ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 10, 2019

“உயிரணுக்களின் சங்கமம்...” என்ற மகரிஷிகளால் சொல்லப்பட்ட கலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


சமமான நிலை நிலைக்கச் சாந்த நிலை தந்திடுவாய் ஈஸ்வரா என்று தியானத்தில் வேண்டுகிறோம். அதனின் உண்மைப் பொருள் என்ன..?

சாந்த குணம் பெற வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறோம். முயற்சியும் செய்கிறோம். ஆனால் நம் முயற்சி செயலுக்கு வரும் பொழுது
1.நமக்குள் வந்து மோதும் உணர்வுகளின் மோதல்களை
2.தன் எண்ணம் கொண்டு தனக்குத் தானே சமப்படுத்தும் செயலுக்கு
3.அதை யார் எப்படிச் செயலாக்கம் செய்வது…?

இதன் பொருள் புரிந்ததா,.?

1.ஒரு சுரக்குடுவை நீரில் அமிழ்த்தப்பட்டால் “பொட...பொட...!” என்று சப்தமிட்டுத் தான் நீரை நிறைத்துக் கொள்கிறது.
2.ஆனால் அதே குடுவைக்குள் நீர் மொள்ளும் பொழுது “சப்தமே வராமல்...!” பக்குவமாக நிறைத்துக் கொள்ளும் முறையும் உண்டு.
3.இந்த இரண்டு செயல்களுக்கும் பொதுவானதே - நமக்குள் வந்து மோதும் உணர்வுகள்.

உதாரணமாக ஒரு சஞ்சலமான உணர்வை ஊட்டி விட்டால் பரபரப்பாகின்றோம்.. பதட்டமாகின்றோம்...! அதன் பின் உணர்ச்சிவசப்பட்ட இயக்கமாகத் தான் வரும். அப்பொழுது அந்தச் செயலால் சாந்த குணத்தைக் கூட்ட முடியுமா...?

ஒரு ஞானவான் சுரக் குடுவைக்குள் (சப்தமில்லாது) பக்குவமாக நீரை நிறைத்துக் கொள்வது போல் சமமான உணர்வுகள் கொண்டு செயல்படும் செயலில் “நிதானம் என்ற பொறுமை குணம்...” அவசியம் தேவை.

உணர்வுகளை மாற்றிட முயலும் பொழுது
1.அந்த மாற்று அலைத் தாக்குதலால் நாம் எடுத்த உணர்வுகளின் ஈர்ப்பில்
2.வேகம் கொண்டு தாக்கிடும் செயலில்... நாம் “ஆத்ம சுத்தி” பாதிக்கப்படுவது நிச்சயம்.

அப்படியானால் பரபரப்பான இந்த உலக வாழ்க்கை நடை முறையில் வாழும் மனிதர்கள் ஒவ்வொரு நிமிடமும் தான் எடுக்கும் உணர்வுகள் கொண்டு
1.அந்த உணர்வுகளுக்கு ஒத்த தீமையான அணுக்கள் தன் ஈர்ப்பில் ஒட்டிக் கொள்ளும் பொழுது
2.அதை நல்லதாக்கிச் செயல்படுத்த வேண்டிய நடை முறைச் செயல் என்ன…?

நாம் எடுக்கும் உயரிய ஜெப எண்ணத்தில்
1.அவ்வப்பொழுது வந்து மோதும் மாற்று அலைகளைத் தவிர்த்து
2.தான் இருக்கும் வழியிலேயே தன்னைத் தான் தற்காத்துக் கொள்ளவே “ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்...!”

ஆத்மாவைப் புனிதப்படுத்திக் கொள்வது என்பது என்ன...? எப்படி...?

வாழ்க்கை நடை முறையில் மாற்றமான எதிர் நிலையான உணர்வுகள் நமக்குள் மோதி அதனால் கிளர்ந்தெழும் செயலைத் தவிர்த்து
1.ஓ...ம் ஈஸ்வரா...! என்ற ஒலி நாதத்தைக் கூட்டி
2.அவ்வாறு சொல்லும் பொழுது புருவ மத்தியில் உயிரைப் பரிபூரணமாக எண்ணி
3.அந்த ஒலி நாத உள் நிறைவால்
4.தன் ஆத்மாவிற்குப் பாதுகாப்பான வளையமிட்டுக் கொள்வதே ஆத்ம சுத்தியின் சூட்சமம்.

தீமையான உணர்வுகள் வரும் பொழுது இப்படி ஆத்ம சுத்தி செய்து அதன் மூலமாக உயர்ந்த உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளும் செயலினால் மனித ஞானம் அடையப் பெறும் நிலை என்ன...?

இன்றைய மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் கண்டுபிடித்துள்ள வாகனங்கள் இயந்திரங்கள் உண்டாக்கிடும் ஓசைகளினாலும் இன்றுள்ள இசையின் சுவைக்கொப்ப மனதில் கூட்டிக் கொள்ளும் விகாரங்களினாலும் எழுந்திடும் ஓசைகளைத்தான் நாம் ஒவ்வொரு நாளும் கேட்கின்றோம்.

அவை எல்லாம் நம் செவிப்புலனில் பட்டு நமக்குள் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

விநாயகன் உருவத்திற்கு “அகண்ட காதுகளையும்..” ஓ...ம் என்று போட்டு விநாயகரைப் “பிரணவத்திற்கு உரியவன்” என்றும் ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

ஓங்கார ஒலி நாதத்தைச் செவிமடுத்திடும் சூட்சமத்தைப் புரிந்து அதன் வழியில் செயல் அருள் உணர்வுகளை நமக்குள் கூட்டிக் கொண்டே வந்தால் அருள் உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெற்று அந்த நல்வினைகளாக நமக்குள் சேரும்.

இதனால் நடைமுறை வாழ்க்கையில் பரபரப்பான பதட்டமடையச் செய்யும் ஓசைகள் எத்தனை எத்தனையோ வந்து நம் மீது மோதினாலும் அதனை ஈர்க்காது மெய் ஒலியைக் கூட்டி மெய் ஒளியாக மாற்றிடும் செயலாக அமைந்துவிடும்.
1.இவை எல்லாம் மகரிஷிகளால் “கலைகள்...” என்று காட்டப்பட்ட 
2.ஒளியான “உயிரணுக்களின் சங்கமம்” உணர்ந்து கொள்ள வேண்டும்.

சமமான நிலை நிலைக்க வேண்டும் என்ற செயலில் செயல்பட வேண்டிய முறை இது தான்...!