ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 5, 2024

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”

“நல்லோரின் ஆசி பெற்று வாழ்ந்திடுங்களப்பா”


நல்வினை தீவினை என்பதெல்லாம் நாமாக எடுக்கும் வினை அல்ல. நம்முள் இயங்கும் இறைவனின் சக்தியைக் கொண்டு நடப்பவைகள் தான் நல்வினை தீவினை எல்லாமே என்று உணர்ந்து கொள்ள வேண்டும்,
1.இவ்வுடல் என்னும் கூட்டில் உள்ள ஆத்மாவை நம்முள் இருக்கும் இறைவன் சக்தியைக் கொண்டு
2.நாம் எடுக்கும் முறையில் இருந்து இவ்வாத்மாவை
3.நாம் இவ்வுடலென்னும் கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிறகும்
4.எந்த நிலைக்கும் அவ்வாத்மா நம் எண்ணத்திற்கு உகந்தபடி செயல்படும் தன்மை பெறும்.
 
நமக்கு இயேசு மகான் எப்படிக் கிடைத்தார்…? ஆழ்வார்கள் பலர் நமக்கு எப்படிக் கிடைத்தார்கள்…? சூட்சும நிலை கொண்ட இவ்வாத்மா பெரியோர்கள் எல்லோரும் தன் நிலைக்கு உகந்த உடல்களை எப்படி எப்படி எடுத்துப் பிறவி எடுக்காமலேயே இவ்வுலகில் வாழ்கின்றார்கள்…? என்ற நிலை புரிந்து நாம் வாழ வேண்டும்.
 
பல ஆழ்வார்கள் நாயன்மார்கள் எல்லாம் பிறவியிலிருந்து அந்நிலை பெற்று வரவில்லை சில உடல்கள் அவ்வுடலில் இருந்து ஆவி பிரிந்து சென்ற பிறகு அவ்வுடல்களை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள்…
 
ஏன் அந்த உடலில் இருந்து சென்ற ஆவிக்கு அவ்வுடலில் திரும்பவும் வந்து செயல்பட முடிந்திடாதா…? என்ற எண்ணம் கொள்ளலாம்.
 
அவ்வுடலுடன் இருக்கும் பொழுது அவ்வாவிக்கு எந்த நிலையில் சக்தி பெற்றதோ அந்த நிலையில் தான் அது செயல்பட முடிந்திடும்.
1.பயத்துடனும் இவ் உடலில் உள்ள வலியின் கொடுமையினாலும்
2.உடலை விட்டுப் பிரியும் ஆவியினால் திரும்பவும் அந்த உடலை ஏற்றுச் செயல்படுத்திட முடிந்திடாது.
 
அந்த நிலையில் வருவது தான்... பல ஞானங்கள் பெற்ற இவ்வுலகுக்கு இன்னும் தொண்டு செய்ய வேண்டும்…” என்ற நிலையில் உள்ள பெரியோர்களின் ஆவி இவ் உடலில் வந்து செயல்படுகிறது.
 
சாதாரண ஆட்டு இடையனாக இருந்த இயேசு பிரான் ஆடு மேய்க்கும் நிலையில் அவர் உடலை ஒரு கருநாகம் தீண்டியதால் அவர் ஆவி பிரிந்தது.
 
அந்த நிலையில் உடல் கெடாத நிலையில் இருந்ததால் அவர் சிறுவனாக அன்பு கொண்டிருந்த அவரின் தாய், தந்தையின் நிலை அறிந்து அந்த உடலை ஒரு மாபெரும் ரிஷி ஏற்றுக் கொண்டார்.
 
மக்களுக்கு நல் வழி புகட்ட அந்த உடலில் இருந்து கொண்டே அந்த ரிஷி தன் நிலையில் தன் வழியில் மக்களுக்குப் புகட்டிச் சென்றார்.
 
அவ்வேசுபிரான் இன்னும் எங்கும் செல்லவில்லை. எவ்வுடலை ஏற்று எந்த நாட்டில் வாழ்ந்தாரோ அந்த நிலைக்கு எல்லாம் வந்து செல்கின்றார். எண்ணி ஏற்று ஈர்க்கும் நிலை இல்லை அங்கு இன்று.
 
ஜெபம் பெற்று அறிந்திட்டால் அவரின் நிலையை அறிந்திடலாம்.
1.பல ரிஷிகளும் தவ முனிவர்களும் ஆதி நாளிலேயே தோன்றிய நாடப்பா இந்நாடு.
2.அதனால் தான் இன்றும் இங்கு இன்னும் தெய்வ நம்பிக்கை என்று ஒரு பயமாவது உள்ளதப்பா.
 
அவ்வாண்டவனின் சக்தியை ஈர்த்து ஏற்கும் நிலையை இவ்வுடலுடன் நாம் உள்ள நிலை கொண்டே ஒவ்வொருவரும் அறிந்து வாழ்ந்தால் பல ஜென்மங்கள் எடுத்து ஆவி உலகில் அல்லல்பட வேண்டியது இல்லை.
 
இந்த உண்மையை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட்டு நம்முள் உள்ள இறைவனின் சக்தியால் ஊட்டம் பெற்று நம் உயிராத்மாவை உன்னத நிலை கொண்டு வாழ்ந்திட வேண்டும்.
 
இவ்வுடலை எந்த அணுவும் ஏற்கும் நிலையில் உள்ளதால்
1.நாம் நம் உடலைத் தீய அணுக்களின் ஏவலுக்கு ஆளாக்காமல் நல்லோரின் ஆசி பெறத்தான்
2.நாம் நம் ஜெபத்தையும் நம் எண்ணத்தையும் செயல்படுத்தி வாழ்ந்திட வேண்டும்.