ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2017

மெய் ஞானிகள் உணர்த்திய அருள் வழியில் அருள் வாக்கினைக் கொடுத்தால் “நான் படும் அவஸ்தை எனக்குத் தான் தெரியும்” என்கிறார்கள்

எம்முடைய (ஞானகுரு) உபதேசத்தை எல்லோரும் ஆர்வமாகக் கேட்கின்றனர்.

உங்களுக்கு “நோயில்லை… துன்பம் இல்லை…” என்று நான் வாக்காகக் கொடுக்கின்றேன்.

நல்ல வாக்கைக் கொடுத்தாலும் நான் படும் அவஸ்தை “எனக்குத்தான் தெரியும்” என்கிறார்கள்.

சரி இனிமேல் நோய் நீங்கிப் போகும் என்று யாம் சொல்கிறோம்.

“இல்லைங்க..,!” என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று சொல்கிறார்கள்…!

ஒரு அம்மாவிடம் நான் நல்ல உணர்வை வாக்காகச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அந்த அம்மா எல்லாவற்றையும் கேட்டுவிட்டு என்ன சொல்கிறது?

நான் இங்கே வந்தால் நன்றாக இருக்கின்றது. வீட்டிற்குச் சென்றால் சுத்தமாக எல்லாம் மாறிப் போகின்றது. என்னென்னவோ நடக்கிறது என்று சொல்கிறது.

வீட்டிற்குப் போனாலும் என்ன அம்மா? எங்கே போனாலும் இதே மாதிரி நல்லதை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள் என்று சொல்கின்றேன்.

“அதற்கு இல்லைங்க….!” வீட்டிற்குப் போனாலே என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது என்று அதை “இறுகப் பிடித்துக் கொள்கிறார்கள்”.

அதே மாதிரி இனி நோய் இல்லை போங்கள் இதைப் பின்பற்றுங்கள் நீங்கள் நன்றாக ஆகிவிடுவீர்கள் என்று நல்ல வாக்கைக் கொடுக்கின்றோம்.

ஆனால் இதைக் கேட்பார் யாரும் இல்லை.

1.சாமிக்கு என்ன தெரியும்?
2.நான் படுகிற அவஸ்தை எனக்குத் தானே தெரியும் என்கிறார்கள்.

ஆனால் தன்னைத் “திட்டுபவர்களை” மட்டும் மனதில் எண்ணி “என்னை இப்படிப் பேசினாய் அல்லவா…, இரு நான் பார்க்கிறேன்… உன் குடும்பத்தை நான் தொலைத்துக் காட்டுகிறேன்…” என்று மட்டும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்கள்.

இந்த உணர்வு அவர்களை இவர்கள் தொலைத்துக் கட்டுவதற்கு முன்னால் இவர்கள் உடலுக்குள் புகுந்து இந்த உடலைத் தொலைத்துக் கட்டும் என்பதை மறந்து போகின்றார்கள்.

சில வீட்டில் பார்க்கலாம். கொஞ்சம் “சுருக்…” என்று சொன்னால் போதும். ஆ… நீ என்னை என்ன சொன்னாய்…! உன்னை விடுவதா…? இருக்கட்டும்… நான் உன்னை என்ன செய்கிறேன் பார்…! என்று சொல்லிவிட்டு வாயில் வந்ததையெல்லாம் பேசுவார்கள்.

நீ அப்படிப் போவாய் இப்படிப் போவாய் இந்த மாதிரியெல்லாம் உனக்கு ஆகும் என்றெல்லாம் பேசுவார்கள்.

ஆனால் இப்படிப் பேசுபவர்கள் எல்லோரையும் பாருங்கள். உடலில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல் தலை வலி இடுப்பு வலி கால் வலி மூட்டு வலி எல்லாம் இருக்கும். “இது பேசியவர்களுக்கு”.

சிலர் பேசாமல் இதைப் பொழுது போக்காக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

1.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா.
2.இப்படிப் பேசுகின்றார்களே பாவிகள். அந்த அம்மா நல்ல அம்மா என்று
3.இப்படியே திரும்பத் திரும்ப எண்ணி
4.அந்தச் சண்டை போடுபவர்களை உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கிக் கொள்வார்கள்.

ஒரு பொல்லாதவரை எண்ணுவது. நல்லவரைப் பார்த்து இங்கே “இப்படி ஆகிறதே…” என்று இதை வளர்த்துக் கொள்வது.
1.நல்லவர் மேல் இரக்கமும்
2பொல்லாதவர் மேல் ஆத்திரமும் இந்த இரண்டும் இங்கே வரும்.

இப்படி வந்தவுடனே “அம்மம்மா…ஆ…” வயிறெல்லாம் வலிக்கிறதே… குடலெல்லாம் முட்டுகிறதே… அவர்களுக்கு இந்த நோய் வரும்.

ஆனால் நல்லவர்கள் தான்.

இந்த மாதிரிச் சண்டை நடக்கும் இடங்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கும் பொழுது என்ன ஆகிறது?

1.எனக்கு எப்படியோ வருகிறது என்னென்னமோ செய்கிறது.
2.நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே
3.தெய்வம் என்னை இப்படிச் சோதிக்கிறதே
3.நான் அடிக்கடி வணங்கும் தெய்வமும் இப்படிப் பண்ணுகிறதே
4.இப்படித்தான் எண்ணி இதைத்தான் கூட்டிக் கொள்ள முடிகின்றது.

தெய்வம் எங்கே இருக்கின்றது? எந்த ரூபத்தில் இருக்கின்றது? என்பதை வியாசகர் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

நம் உயிரே கடவுள் நம் உடலே கோவில். எண்ணும் எண்ணமே இறைவன். இறையின் செயலே தெய்வமாக அமைகின்றது.

நாம் எண்ணியதை உயிர் “ஓ…” என்று இயக்கி “ம்…” என்று உடலாக ஒவ்வொரு நொடிப்பொழுதும் உருவாக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் யார்? நாம் எண்ண வேண்டியது எது? நமக்குள் சேர்க்க வேண்டியது எது? நாம் அடைய வேண்டிய எல்லை எது? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்?

இத்தகைய நிலைகளை எல்லோருக்கும் அறிவிப்பதற்காகத்தான் தன்னை அறிந்து கொள்ளும் நிலைக்காகத்தான் ஆலயங்களை அமைத்தார்கள் ஞானிகள்.

இதை அறியாதபடி நாம் வாழ்ந்தால் எந்த உணர்வைச் சுவாசிக்கின்றோமோ அதனின் இயக்கமாக இயங்கி அதன் வழியில் தான் செல்ல வேண்டியதிருக்கும்.

அத்தகைய நிலைகளிலிருந்து விடுபடும் நிலைக்குத்தான் உங்களுக்கு அந்த ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொண்டே வருகிறோம்.

திட்டியவனை எண்ணும் பொழுது மீண்டும் மீண்டும் அவனை எண்ணி இரு நான் பார்க்கிறேன் என்று எண்ணுவது போல்
1.அருள் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளை நாம் ஆழமாகப் பதிவு செய்து கொண்டால்
2.அதை மீண்டும் மீண்டும் நினைவு கொண்டால்
3.அருள் ஞானிகளின் உணர்வு நமக்குள் இயங்கி
4.இந்த வாழ்க்கையில் வந்த இருளை அகற்றி மெய்யை உணர்த்தும்.
5.மெய் ஒளி மெய் ஞானம் பெறமுடியும் 

இதில் ஒன்றும் சிரமமில்லை.