் கேட்பேன்... அர்த்தமாகாது....! ஏதோ செய்கின்றார்...! என்று தான் இருக்கும்.

ஆனால் கடைசி நிலையில் அவர் சரீரத்திற்குப்பின் அவர் எதையெதையெல்லாம் எப்பாஷையில் பேசினாலும் அதை எமக்குள் பதிவாக்கி நினைவாக்கும் முறையை உருவாக்கினார்.

அவரை நினைக்கும் போதெல்லாம்
1.குரு சென்ற பாதையில் அவர் எங்கெங்கெல்லாம் சென்றார்?
2.அகஸ்தியரின் நிலைகளை எப்படியெல்லாம் அறிந்தார்?

அவர் அறிந்த உணர்வுகளில் அக்காலத்தில் அகஸ்தியன் வாழ்ந்த நிலையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளை அறிய முடிந்தது.

அகஸ்தியன் துருவனான நிலையும் துருவ மகரிஷியான நிலையும் துருவ மகரிஷி ஆனபின் துருவ நட்சத்திரமான இந்த வழிமுறைகளை அவர் எமக்குள் உபதேசித்த இந்த உணர்வின் வழி கொண்டு கண்டுணர முடிந்தது.

நான் பல காடுகளுக்குச் செல்லப்படும்போது இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பித்த நிலையில் அங்கே... “அந்தச் செடிகளில்... மரங்களில்... தெரியும்.”

அப்போது அந்த நினைவுகள் வரும்.

அந்த நேரம் அந்தச் செடியின் அருகிலே போய் நின்றோம் என்றால்
1.அந்தத் தழை அப்படியே வந்து என் மீது ஒட்ட வரும்.
2.அப்போது அவர் சொன்ன நினைவுகள் வரும்.

ஏனென்றால் இந்தச் செடிகளில் அந்தத் துணிகளைக் காட்டும் போது நாம் போகும் போது அந்த துணிகள் தெரிந்தால் அது எச்சரிக்கையாக இருக்கும்.

இப்போது புலியோ நாகனோ மற்ற காட்டு விலங்குகள் உயிரினங்கள் மடிந்தால் அதன் உடலில் உள்ள சத்துக்கள் பூமியில் படர்கின்றது.

அந்த உடல்களிலே புழுக்களாக உருவாகின்றது, அந்த உயிர் போய் விட்டால் அந்தப் புழுக்கள் மீண்டும் வெளி வந்த பின் தாவர இனங்களிலே அது பட்டு மீண்டும் அந்தத் தாவர இனங்களிலே புழு பூச்சிகளாக அது வளர்கின்றது.

அதன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வைச் சூரியன் கவர்ந்து அலைகளாக மாற்றிவிடுகின்றது. இந்த அலைகளைக் கண்ட பின் மற்ற செடி கொடிகளிலிருந்து கவர்ந்து கொண்ட சக்திகள் அது நகர்ந்து ஓடும்.

செடி கொடிகளிலிருந்து வெளிப்பட்ட சத்தின் அலைகள் நகர்ந்து ஓடும்போது அதைக் காட்டிலும் ஒரு விஷச் செடியில் இருந்து வரும் அந்த உணர்வலைகளுக்குள் சிக்கியபின் “கிறு...கிறு...” என்று சுற்றுகின்றது.

சுற்றும்போது அந்த உயிரணுக்கள் தாவர இனங்களை உணவாக உட்கொண்ட விஷத்தன்மையான அலைகளுக்குள் சிக்கிய அந்த உடல்கள் மடிந்தால் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இது சுழலும் போது அது ஈர்ப்புக்குள் சிக்கிவிடும்.

மூன்றும் இரண்டறக் கலந்து இப்படி எந்தெந்தச் செடிகளின் உணர்வுடன் கலக்கின்றதோ அவை மூன்றும் மோதும் போது ஒரு கருவாக இணைகின்றது.

உயிரணுவின் அணுக்களும் தாவர இன அணுக்களும் மற்ற விஷச் செடியின் அணுக்களும் மோதலில் இதற்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன்கள் இழுத்து வெப்பமாகி இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

1.மோதும் போது ஆவியாக மாறி மேலே செல்லுகின்றது.
2.மோதலில் இணைந்த அந்தக் கருக்கள் புவியின் ஈர்ப்புக்குள் வருகின்றது.
3.புவி ஈர்ப்புக்குள் பட்டபின் மின்னல் தாக்கிய பின் அது ஒரு வித்தின் தன்மை உருவாகி அது செடியாக மாறுகின்றது.

அப்போது எந்த மிருகங்களின் உடலிலிருந்து  இந்த உணர்வுகள் வந்ததோ இங்கே படர்ந்திருப்பதை அந்தச் செடி கவர்கின்றது.

