ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 12, 2017

“நம் வியாபாரம் செழிக்க...” நாம் செய்ய வேண்டியது என்ன...?

மனிதனின் வாழ்க்கையில் பிறர் படும் வேதனையை நாம் நுகர்ந்தோம் என்றால் அந்த வேதனையின் உணர்வுகள் நம் நல்ல குணங்களை அந்த வேதனை என்ற விஷம் இயக்கித் தெளிவாக்காதபடி நம்மை இருள் சூழச் செய்து விடுகின்றது.

அப்பொழுது சிந்தித்துச் செயல்படும் தன்மை இழக்கப்படுகின்றது. நல்ல சொல்களோ நல்ல பாதைகளோ நாம் சொல்லத் தவறி விடுகின்றோம்.

ஆக அந்த நிமிடத்தில் ஒரு நல்லதை நாம் செய்ய வேண்டும் என்றாலும்
1.நல்லதை நம்மால் சொல்ல முடியாது போய்விடுகின்றது.
2.நல்ல உணர்வுகள் நமக்குள் நினைவே இல்லாது போய்விடுகின்றது.
3.நல்ல காரியத்தைச் செயல்படுத்த முடியாது போய்விடுகிறது.

உதாரணமாக நான் புதிதாகத் தொழில் ஆரம்பிக்கப் போகிறேன் என்று வைத்துக் கொள்வோம். இந்த எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டு செய்யப்படும் பொழுது அதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயலுக்குப் போகின்றோம்.

ஆனால் செயலுக்குப் போகும் பொழுது ஒருவர் அசரீரி போல இடைவெளியில் வந்து
1.அவன் எல்லாம் செய்து
2.இந்த மாதிரி நஷ்டமாகி விட்டான் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள்.

தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லும் பொழுது இந்த உணர்வுகள் பட்டவுடன்
1.போகும் பொழுதே இப்படி எதிரொலி வருகிறதே என்ன ஆகுமோ…?!
2.இதை இணைத்துக் கொள்கின்றார்கள்.

வாழ்க்கைக்கு எப்படியும் தொழிலும் செய்ய வேண்டும். எடுத்த காரியத்தை நடத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் “இந்தச் சந்தேக உணர்வுகள்” கலந்து விடுகின்றது.

இப்படிக் கலந்துவிட்டால் அதனின் துணையாக நீங்கள் போகும் பொழுதே இந்த இக்கட்டான உணர்வுகளே அங்கே தோன்றும்.

ஆகவே இந்த உணர்வின் தன்மை தனக்குள் வரப்படும் பொழுது எண்ணங்கள் வலுப் பெற்றுவிடுகின்றது. அப்புறம் அந்த வியாபாரத்தை வைக்கும் பொழுதே தொழில் ஆரம்பித்தவுடன்
1.இது விற்குமா விற்காதா…!
2.வாங்குவார்களா வாங்க மாட்டார்களா…? இந்த எண்ணம் வரும்.
3.இந்த உணர்வுகள் தான் வெளி வரும். இந்த மணங்கள் வந்துவிடுகின்றது.
4.இந்த எண்ணம் நம்மிடமிருந்து வெளிவந்த பின் என்ன ஆகும்?

வாடிக்கையாளர்கள் நாம் வைத்திருக்கும் சரக்கைப் பார்ப்பார்கள்.

சரக்கை எடுத்துப் பார்க்கும் பொழுதே இந்த மனிதன் எடுத்துப் பார்க்கிறான் என்ன சொல்லப் போகின்றானா…? இந்த உணர்வு ஓடும்.

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும் பொழுது “இது என்ன விலைங்க…” என்பார்கள்?

“இது என்ன விலைங்க…” என்று சொல்லப்படும் பொழுது இது இன்ன விலை என்று எடுத்தவுடன் ஆரம்பித்துவிடுவோம்.
1.நான் இதைப் பத்து ரூபாய்க்கு வாங்கி வந்தேன்.
2.அதில் ஐம்பது காசு தான் லாபம் வைத்திருக்கின்றேன்.
3.10.50க்குத் தருகிறேன்.

இப்படி உண்மையைச் சொல்லி நாம் விற்கலாம் என்று சொல்வோம். ஆனால் இப்படிச் சொன்னவுடன் அவர்கள் என்ன சொல்வார்கள்?

“சரி… சரி… ஒன்பது ரூபாய்க்குத் தருகிறீர்களா…?” என்பார்கள்.

இப்படி… இந்த உணர்வுகள் என்ன செய்யும்? 9 ரூபாய்க்குத் தருகிறீர்களா…! என்று வரும்.

இந்த உணர்வுகள் அங்கே பட்ட பின் வியாபாரம் எதை எண்ணி வந்தோமோ அதிலே “சந்தேகத்தை” இங்கே உருவாக்கிக் கொண்டேயிருக்கும்.

இதுவெல்லாம் நமக்குள் விளைந்த உணர்வுகளே நமக்குள் அணுக்களாக விளைந்து அந்த அணுக்களுக்கு உணவு தேடும் பொழுது இந்த உணர்வின் ஆன்மாக்கள் வரும்.

அந்த மாதிரி நேரத்தில் எதைச் செய்ய வேண்டும்?

பிள்ளையார் சுழி போட்டு அவருக்கு இரண்டு அபிஷேகத்தையும் அர்ச்சனையும் செய்து விட்டு அருகம்புல்லையும் தேங்காய் வாழைப் பழத்தையும் கொடுத்துவிட்டுப் பார்த்தால் அந்த வினைக்கு ஆகாது.

அதற்காகத்தான் விநாயகரை வைத்து நாம் எதை நமக்குள் வினையாக்க வேண்டும்? வினைக்கு நாயகனாக எதை இணைக்க வேண்டும் என்றும் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.  

உயிரணு தோன்றி பல கோடிச் சரீரங்கள் எடுத்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கி மனிதனான பின் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாக ஒளியின் சுடராக வாழ்ந்தும் வளர்ந்தும் கொண்டுள்ளான் அகஸ்திமா மகரிஷி.

நமக்குள் மகிழ்ச்சியாக உருவாக்கும் தன்மையை அந்த மகரிஷிகளின் சக்தியை நாம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
1.அவர்கள் காட்டிய உணர்வுகள் எங்களுக்குள் விளைய வேண்டும்.
2.எங்கள் பார்வை அனைவரையும் மகிழச் செய்ய வேண்டும் என்ற இந்த எண்ணத்தையும்
3.நாம் பார்ப்போர் அனைவரும் நலம் பெறவேண்டும்
4.எங்கள் வாடிக்கையாளர் அனைவரும் நலம் பெறவேண்டும்
5.அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் என்ற இந்த உணர்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது நம் வாடிக்கையாளர்கள் அனைவரும் நலமும் வளமும் பெறுவார்கள். “நம் வியாபாரம் சீராகும்.”