ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2019

அகஸ்தியரின் ஆற்றல்கள்

அகஸ்தியரைப் பற்றித் தெரிந்து கொள்வோம் - 1
அகஸ்தியர் கண்களால் பார்த்து உணர்வால் நுகர்ந்து அவரினுள் பதிவாகி அந்த பதிவின் நிலை கொண்டு அவர் தம்முள் விளைந்த ஆற்றலை வெளிப்படுத்தினார். “அது இன்றும் உண்டு…!”

யாம் (ஞானகுரு) உபதேசித்த உணர்வை மீண்டும் நினைவுபடுத்தினால் அவர் கண்ட பேருண்மைகளையும் அவர் பெற்ற ஒளியான உணர்வுகளையும் எல்லோரும் பெறலாம்.

அகஸ்தியர் 27 நட்சத்திரங்களின் கதிரியக்கப் பொறிகள் மற்ற கோள்களில் கலந்து அந்த உணர்வுகள் வித்தாகி அந்த உணர்வின் தன்மையால் கலவையின் நிலைகள் கொண்டு உணர்வின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு இவையின் ரூபம் அதற்குள் உள்ளடங்கி எப்படி உருவாகின்றது என்ற நிலையைக் கண்டுணர்ந்தார் அகஸ்தியர்.

பல தாவர இனத்தின் மணங்களை நுகரப்படும் பொழுது அது நமக்குள் எத்தகைய செயலைச் செயல்படுத்துகின்றது என்றும் அதன் உணர்வுகள் எப்படி அறிவாக உருவாகிறது என்றும் விஷத்தை அடக்கியபின் ஞானத்தின் தெளிவு எப்படி வருகிறது என்றும் தாவர இனத்தில் கலந்த நிலைகள் விஷத்தன்மைகளை அடக்கி அறிவின் தெளிவை எப்படிக் கொண்டு வருகின்றது என்பதையும் அறிந்துணர்ந்தார்.

அகஸ்தியர் உண்மையின் உணர்வை அறியும் பருவத்தில் சொல் வடிவில் மற்றவர்களுக்கு உண்மையின் தன்மைகளை சொல்லும் நிலை வருகின்றது.

1.மனிதனை கூ... என்று கூவி அழைக்கும் காலத்தில்
2.உணர்வின் இயக்கங்களைச் சொல் வடிவிலும் எழுத்து வடிவிலும் முதன்முதலில் கொண்டு வந்தவர் அகஸ்தியரே.
3.ஒலியை இசையாகவும் ஒலிகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது சுருதிகள் நாதமாவதை அறிந்தும்
4.ஒலிகொண்டு ஒளியை எழுப்பி ஒலியின் அறிவாக இயக்கக்கூடிய தன்மையையும் முதன்முதல் கண்டுணர்ந்தவர் அகஸ்தியரே.

யாம் உபதேசித்து வரும் பேருண்மையின் தன்மைகளைத் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

நட்சத்திரங்களிலிருந்தும் பிற மண்டலங்களிலிருந்தும் வெளிப்படும் நிலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி எதிர்நிலையாகும் பொழுது மின் கற்றைகளாக, மின்னலாக சிதறி சீறிப் பாய்கின்றது. இதனைக் கோள்கள் கவர்கின்றன அணுத் துகள்களிலும் இணைகின்றன.

இணைந்த நட்சத்திரக் கற்றைகள் எவையோ அவை அணுக்களாக மாறியபின் மாற்று குணம் கொண்ட அணுக்களுடன் மோதல் நிலை உண்டாகின்றது.

இதன் தொடர்கொண்டு
1.பல இயக்க நிலைகள் மாறுகின்றன
2.உணர்வுகள் மாறுகின்றன
3.ஓசைகள் மாறுகின்றன
4.இசைகள் மாறுகின்றன
5.ரூபங்கள் மாறுகின்றன.

இதுபோன்று ஆனபின் கடல் வாழ் நிலை புயலில் சிக்கித் தரை வாழ் நிலையாக மாறுகின்றன. இதன் தொடர் கொண்டு, தரையில் தாவர இனங்கள் உருப்பெறுகின்றது.

தாவர இனங்களில் உயிரணு பட்டபின் புழுக்களாக மாறுகின்றது. அதன் வளர்ச்சியில் ஒன்றையொன்று விழுங்கி பலகோடிச் சரீரங்களைக் கடந்து இன்று எப்படி மனிதனாக உருவானோம்...? என்று அறிந்துணர்ந்தார் அகஸ்தியர்.

