ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2017

புலி இருக்கும் காட்டிற்குள் “குருநாதர் கொடுத்த அனுபவம்” - நடந்த நிகழ்ச்சி

அனுபவம் பெறுவதற்கு குரு என்னைக் காட்டுக்குள்ளும் அழைத்துச் சென்றார். நாட்டுக்குள்ளும் அழைத்துச் சென்றார்.

காட்டுக்குள் அழைத்துச் செல்லப்படும் போது மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது புலி. மனிதனைக் கண்டு அஞ்சி ஓடுகின்றது நரி. மனிதனைக் கண்டு விஷம் கொண்ட பாம்பும் தன்னைக் காக்க அஞ்சி ஓடுகின்றது.

ஏனென்றால் அதைப் போன்ற மிருகங்களாக இருந்துதான் மனிதனாக வந்தது. அனைத்தையும் வென்றிடும் சக்தி பெற்றது மனித உடலின் உணர்வுகள் (மனிதனின் மணம்).

1.எந்தெந்த உடல்களிலிருந்து
2.தன்னைக் காத்திடும் உணர்வு ஒவ்வொன்றிலும் விளைந்ததோ அதன் வழிப்படி
3.மனிதனைக் கண்ட பின் (மனிதனின்) மணத்தைக் கண்ட பின்
4.மற்ற உயிரினங்கள் அஞ்சி ஓடுகிறது.

யானை உடலில் பெரிது. வலிமையிலும் பெரிது. ஆனால் தனித்து வரும் யானை மனிதனைக் கண்டு விட்டால் ஆள் கூட்டம் இல்லை என்று அவனை விரட்டிச் சென்று அடிக்கப் பார்க்கும்.

யானைகள் கூட்டமாக இருக்கும் போது நம்மை ஒன்றும் செய்ய மாட்டான் என்று எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கிச் செல்கிறது.

காட்டுக்குள் அழைத்துச் சென்று இதையும் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். குருநாதர் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டு “நீ இந்தப் பக்கமாகப் போடா...” என்கிறார்.

புலி கொடூரமானது தான். அங்கே புலி மேலே இருக்கின்றது. அந்தப் புலி தலையை எட்டி எட்டிப் பார்க்கிறது. (அந்த இடத்தில்) இரண்டு நாள் அங்கே இருந்தோம்.

அப்படி இருக்கும் போது “கேளை ஆடுகள்” கூட்டம் அங்கே வருகின்றது. அந்தக் குகைக்குள் புலி பம்மி இருக்கின்றது.

கேளை ஆடுகள் அங்கே வரப்படும் போது புலி என்ன செய்கிறது? புலி தன் மணத்தைச் “சாந்த உணர்வாக” வெளிப்படுத்துகின்றது.

கேளை ஆடுகள் எல்லாம் மெதுவாக அதுவாக மேய்ச்சலுக்கு வருகின்றது. அது வரையிலும் புலி சாந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றது. கேளை ஆடுகளும் இதைப் பார்க்கின்றது.

அந்த மாதிரி நேரத்தில் இதை... “நீ போய்ப் பாருடா...!” என்கிறார் குருநாதர். என்னைத் “தனித்துப் போடா...” என்று சொன்னவுடனே அப்பொழுது அங்கே என்ன நடக்கிறது “சமாச்சாரம்...?”

நான் எட்டிப் பார்க்கப்படும் போது ஒரு உடும்பு என்ன செய்கிறது? கல்லுக்கு கீழே அடியிலிருந்து வெளியே வந்தது. வெளியே வந்ததும் என்ன ஆனது?

“புலி என்ன செய்கிறது…?” என்று நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். கேளை ஆடுகள் பக்கத்தில் புலி இருக்கிறது. ஆனால் அதை அடித்துச் சாப்பிடவில்லை.


நான் இருந்த இடத்தில் பார்த்தால் உடும்பு கல்லுக்கு இடையில் உள்ளே இருக்கின்றது.

புலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த உடும்பு என் பக்கத்திலிருந்து திடீரென வந்தவுடன் எனக்குப் பயமாகிவிட்டது. அது கல்லுக்கிடையில் இருந்து “தலையை… வெளியே நீட்டுகின்றது”.

