ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2017

மின் மினிப் பூச்சி தன் ஒளியைப் பாய்ச்சி விஷமானதை விலக்குவது போல் “மகரிஷிகளின் அருள் ஒளிகளை அந்த மின்னணுக்களை எடுத்து” நமக்குள் வரும் விஷத் தன்மைகளை ஒளியாக்க வேண்டும்

ஒரு மின் மினிப் பூச்சி தன் ஒளிகளைப் பாய்ச்சும் பொழுது விஷ அணுக்கள் விலகி அந்தத் தாவர இனங்களை உணவாக உட்கொள்கின்றது.

அதைப் போன்று வாழ்க்கையில் எப்பொழுது வேதனையான உணர்வுகளை நாம் நுகர நேர்ந்தாலும் அதை நீக்க அருள் மகரிஷிகளின் உணர்வைத் தனக்குள் நுகர்ந்து இதை இணைத்துவிட வேண்டும்.

பின் எந்த வேதனையின் நிலை வந்தாலும் நமக்குள் வராதபடி அவருக்குள் வேதனைப்பட்ட நிலைகள் இருளை நீக்கிவிட்டு நமக்குள் அடுத்து பொருள் காணும் நிலைக்கு வரவேண்டும்.

வேதனையிலிருந்து விடுபடும் நிலைக்கு எவ்வகையில் உபாயங்கள் செய்ய வேண்டும் என்ற நிலையில்
1.அந்தத் தீமைகள் தனக்குள் வராதபடி
2.இந்த மின்னணுவின் தன்மையை இணைத்துக் கொண்டே வர வேண்டும்.

நீங்கள் எவ்வளவு பெரிய உயர்ந்தவராக இருந்தாலும் கோடிச் செல்வங்கள் இருப்பினும் பிறர் படும் துயரங்களைப் பார்க்காமல் இருக்க முடியாது.

ரோட்டில் நீங்கள் செல்லும் போது ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து விடுகின்றான். விழுந்தவன் உங்கள் பையன் இல்லை என்று “கிடக்கிறான் விடு… என்று அப்படியே விட்டுவிட்டுச் செல்வீர்களா…? இல்லையே.

அடப் பாவமே.., யார் பெற்ற பிள்ளையோ….! இந்த மாதிரி விழுந்துவிட்டானே…! இரத்தம் வந்துவிட்டால் இங்கே உங்களுக்குப் பட..பட.. என்று வந்துவிடும்.

உங்கள் நல்ல மனம் இருள் சூழ்ந்துவிடுகின்றது. ஆக நீங்கள் தப்பா செய்தீர்கள்…?

இந்தப் படபடப்பு வந்தவுடனே என்ன நினைப்பீர்கள்.

அதே சமயத்தில் தன் பிள்ளைகள் வேகமாக வந்தால் “டேய்..டேய்…டேய்..! கீழே விழுந்துவிடாதடா…” என்று சொல்லத் தோன்றும்.

இரண்டு தடவை சொல்வீர்கள். மூன்றாவது தடவை சொல்வீர்கள். கீழே விழுவான்.

நான் நினைத்தேன்…! கீழே விழுவான் என்று. சொன்ன மாதிரியே விழுந்துவிட்டான்.

இந்த உணர்வின் வேகத் துடிப்புகள் இவ்வாறு இயங்குகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நீக்கிய அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஆழமாக இப்பொழுது பதியச் செய்கின்றேன்.

1.எப்படி மின் மினிப் பூச்சி தன் ஒளி கொண்டு
2.இருளை நீக்கித் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றதோ
3.இந்த மனிதனின் வாழ்க்கையில் தீமைகளை வென்ற அருள் ஞானிகளின் உணர்வை
4.உங்களுக்குள் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாகச் சொல்வது.

யாரை நீங்கள் நோயுடன் கண்டாலும் அந்த நோயின் தன்மை உங்களைப் பற்றிவிடாது அந்த மகரிஷிகளின் உணர்வை இணைக்கப்படும் பொழுது அந்த நோயின் சாரம் உங்களுக்குள் வராதபடி தடுக்க முடியும்.

அருள் மகரிஷிகளின் உணர்வுகளை எடுத்து வளர்த்து உங்களுக்குள் தெளிவாக்கி உங்கள் எண்ணம் உங்கள் வாக்கு அவர்களைப் பார்க்கப்படும் பொழுது
1.உனக்குப் பிணிகள் இல்லை
2.நீ நலமாக இருப்பாய் என்ற இந்த உணர்வினை அதை எடுத்துப் பாய்ச்சுங்கள்.
3.அங்கே இருள் மாயும். ஒளிகள் தெரியும்.
4.அவர்கள் நோயும் நீங்கும்.