அதனால் தான் அவருக்கு அகஸ்தியர் என்ற பெயர் வைத்தது.

1.எல்லாவற்றையும் வென்றிடும்... அடக்கிடும்... இயக்கிடும்... ஆற்றல் கொண்ட
2.நட்சத்திரங்களின் ஒளி கற்றைகளை அவர் தம்முள் வளர்த்து அதிபதியாக்கிக் கொண்டார்.

அவர் அருளை நாம் அனைவரும் பெற்றுப் பழகுதல் வேண்டும்.


அகஸ்தியரைப் பற்றித் தெரிந்து கொள்வோம் - 2
நட்சத்திரங்களின் கதிரியக்க மின்னல்களைத் தமக்குள் அடக்கிடும் உணர்வின் தன்மை வரும்பொழுது எதையும் வென்றிடும் தன்மையை அகஸ்தியர் பெற்றார். 
1.அவர் எதையாவது உற்று நோக்கித்
2.தன் உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அதனைக் கருக்கிவிடும்.

வாதாபி...என்ற ஒருவன் அசுர குணம் கொண்ட ராட்சஸன். அவனுடைய சகோதரனும் ஒரு ராட்சஸன். இவர்கள் இருவரும் இருவரில் ஒருவர் ஆடாக உருமாறுவதும் பின் ஆடாக இருப்பவனை வெட்டிச் சமைத்து விருந்தாளிக்கு உணவாகப் பரிமாறுவதும் உணவாக உட்கொண்டபின், “வாடா…. வாதாபி…!“ என்றால் சாப்பிட்டவரின் குடலைப் பிளந்து வெளியே வந்து விருந்தாளியை உட்கொள்வதும் என்ற நிலையில் காவியத் தொகுப்புகள் உண்டு.

மலை வாழ் பகுதிகளுக்கு வந்து பேரருள் பெறவேண்டும் என்று எண்ணி வருபவர்களை இப்படி வேட்டையாடிக் கொன்று புசித்துள்ளார்கள்.

அகஸ்தியர் அப்பகுதிக்குச் செல்லப்படும்போது வழக்கமான அதே முறையில் அகஸ்தியரை ராட்சஸர்கள் வரவேற்றுள்ளார்கள்.

அகஸ்தியர் அவர்கள் அளித்த உணவை உட்கொண்டபின், “வாடா..வாதாபி..!என்றால்அவன் அப்போதே ஜீரணமாகிவிட்டான்...!” என்று கூறுகின்றார். 

ராட்சஸனுக்கு ஆத்திரம் வருகின்றது. உன்னைக் கொன்று புசிக்கப் போகிறேன்...என்றான். ஆனால் அகஸ்தியரின் வேகத் துடிப்பு பார்வை ராட்சஸனைக் கருக்கிவிடுகின்றது.

இது போன்று அகஸ்தியரை அவர் கண்டறிந்த உண்மையின் நிலைகளைக் காவியங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் காண்பித்து அகஸ்தியர் போவார்... வருவார்...! என்றளவில் மட்டுமே உரைத்திருப்பார்கள்.
1.அகஸ்தியர் அனைத்திலும் வல்லவர் என்று மட்டுமே கூறி நிறுத்தி விடுவார்கள்.
2.இதனால்  அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளை நாம் அறிய முடியாமலே போய்விட்டது.

இதனின் உண்மைகளை நாம் தெரிந்து கொள்தல் வேண்டும். யாம் இவைகளை உங்களுக்கு விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் குறைந்தது 10 வருடங்களாவது அமர்ந்து உங்களுக்கு உபதேசிக்க வேண்டும்.

நீங்களும் இது போன்று 10 வருடம் அமர்ந்து கேட்கவேண்டும். ஆனால் யாம் உங்களிடம் சுருங்கச் சொல்லிப் பதிவு செய்கின்றோம். இந்த உணர்வின் தன்மையினை நீங்கள் உங்களிடத்தில் பதிவாக்கி மீண்டும் நினைவு கூறப்படும்போது உங்களில் பேரறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலைகள் கொண்டு கம்ப்யூட்டர் பிற இயந்திரங்களை இயக்கவும் நிறுத்தவும் இயந்திரத்தில் பணிகளை மாற்றவுமான செயல்களை செய்விக்கின்றனர்.

அதைப் போன்று
1.அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகும்போது
2.ஒன்றைப் பார்க்கும்பொழுதே அதற்குள் இருக்கும் நன்மை தீமைகளை அறியச் செய்து
3.தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வினை உருவாக்கும் தன்மை உங்களிடத்தில் விளைகின்றது.