ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2017

என்னுடைய ஆசையும் தவமும்

உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி இன்றும் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும்
1.”மகரிஷிகள்” - நம்மைப் போன்ற மனித இனத்தின் அந்த உணர்வலைகளை நாம் நுகர்ந்து
2.நமக்குள் உள்ள உணர்வு அனைத்தையும் ஒளியாக மாற்ற வேண்டும்.

அந்த மகரிஷிகள் எப்படி வேகா நிலைகள் கொண்டு ஒளியாக இருக்கின்றனரோ அதைப் போல அவர்களின் உணர்வை நம் நல்ல உணர்வுடன் செருகேற்றி வேகா நிலை என்ற நிலை அடைந்து என்றும் போகாப்புனல் போல பிறவியில்லாத நிலைகள் அடைவது திண்ணம்.

வேகா நிலை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதை உபதேசிக்கின்றேன். வேகா நிலை நீங்கள் அடைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
1.நீங்கள் அருள் ஒளி பெறவேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
2.உங்களை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
3.மகரிஷிகளின் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
4.இவ்வாறு நான் ஆசைப்படுவதை என் உயிர் எனக்குள் படைக்கின்றது.

இதைப் போல நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் “ஈஸ்வரா…” என்று விண்ணை நோக்கி ஏகி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று உங்கள் உடலுக்குள் வரும் தீமைகளை நீக்கிக் கொள்ளுங்கள்.

உங்களைப் பார்ப்போர் அனைவருக்கும் கஷ்டத்தைக் கேட்டுணர்ந்தோர் அவர்களுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கி அந்த உணர்வினைப் பாய்ச்சுங்கள்.

1.மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெறவேண்டும்
2.அவர்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப்பொருள் கண்டுணரும் அருள் சக்தி பெறவேண்டும்
4.தீமைகள் அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக அவர்களுக்குள் விளைய வேண்டும் என்று நீங்கள் எண்ணுவீர்கள் என்றால்
5.அதே உணர்வு உங்களுக்குள் விளையும்.
6.அதனின் உணர்வாக உங்களுக்குள் உங்கள் உயிர் அதை ஆள்வான்.
7.ஒளியின் சரீரமாக ஆக்கிடும் நிலையாக உங்களை ஆண்டு கொண்டிருக்கும் அந்த உயிர் செய்வான்.

உங்களுடைய நிலைகளை நான் எண்ணும் பொழுது அந்த எண்ணத்தை என் உயிர் அதைப் படைக்கின்றது. இயக்குகின்றது. குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அவர் எனக்கு இதைத்தான் சொன்னார்.

1.உங்கள் உயிரை நான் கடவுளாக மதிக்கின்றேன்.
2.உங்கள் உயிரை நீங்கள் கடவுளாக மதியுங்கள்.
3.பிறருடைய உயிரையும் கடவுளாக மதியுங்கள்.
4.ஒவ்வொரு உடலையும் “அந்தக் கடவுள் தான் எடுத்தது…” என்று மதியுங்கள்.

இதைப் போல நீங்கள் எண்ண வேண்டும். அந்தச் சக்திகளை நீங்கள் பெறவேண்டும் என்ற இந்த நோக்கத்தில் தான் மீண்டும் மீண்டும் இதைப் பதிவாக்குகின்றோம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியை நீங்களும் பெற்று மனிதன் என்ற புனிதச் சரீரத்தை அழியாச் சரீரமாக ஒளியின் தன்மையாக மாற்றி என்றும் விண்ணுலகில் பெரு வீடு பெரு நிலை என்ற நிலையில் சென்றடைந்த அந்த மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்தில் சென்றடையலாம்.

இருள் சூழ்ந்த இந்த நஞ்சு கொண்ட மனித வாழ்க்கையில் நஞ்சினை நீக்கி நாம் உயர்ந்த நிலைகள் பெறுவோம் என்ற இந்த நிலைக்குத்தான் தியானமும் பயிற்சியும் கொடுக்கின்றோம்.

அதே சமயத்தில் நம்மைச் சார்ந்தோர்களான நம் மூதாதையர்கள் குலதெய்வங்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும். 

அவர்களை விண் செலுத்தினால் தான் அவர்களின் துணை கொண்டு இந்தச் சக்திகளை நாம் எளிதில் பெறமுடியும்.