அந்த கல் “படார்...” என்று கீழே விழுந்தது. “ஊஹ்...ம்...” என்று சப்தம் போட்டேன். அவ்வளவு தான். புலி எனக்கு மேலே தவ்வி ஓடுகிறது.

கேளை ஆடுகள் எல்லாம் என்ன செய்கிறது?

“வரையாடு” (மலையிலிருக்கும் ஆட்டு இனம்) என்று சொல்வார்கள். அப்படியே “சப்...சப்...” என்று பாறையில் ஒட்டி அப்படியே ஓடுகிறது. புலி அதை ஒன்றும் செய்யவில்லை.

1.திடீரென்று உடும்பு தலையை நீட்டியதைப் பார்த்து நான் பயந்துவிட்டேன்.
2.நான் பயந்ததைப் பார்த்துப் புலி பயந்தது.
 3.பயந்த வேகத்தில் நான் உருண்டு ஒரு மரத்தில் விழுகிறேன்.

நடந்த நிகழ்ச்சி.

இதெல்லாம் அனுபவத்தில் தெரிய வைக்கிறார் குருநாதர்.

இவையெல்லாம் நீ கடந்து நீ வந்தாய். இருந்தாலும் இந்தக் கல் உருண்டவுடனே இந்தச் சப்தத்தை கேட்டவுடன் புலி மனிதனை (உன்னை) அடிக்கவில்லை. அஞ்சி ஓடுகிறது.

அது வருவதைக் கண்டு ஆடுகள் அஞ்சி ஓடுகிறது. அஞ்சிய நிலைகள் கொண்டு உருண்டு நீ விழுந்து விட்டாய்.

அதனதன் நிலைகள் இப்படி ஆகின்றது “பார்…” என்கிறார் குருநாதர்.

புலியின் வேகத்தை நுகர்ந்த பின் என் செயலாக்கங்கள் - நான் எப்படி உருண்டு விழுந்தேன்? அனுபவத்தில் இந்த உணர்வின் செயலாக்கங்கள் இது எப்படி இருந்தது? என்று காண்பிக்கின்றார். 

புலி அடித்துவிடுமோ…! என்ற உணர்வில் முதலில் புலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். நான் இருந்த இடத்தில் ஒரு கல்லுக்கு அடியில் இருந்த உடும்பைக் கண்டவுடனே அது எனக்குப் “பாம்பு மாதிரி… தலை தெரிகிறது”.

இரண்டு பயமும் சேர்த்து வருகிறது. கல் விழுந்து சப்தம் போட்டவுடன் புலி தாவுகிறது.

கடைசியில் நான் மரத்தில் விழுந்தது தான் மிச்சம். அந்த மரம் இல்லை என்றால் நேராகப் பாதாளத்திற்குள் போய் விழுந்து… “சுக்குநூறாகப் போயிருப்பேன்”.

ஏனென்றால் அதற்குத் தகுந்த இடத்தில் வைத்துத் தான் அங்கே என்னைப் பார்க்கச் சொல்கிறார். “இந்த இடத்தில் இருந்து பாருடா...” என்று (முதலில்) சொல்கிறார் குருநாதர்.

கடைசியில் “இப்படி நடக்கும்... என்று எனக்கு என்ன தெரியும்...!” தெரியாது.

ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் மரமும் இருக்கின்றது. நான் காப்பாற்றப்படுகிறேன். இதெல்லாம் என் அனுபவத்தில் கண்ட உண்மைகளை உங்களிடத்தில் சொல்கிறேன்.

இப்படியெல்லாம் நாம் வளர்ந்து வந்தவர்கள் தான். மனிதனைக் கண்டால் எல்லா உயிரினங்களும் அஞ்சும். இதை அனுபபூர்வமாக அங்கே வைத்துக் காட்டுகின்றார் குருநாதர்.

ஒரு தேன் கூடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு குச்சியை எடுத்து அதைத் தட்டுங்கள். உங்களைத் “துரத்து...துரத்து...” என்று துரத்தும்.

அல்லது குச்சி கொண்டு கூடத் தட்ட வேண்டாம். “உற்றுப் பார்த்து... அந்தத் தேனை எடுக்க வேண்டும்...” என்று உணர்வைப் பாய்ச்சினால் போது,

அப்பொழுதே கூட்டிலிருந்து களைந்து வெளியே வரும். எல்லாம் தலையைத் தூக்கி நம்மைப் பார்க்கும்.

