ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 1, 2019

“சக்கர வியூகம்…” அமைத்துப் பஞ்சேந்திரியங்களைக் காக்கும் நிலை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


எந்த நிலையை எண்ணி அதை நமக்குள் பதிவு செய்கின்றோமோ… அதனால் ஈர்க்கப்படும் சுவாசத்தின் சமைப்பில் “தன் ஆன்மாவைச் சுற்றி ஓடும் அந்த சப்த நாத ஒளி வட்டத்தில் எது வீரியமாக இருக்கின்றதோ…!” அதனின் தொடர் செயல் நிகழ்வில்… (அந்த) எண்ணம் உருவாக்கிடும் உருக்கோலமாகத் தான் நாம் ஒவ்வொரு நாளும் உருவாகின்றோம்.

பூமியின் சுவாச நிலை அதாவது பூமி ஈர்த்து வெளிப்படுத்தும் காந்த அமிலத் தொடரில் நாம் சிக்காது உயர் ஞானத் தொடருக்கு நம் எண்ணம் செயல் கொண்டால் நிறம்… மணம்… நீரமில மூலத் தொடர் இந்த முக்கூட்டின் ஆதிமூலத்தையே கண்டிடலாம்.

1.நம் உயிரான்மாவின் சக்தியை வலுக்கூட்டும் அத்தகைய ஈர்ப்பின் பொக்கிஷத்தை
2.நன்னெறியில் நற்செயலுக்கு வினைப்பயனாக உருவாக்கி
3.பேரருள் பேரொளியாக மாற்றிடும் அந்த அரிய செயலுக்கு
4.தடைக் கல்லாக வரும் உலகோதய ஈர்ப்பின் எதிர் மோதல் தன்மைகளை
5.பக்குவமாக விலக்கிச் செயல் கொள்ளும் ஆற்றலை நாம் முதலில் பெறவேண்டும்.

வான இயலின் ஆற்றலைத் தன் வாழ்க்கைத் தொடரில் இருந்தே… இந்த உடலிலிருந்தே முழுமை பெற்றிட வேண்டும் என்றாலும்
1.தன் எண்ணங்களில் மோதும் மாறுபட்ட நிலைகளில்
2.”பிடர்தல்…!” என்ற நுண்ணிய நிலைகள் கொண்டு பிரித்தாளும் நிலைகள் வரவில்லை என்றால்
3.அதனால் ஏற்படும் சங்கட அலைகளால் முதலில் தாக்கப்படுவது நம் சரீரம் தான்.

சங்கட உணர்வின் ஈர்ப்பால் அத்தகைய அமிலங்கள் நம் சரீரத்தில் உறைந்து தங்கி விட்டால் சரீரத்தில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்குள்ளும் எதிர் மோதலாகி நோயாக மாறிவிடும்…! என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஞானிகள் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத்தான் நல்லதாக்க முடியும்.

ஒரே நிலை கொண்டு செயல்பட வேண்டும் என்றால்
1.எதிர் மோதலாக வரும் உணர்வுகளை
2.அது நமக்குள் பதிவாகும் முன்பே நீக்கிட.. “சக்கர வியூகத்தை அமைத்து…!”
3.பஞ்சேந்திரியங்களைக் காத்திடும் செயலுக்கு நாம் வர வேண்டும்.

“சக்கர வியூகம்…!” என்றால் நம் நினைவுகளைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து அங்கே விழிப்பு நிலை ஏற்படுத்தி அதன் வழியாக விண்ணிலிருந்து வரும் மெய் ஞானிகளின் உணர்வை ஈர்க்கும் பழக்கம் வருதல் வேண்டும்.

அப்பொழுது புலனறிவால் ஈர்க்கப்படும் அனைத்தும் தன்னிச்சையாகச் செயல்படும் செயல் மாறி “புருவ மத்தியின் வழியாக…” ஈர்க்கும் பக்குவம் வருகின்றது.

இல்லறத்திலும் தொழிலிலும் மற்றும் உலகோதய கடமைகள் அனைத்திலுமே இந்த விழிப்புணர்வு அவசியம் தேவை.

இத்தகைய விழிப்புணர்வைப் பழக்கப்படுத்திக் கொண்டால் “பேரின்ப இரகசியத்தை அறிந்திடும் தொடரில்…!” அணுவளவும் கால விரயம் ஆகாமல் நல் வினைப் பயனாக நிச்சயம் ஆக்கம் பெறும்.