ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 28, 2019

மரணமில்லாப் பெரு வாழ்வை எப்படிப் பெறுவது...?

பன்றி தன்னுடைய உடலில் தீமைகளை வென்றிடும் நல்ல உணர்வின் தன்மைகளை தன் வாழ் நாள் முழுவதும் சுவாசிக்கின்றது. சேர்த்துக் கொண்ட நல்ல உணர்வுக்கொப்ப பன்றியை விட்டு வெளி வந்த உயிரான்மா பரிணாம வளர்ச்சியாகி மனிதனாகப் பிறக்கின்றது.

இதைப் போல நம்முடைய மனித வாழ்க்கையில் துயர் என்ற நிலைகள் வரப்படும் போது
1.அந்தத் துன்பங்களையும் தீமைகளையும் அகற்றி
2.அதையெல்லாம் ஒளியாக மாற்றிய துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி நுகர்ந்து தீமைகளை உருவாக்கும் அணுக்களை அடக்கி அதை மடியச் செய்யப்படும் போது எந்தத் தீமை வந்தாலும் அதை ஒளியாக மாற்றிடும் திறன் பெறுகின்றோம்.

1.இப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை நம் உடலுக்குள் அதிகமாக அதிகமாக...
2.தீமைகளை வென்றிடும் உணர்வுகள் வளர வளர...
3.இந்த உடலை விட்டு நாம் சென்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைவோம்.

அங்கே சென்றால் இந்த உடலில் பெற்ற நஞ்சினை நீக்கி விட்டு  உணர்வினை ஒளியாக மாற்றி அழியா ஒளியின் சரீரம் பெறலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலும் சரி... அகண்ட அண்டத்திலும் சரி... அங்கிருந்து வரும் கடுமையான விஷத் தன்மைகளையும் ஒளியாக மாற்றிடும் திறன் பெற்றது தான் அந்தத் “துருவ நட்சத்திரம்....!”

இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சூரியனோ மற்றவைகளைக் கவர்ந்து பிரபஞ்சத்தை இயக்க உதவினாலும்
1.அந்தச் சூரியனே ஒரு காலம் மடிய நேரும்.
2.அதே போல் பல தீமையின் உணர்வுகளை நமது பிரபஞ்சம் நுகர நேர்ந்தால்
3.பிற மண்டலங்களில் இருந்து இதுவும் மடிந்து விடுகின்றது.

ஆனால் இதிலே உயிர் உருவாகி உணர்வின் தன்மையில் வளர்ச்சி பெற்ற நாம் இந்த மனிதப் பிறவியிலிருந்து தீமைகளை அகற்றத் தவறினால் தேய் பிறை என்ற நிலை வருகின்றது.

ஆரம்பத்தில் சூரியன் தான் வளர்ச்சி அடையப் பல தீமைகளை ஒளி நிலைகளாக மாற்றி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் ஆற்றலாகப் பெறுகின்றது.

சூரியன் ஒளிக்கதிராக மாற்றியது போன்று இந்தப் பிரபஞ்சத்திலே தோன்றிய ஒரு உயிரணு (நாம்) பல விதமான உணர்வுகளை நுகர்ந்தறிந்து உணர்வினை ஒளியாக மாற்றும் தகுதியான மனிதச் சரீரம் பெறுகின்றது.

மனிதனான நிலையில் அறிந்து... உணர்ந்து... தெளிந்து... தெளிவாக வாழ்ந்திடும் அந்த உணர்வின் தன்மை பெற்ற பின்...
1.சந்தர்ப்பத்தால் நுகரும் தீமைகளை (முதலிலே கூறியபடி) நாம் நுகர நேர்ந்தால்
2.தீமையின் உணர்வுகளுக்கு அழைத்துச் சென்று மனிதனைத் தேய்பிறையாக  ஆக்கிவிடுகிறது.

ஆனால் நாம் அந்த அருள் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்தால் இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உடலுக்குள் ஒளி என்ற உணர்வினை உருவாக்கி
1.இந்த உடலைப் பிளந்து விட்டு
2.உயிர் எதனின் வலுப் பெற்றதோ அங்கே
3.அந்தச் சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்கின்றது.

சப்தரிஷி மண்டலம் வெளிப்படுத்தும் உணர்வினை உணவாக எடுத்து ஒளியின் சக்தியாக மாற்றிடும் சக்தி பெறுகின்றது.

சூரியன் அழியலாம்... ஆனால் உயிரணுக்வாகத் தோன்றி உலகின் உணர்வை அறிந்து தனக்குள் ஒளியின் உணர்வாக உருவாக்கி விட்டால் அந்த ஒளியை எவையும் அழிக்க முடியாது.

1.ஆகவே நஞ்சினை வென்றிடும் உணர்வு பெற்ற இந்த உயிர்
2.இந்த உடலையே ஒளியாக மாற்றிடும் உணர்வின் துணை கொண்டு
3.அந்த ஒளியின் தன்மையையே உணவாக உட்கொண்டு
4.பேரொளியை வெளிப்படுத்தும் நிலை அடைகின்றது.

அந்த நிலையை மனிதனாகத் தோன்றிய நாம் ஒவ்வொருவரும் அடைதல் வேண்டும்.