“தேனை எடுக்க வந்தோம்” என்ற நிலையில் வந்து நம்மைக் கொட்டும். ஏனென்றால்
1.அது உணர்வால் அறிந்து தன்னைக் காக்கும் நிலை
2.உணர்வால் நுகர்ந்து உணர்வால் தனக்குள் உணவாக எடுத்து வாழும் சக்தி பெற்றது.
3.அது நுகர்ந்த உணர்வே அதற்கு அறிவாகின்றது.
4.அதுவே அதைக் காக்கின்றது. அதுவே அதற்குச் செயலாகின்றது.
5,இது தெளிவாக்கப்பட்ட உண்மைகள்.

இது போலத் தான் பல கோடிச் சரீரங்களில் நுகர்ந்து வந்த உணர்வுகள் மனிதனான பின் புலியைக் கண்டு நான் அஞ்சினேன்.

அந்த அஞ்சிடும் உணர்வுகள் எனக்குள் பதிவான பிற்பாடு… ஏதாவது வந்தால்… சப்தம் கேட்டால்…. அந்தப் “புலியின் நினைவே” எனக்கு வருகிறது.

திடீர் என்று உடும்பைப் பார்த்தவுடனே பயந்தேன். ஆனால் புலி தாவிய போது “நம்மை தாக்கிடுமோ...?” என்ற வேகமான உணர்வுகள் பதிவான பின் இரவு படுத்தாலும் பயம் தான் எனக்கு வருகிறது.

குருநாதர் என் கூடவே தான் படுத்து இருக்கிறார்கள்.

புலி வருகிறது…! புலி வருகிறது…! புலி வருகிறது…! என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

“எங்கடா... புலி வருகிறது...?” என்று கேட்கிறார் குருநாதர்.

என்னைத் தனியாக ஒரு பக்கத்தில் படுக்கச் சொன்னார். அவர் ஒரு பக்கம் படுத்திருக்கிறார்.

“நான் புலி வருகிறது… புலி வருகிறது..!” என்று சொல்லி பயந்து எழுந்து விடுகிறேன்.

அப்பொழுது ஒரு தரம் நான் பார்த்த உணர்வுகள் நுகர்ந்து எனக்குள் கருவாகி உருவாகி விட்டது.

1.அந்தப் புலியின் உருவங்கள் அலைகளாக வரப்படும்போது
2.நினைவு வருகின்றது. புலியின் உருவத்தையே (கனவாக) பார்க்கிறேன்.

இதைக் கனவாகக் காண்கிறாய். அந்த உணர்வின் தன்மை கருவாக்கி விட்டால் இதுவே அதிகமாகப் பெருகிவிட்டால் புலி எப்படி மற்றதைக் கொன்று சாப்பிட்டதோ இந்த உணர்வின் தன்மை அதிகமாகிவிட்டால் புலியின் நினைவே உனக்குள் உருவாகிவிடும்.

1.இந்த உடலை விட்டுப் போனவுடன் நீ எங்கே போவாய்...?
2.நீ… “புலி உடலுக்குத்தான் போவாய்” என்று தெளிவாகக் காட்டுகின்றார்  குருநாதர்.
நுகர்ந்த உணர்வுகள் உடலுக்குள் அணுக்களாக விளைந்து உயிராத்மாவில் சேர்ந்த பின் எது வலுவோ அங்கே (அத்தகைய உடல்களுக்கு) உயிர் அழைத்துச் செல்லும் என்பதை அங்கே உணர்த்துகின்றார் குருநாதர்.

பயமான உணர்வுகளை மாற்ற வேண்டும் என்றால் காற்றிலிருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைச் சுவாசி. உனக்குள் அதைச் சேர்த்துக் கொள். மகரிஷிகள் நஞ்சினை வென்று ஒளியாக ஆனவர்கள்.

அதை நீ பெற்றால் உனக்குள் மன பலம் வரும். அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நீ வெளிப்படுத்தினால்
1.உன் மணத்தைச் சுவாசிக்கும் மற்ற மிருகங்கள்
2.”இவன் நம்மை அடக்கிவிடுவான்…” என்று விலகிச் செல்லும் என்பதை
3.அங்கே நிதர்சனமாக எனக்குக் காட்டினார் குருநாதர்.