ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 26, 2019

முன்னோர்களை விண் செலுத்தினால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன…?


1.நாம் எத்தனை மூதாதையரின் உயிரான்மாக்களை விண் செலுத்தினோமோ
2.அதற்குத்தக்க நமது வலுவும் கூடுகின்றது.
3.சப்தரிஷி மண்டலத்தை எண்ணும் பொழுது எளிதில் அதனின் சக்தி கிடைக்கின்றது.

அந்த அருள் சக்தியின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளை நீக்கவும் முடிகின்றது. அருள் ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் இதையெல்லாம் செய்யவேண்டும்.

கணவரை இழந்த பெண்கள் இருக்கலாம். ஆனால் கணவனின் உணர்வுகள் மனைவியின் உடலிலே உண்டு.

கணவரின் உயிரான்மா வெறுப்பின் உணர்வு கொண்டு, இன்னொரு உடலுக்குள் போய் இருந்தால் அந்தப் பெண்மனி தன் கணவனை எண்ணி
1.“தன் கணவனின் உயிரான்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்!” என்று ஏங்கித் தியானித்தால்
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு அந்த உயிரான்மாவை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விடலாம்.

கணவரின் உயிரான்மாவை முன்னராக இணைத்த பின் இதனின் உணர்வின் தன்மை கொண்டு, மனைவியும் பின் செல்லலாம். இதையே ஆண்களும் தம் மனைவியை இழந்திருந்தால் இப்படியேச் செய்யலாம்.

தொலைநோக்கி (TELESCOPE) வைத்துச் சப்தரிஷி மண்டலத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தைப் பார்த்தால், அதனுடைய சுழற்சி வட்டத்தில் இன்னொரு நட்சத்திரம் ஒளியின் தன்மையுடன் சுழன்று வருவதைக் காணலாம்.

குருநாதர் காண்பித்த அருள்வழியில், இதனின் உணர்வுகளை உங்களுக்குள் வலுப்படுத்திக் கொண்டால், இந்த உணர்வின் துணை கொண்டு
1.சப்தரிஷி மண்டலங்களை நீங்கள் காணலாம்
2.டெலஸ்கோப் இல்லாமலேயே அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அருள் சக்தியின் துணை கொண்டு, “சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்திட வேண்டும் என்ற உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அந்த வலுவின் தன்மை கொண்டு
1.உங்களுடன் வாழ்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களின் உயிரான்மாக்கள்
2.சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
3.அந்தக் காட்சியின் நிலைகளை உங்களால் காண முடியும்.