எந்தச் செடியின் சத்தை மற்றது இணைந்திருந்ததோ அதைக் கவர்கின்றது.

எந்த விஷச் செடியின் சத்தை அது கவர்ந்தோ அது இதனுடன் இணைகின்றது.

இப்படி இணைந்து அது ஒரு செடியாக வரப்படும் போது இது இரத்தத்தால் இரத்தம் கலந்த நிலையில் இருப்பதனால் இந்தச் செடி இரத்தம் உள்ள பிராணிகள் ஏதாவது சென்றால்
1.அங்கே அந்த இலை நுனி பட்டால் போதும்.
2.நமக்கே தெரியாது. இரத்தத்தை உறிஞ்சி எடுத்து விடும்
3.பின் செத்து மடிய வேண்டியது தான்.

ஆனால் ஊரில் இருக்கும் போது அவர் இந்தத் துணிகளைக் கட்டிக் காண்பிக்கும்போது ஏதோ..., “பைத்தியம் பிடித்த நிலையில் தான் இருக்கிறார்...” என்று யாம் எண்ணினோம்.

அவர் உணர்த்திய உணர்வுகள் எனக்குப் புரியாத பாஷையில் புரிய வைத்துப் பதிய வைத்தார். ஆனால்
1.அந்தத் துணிகளைப் பார்க்கப்படும் போது
2.இந்த நிகழ்ச்சிகள் எமக்குத் தெரிகின்றது.

ஏனென்றால் இங்கே படர்ந்திருப்பதை நுகர முடிகின்றது.

எப்படி கம்ப்யூட்டர் அதில் செய்த எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகள் வரப்படும் போது அந்த அதிர்வுகளை அந்த கம்ப்யூட்டரில் உள்ள நாடாக்களில் ஒலி ஒளி என்ற நிலையில் பதிவாக்குகின்றார்கள்.

அதன் வழி ரூபங்களைக் காணுகின்றான் விஞ்ஞானி.

ஆனால் மெய்ஞானி (நமது குருநாதர்) இப்படி காட்டச் சொன்னார்.

மற்ற தாவர இனங்கள் எப்படியெல்லாம் மாறியது? தாவர இனங்கள் உணர்வுகளை உட் கொண்டு உயிரணுக்கள் எப்படி வாழ்ந்தது? உயிரணுக்கள் மடிந்தபின் என்ன செய்யும்? என்று அறியும்படி செய்தார்.

தாவர இனங்களுக்குள்ளே இப்படிப் பல மலைப்பகுதிகளில் அதிகமாக விளைகின்றன, இப்பொழுது நகரங்களிலும் எடுத்துக் கொண்டால் கிராமங்களிலும் இதைப் போல மடிந்த நாய்களை அல்லது மற்ற மிருகங்களை மரத்தின் கீழ் போட்டோம் என்றால் இது உரமாகி விடுகின்றது.

மரத்தில் நல்ல காப்புகள் அதிகரிக்கின்றது. ஆனால் காப்புகள் அதிகரித்தாலும் அதிலிருந்து விளைந்த பழங்களைச் சாப்பிடும் போது அதன் குண நலன்கள் வருகின்றது.

இப்படியெல்லாம் சில உண்மையின் உணர்வுகளை குருநாதர் அறியும்படிச் செய்தார்.

இதைப் போல மனிதனுடன் வாழ்ந்த மற்ற உயிர் இனங்கள்  நகரங்களில் கிராமங்களில் மடிந்தால் அதன் உணர்வுகள் மற்ற தாவர இனங்களுடன் இணைந்து விட்டால் அவைகளும் புது புது செடிகளாக விளைகின்றது.

தொட்டால் சிணுங்கி தொட்டால்வாடி போன்ற சில செடிகள் கொடிகள் விளைகின்றது. இவை எல்லாம் உயிர் அணுக்களின் மாற்ற நிலைகள்.

இயற்கையின் பேருண்மைகளை அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகளை குருநாதர் எமக்கு எவ்வாறு உணர்த்தினார் என்பதையும் எவ்வாறு அறியச் செய்தார் என்பதையும் அதே வழியில் உங்களுக்கும் உபதேசிக்கின்றோம்.

இதைப் பதிவாக்கி நினைவு கொண்டால் எனக்கு எப்படி அவர் பதிவு செய்த உணர்வுகள் நான் செல்லும் இடங்களில் உண்மைகளை உணர்த்தியதோ அதே போல் நீங்களும் அகஸ்தியன் கண்ட மெய் உணர்வுகளைக் காண முடியும்.

எமது அருளாசிகள்.