ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 21, 2019

சுகமாக வாழ்வது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையை அறிந்துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே கண்ணால் (எந்தக் கருவியும் இல்லாது) கண்டான் சித்தன்.

உலக நிலையையும்... மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணிடலாம்.
1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
3.மனிதச் சக்தியில் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ... பூமித் தாயின் அந்த நிலையான சக்தி எல்லாமுமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளன...!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும் அந்தச் சூரியனிலிருந்தே
3.பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கும் நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை... பூகம்பம் வரும் நிலை... பெரும் மழை வரக்கூடிய நிலை...! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது. நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு எப்படி ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளதுவோ அதைப் போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே உள்ளன என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

இந்த மனிதன் உண்டு... உடுத்தி... உறங்குவது தான் வாழ்க்கை...! என்ற சுகத்தை எண்ணுகின்றான். 

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு...?
1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்...!