ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 17, 2019

ஏழு ஜென்மங்கள் பற்றிய விளக்கம்


ஒரு மாட்டை நாம் வீட்டில் வளர்க்கின்றோம். உதாரணமாக ஒருவர் அந்த மாட்டைப் பார்த்து “அதை மிரட்டுகின்றார்...!” என்று வைத்துக் கொள்வோம்.

மாடு அவரைப் பார்த்த உடன் அந்த மிரட்டும் உணர்வை நுகர்ந்து அந்த உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு “மிரண்டு துள்ளும்...!”

ஆனால் அதே சமயத்தில் சாந்தமான நிலைகளில் அந்த மாட்டைப் பார்த்துப் பேசப்படும் போது “வாடா ராஜா... நீ இப்படிப் போ.. உட்கார்...! என்று சொல்லிப் பதிவாக்கினால் அந்த மாடு சாந்தமாக வரும். ஏனென்றால்
1.மனிதனுக்குள் விளைய வைத்த உணர்வுகளும் எண்ணங்களும் மிகச் சக்தி வாய்ந்தது.
2.மற்றொன்றை இயக்க கூடிய சக்தி பெற்றது.

புலி மற்றதைப் பார்க்கும் போது கொடூர நிலை கொண்டு இயக்கப்படும் சக்தி பெற்றது. அதை நாம் நுகரப்படும் போது அஞ்சி ஓடுகின்றோம் அல்லவா...!

இதைப் போல மனிதன் கோபமான உணர்வுடன் பார்க்கப்படும் போது மாடு அந்த உணர்வை நுகர்ந்த பின் அதற்குள் வலுவாகின்றது. வலுவான பின் நம்மைக் கண்டு அஞ்சி ஓடும் உணர்வுகள் வந்து அதுவே  கூர்மையாகின்றது.

அந்தக் கோபப்பட்டோரின் உணர்வுகள் மாட்டிற்குள் பதிவாகி விளைந்த பின் அந்த மாடு இறந்தாலும் அதே மனிதனின் உடலுக்குள் தான் போகும். (மாட்டின் உயிரான்மா கோபித்தோர் உணர்வின் வலிமையை எடுத்து மனித உணர்வுக்குள் வரும்)
1.மனித உடலுக்குள் வந்து
2.மனிதனாகப் பிறக்கும் கருத் தன்மை பெறுகின்றது.

மாட்டின் ஆன்மா கருவாகி இந்த உடலுக்குள் வரப்படும் போது இங்கே விளைந்து அந்தக் கோப உணர்ச்சிகளைத் தூண்டும் அணுவின் தன்மை அடைகின்றது.

முதலில் அந்த மனிதர் கோபமாகப் பேசியிருந்தாலும் இந்த  மாட்டுக்குள் விளைந்த கோப உணர்வுகள் இங்கே மீண்டும் தோன்றி இவருக்குள் வந்து இந்த உணர்வுகளைத் தூண்டி அதே உணர்ச்சியின்  தன்மை கொண்ட மனிதனாக பிறக்கும் உருத் தன்மை பெறுகின்றது.

அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெற்றாலும் இந்த வீரிய உணர்வுகள் அதற்குள் பட்ட பின் அது பிறக்கும் போதே குழந்தையின் நுண்ணிய நாளங்களை அது இழந்துவிடும். பிறக்கும் போதே அந்தக் குழந்தை இறந்துவிடும்.

உங்களுக்குள் தெளிவாக்குவதற்காக மீண்டும் சொல்கிறோம்.
1.ஒருவர் கோபமான நிலையில் மாட்டை அதிவேகமாகத் தாக்கியிருந்தால்
2.அதனுடைய உணர்வுகளை எடுக்கப்படும் போது மாடு அந்த இறந்தபின்
3.யார் விரட்டினார்களோ அதே உடலுக்குள் வந்து அவருடைய உணர்வை எடுத்து இங்கே கருவாகும்.
4.மனிதனாகப் பிறக்கும் தகுதி ரொம்ப சீக்கிரமாக வருகின்றது.

இப்படி உருவான அந்தக் கருவின் உந்து வேகம் மற்றதைத் தள்ளிவிட்டு முதலில் கர்ப்பத்திற்கு வரும் தகுதியும் வருகின்றது. அப்படிப் பெற்றதனால் கருவிலேயே அதனுடைய நுண்ணிய நாளங்கள் இழந்து பிறக்கும் பொழுதே இறந்து விடுகின்றது.

இவையெல்லாம் இந்த உணர்வுகளுடைய இயக்கங்கள் எவ்வாறு...? என்று மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டினார்.

ஆக மாட்டிடம் கோபமாகப் பேசிய உணர்வுகள் இப்படி வருகிறது. ஆனால் அந்தக் குழந்தை இறந்து விடுகின்றது. அந்தக் குழந்தை இறந்து விட்டால் அந்தத் தாயின் ஈர்ப்புக்குள்ளே வந்து விடுகின்றது.

குழந்தை இறந்துவிட்டதே...! என்று தாய் பாசத்தால் எண்ணும் பொழுது அந்தக் குழந்தையின் உயிரான்மா தாயின் ஈர்ப்புக்குள் வந்து அது தன்னுடைய சுழற்சியில் இன்னொரு பிறவிக்கு வருகின்றது.

சாந்தம் கொண்டு இந்தப் பாசமான உணர்வுகள் அடுத்து வரப்போகும் போது அது மனிதனாகப் பிறக்கும் தகுதி பெறுகின்றது. இதில் இத்தனை வித்தியாசங்கள் இருக்கின்றது...!

ஆனால் அதே சமயத்தில் அந்த மாட்டைச் சாந்தமான நிலைகள் கொண்டு வளர்க்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மாடு இறந்த பின் பாசமாகப் பழகிய அந்த மனித உடலுக்குள் மாட்டின் உயிரான்மா சென்று கருவாகி மனிதனாக உருபெரும் தகுதியைப் பெறுகின்றது.

இந்த உணர்ச்சிகள் அந்தந்த உணர்வுக்குத் தக்கவாறு நல்ல ஞானத்தின் நிலைகள் கொண்டு பிறக்கும் அந்தக் குழத்தையாக வருகின்றது.

இவர் வளர்ந்து கொண்டு இருந்தாலும் அல்லது இறந்து விட்டாலும் இவர் யாரிடம் நட்புடன் பண்பு கொண்டு அதிகமாகப் பழகுகின்றாறோ அந்த உடலை விட்டுச் சென்றபின் அந்தப் பண்பு கொண்ட மனிதனின் ஈர்ப்புக்குள் மாட்டின் உயிரான்மா செல்லும்.
1.பின் அதனுடைய வரிசைத் தொடரில் வளர்ச்சி பெற்று
2.ஏழு சரீரங்களுக்குச் சென்ற பின் அது மனித உருவைப் பெறும் தன்மையாக முழுமை பெறுகின்றது.
3.ஏழு ஜென்மங்கள் என்று சொல்வார்கள்.

இதையெல்லாம் ஞானிகள் தெள்ளத் தெளிவாக கண்டு உணர்ந்து உணர்த்திய பேருண்மைகள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை உணர்த்துகின்றோம்.