ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 6, 2017

அருள் சக்திகளை நான் பெறவேண்டும்… என்பதற்குப் பதில் “நாங்கள் பெற வேண்டும்…” என்று எண்ணிப் பாருங்கள் – உங்கள் எண்ணத்தின் “வலு” அதிகமாகும்

ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு “நாம்…” என்ற அணைப்பிலேயே செல்வோம். ஏனென்றால் எல்லாமே “நமக்குள்..” தான் இருக்கின்றது.

பல கோடி அணுக்கள் சேர்த்துத்தான் “நாம்” ஆகின்றோம். ஆனால் எந்தெந்த அணுக்களைச் சேர்த்துக் கொள்கின்றோமோ அந்த “நான்…” ஆகின்றோம்.

கோள்களும் நட்சத்திரங்களும் சூரியனும் மற்றவைகளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இயங்குகின்றன. ஒரு மரத்தை எடுத்துக் கொண்டால் கூட்டு ஐக்கியமான நிலைகளில்தான் அது மரமாக வளர்கின்றது. அதற்குள் பிரித்திருந்தால் தசையினுடைய நிலைகள் வளராது

அதைப் போன்று தான் நமக்குள்ளும் கூட்டு ஐக்கியமான நிலைகளில் இருந்தாலும்
1.வெறுப்பான உணர்வுகளை நாம் சேர்க்கும்பொழுது
2.ஒரு அணுவின் தன்மை இரத்தத்தை உருவாக்கினாலும்
3.இன்னொரு அணு அதன் மேலே பட்டவுடன்
4.அதனுடைய மலம் நம் இரத்தைத்தைக் குடித்துவிட்டு
5.அந்த அணுவின் மலம் உடலிலே பீய்ச்சும் பொழுது
6.நம் தசைகளும் கரைந்து அழுகிப் போகின்றது.
7.நமக்குள் அது பிரியும் தன்மை பெறுகின்றது.

இதைப் போன்று நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் பிறரைப்பற்றி வேதனை உணர்வுடன் எண்ணும் பொழுது அந்த வேற்றுமையான உணர்வுகள் நமக்குள் வந்து அவர்களை அழிக்க வேண்டுமென்று விரும்புகின்றோம்.

நமக்குள் எடுத்துக் கொண்ட அந்த அழிக்கும் உணர்வுடன் நாம் பேசினாலும் அதே சமயத்தில் அவரிடமிருந்து கெடுதலான அந்த அலைகள் நம் தசைகளிலே படும் பொழுது அந்த உணர்வுகள் பட்டு அரிப்பு ஆகின்றது.

அந்த அரிப்பினாலே சில கிருமிகளாகி நம் தசைகளையும் அது கரைத்துவிடுகின்றது.

பல வகைகளிலும் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் இப்படி வருகின்றது. ஏனென்றால் மனிதனாகத் தோன்றியபின் மனிதனிலிருந்து தோன்றும் இத்தகைய உணர்வுகள் “உருவாக்கும் ஆற்றல்” பெற்றது.

இவ்வாறு நாம் அடிக்கடி பேசும் பொழுது, இதைப் போன்ற நோய்களும் புற சரீர நோய்களும் உள் சரீரத்திற்குள்ளும் உணர்வின் அணுக்களாக மாறிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் நாம் தப்பிக்க வேண்டும்.

அதிலிருந்து நாம் விடுபட துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெறுவதற்காக யாம் இந்தத் தியானமும் ஆத்ம சுத்திப் பயிற்சியும் கொடுக்கின்றோம். இப்பொழுது யாம் இதைச் சொல்கிறோம் நீங்கள் கேட்கின்றீர்கள்.

இதைப் போல நீங்களும் ஒவ்வொருவராகச் சொல்லும் பொழுது கேட்பவர்களுக்கும் இது பதிவாகின்றது. அவர்களுடைய உணர்வுகள் அங்கே பதிவாகி எண்ணத் தொடருடன் நல்லதாகின்றது.

இதைப் போன்று ஒவ்வொருத்தரும் ஒரு குடும்பத்தில் இருந்தாலும் சரி நம் தியான வழி அன்பர்கள் கூட்டுக் குடும்பத் தியானமிருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு ஒவ்வொருவராகச் சொல்லிப் பழக வேண்டும்.

நாம் வீட்டிலிருந்தாலும் நம் குழந்தைகளையும் இதே மாதிரி அவர்களைச் சொல்லச் சொல்லி நாம் கேட்க வேண்டும். இந்த முறைகளில் நாம் பக்குவத்திற்கு வரவேண்டும்.

காரணம் “உணர்வுபூர்வமாக எடுத்து…” அதைச் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும்போது கேட்போருடைய செவிகளிலும் அது பதிவாகின்றது.
1.இவருடைய நல்ல எண்ணம் அவருக்குள் உருவாகும் பொழுது,
2.அந்த நல்ல எண்ணம் இவர் மேல் அன்பைப் பாய்ச்சுகின்றது.

கூட்டுக் குடும்ப தியானங்கள் இருக்கப்படும் பொழுது ஒவ்வொரு மெம்பர்களும் இன்று ஒருவர் சொன்னாலும் நாளை ஒருவரைச் சொல்ல வைக்க வேண்டும். நான்கு பேர் இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தரும் செய்து பழக வேண்டும்.

ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்யும் பொழுதும் ஒருவரே செய்ய வேண்டுமென்பது அல்ல. ஒவ்வொருத்தரும் இந்த நிலைகளைச் செய்து பழக வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் அந்தக் கலப்பு உணர்வினுடைய நிலைகளில் ஒன்று சேர்ந்தோம் என்றால்
1.அந்தப் பிரியத்துடன் பாசத்துடன் நாம் சொல்லப்படும் பொழுது
2.அதே பாசம் இங்கே வளர்கின்றது.

ஏனென்றால் இந்த உணர்ச்சிகளை அங்கே தூண்டச் செய்வதற்கும் அந்த ஐக்கிய மனோபாவத்தின் நிலைகளும் இந்தப் பற்றுதலுடன் ஒன்று சேர்வதற்கும் இதைப் போன்று நாம் முறைப்படிச் செய்ய வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்மிக்க சக்திகளை நான் பெறவேண்டும் நான் பெறவேண்டும் என்று எண்ணுவதற்குப் பதில் நாங்கள் பெறவேண்டும் நாங்கள் பெறவேண்டும் என்று எடுத்துப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்யும் பொழுது எல்லோருடைய வலுவும் நமக்குக் கிடைத்து அதன் மூலம் அந்த மகரிஷிகளின் சக்திகளை உடனுக்குடன் நாம் பெற முடிகிறது.

1.நம் உடலுக்குள் உள்ள எல்லா அணுக்களும்
2.உயிருடன் ஒன்றிய நிலைகளாக ஒரே உணர்வாக
3.ஒளியாக மாறும் சந்தர்ப்பமும் உருவாகின்றது.