ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2019

பச்சைக் காய்கறிகளையும் கீரைகளையும் மாமிசங்களையும் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறோம்...! அதிலுள்ள சூட்சமம் என்ன...?


உதாரணமாக ஒரு பருப்பை வேக வைத்த பின் அதை மண்ணிலே போட்டால் திருப்பி முளைக்காது. ஒரு கீரையை வேக வைத்த பின் அதை மண்ணிலே போட்டால் அது திருப்பி முளைக்காது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

ஆகவே நாம் காய்களையோ கீரையைப் பச்சையாகச் சாப்பிட்டோம் என்றால் நம் உடலில் அந்தப் “பச்சை மணங்கள் தான்” வரும்.

நாம் ஏற்கனவே புழு பூச்சிகளாக இருந்து பச்சை இலைகளை உணவாக உட்கொண்டவர்கள் தான். அதிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்து இன்று மனிதனாக வளர்ந்துள்ளோம்.

மனிதனாக வளர்ந்த பின் நம் உடலில் உள்ள அணுக்களுக்கு பச்சைக் காய்கறிகளை உணவாகக் கொடுத்தால் அந்த உணர்வின் அணுக்களாக மாற்றி உடலிலே வளர்கின்றது.

பின் அது முதிர்ந்து மனித உடலை உருவாக்கிய அணுக்களுக்கு எதிர் நிலையாகி அதுவே நோயாகி விடுகின்றது. உடலை விட்டுப் பிரிந்த பின் இந்த உயிர் அடுத்து எங்கே செல்லும்...?
1.நம் உயிரான்மா காய்கறிக்குள் புகுந்து
2.அந்தக் காய்கறியை உணவாக எடுத்துப் புழுவாகப் பிறக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம்...? பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட்டால் அடுத்து நாம் பிறவி இல்லா நிலை பெறுவோம். சமைத்து வேக வைத்துச் சாப்பிடுவது இல்லை. பச்சையாகவே சாப்பிடுகிறோம் என்று சொல்கிறோம்.

அதே மாதிரி மற்ற உயிரினங்களின் மாமிசங்களை நாம் உணவாக உட்கொள்ளும் போது நம் உடலில் உள்ள அணுக்களில் அந்த “உயிரினங்களின் ரசங்கள்” அதிகமாகச் சேர்ந்து விடுகிறது.

மாட்டுக் கறியை அதிகமாகச் சாப்பிட்டோம் என்றால் அடுத்து மாட்டின் ஈர்ப்புக்குள் இந்த உயிர் நம்மைக் கொண்டு போய் விட்டுவிடும்.
1.மாட்டை ருசியாகச் சாப்பிட்டாய் அல்லவா.
2.நீ அங்கே போய்ப் பிறந்திரு...! என்று உயிர் உருவாக்கிவிடும்.

அதே மாதிரி ஒருவரை அடிக்கடி வேதனைப்படுத்தி அந்த வேதனை உணர்வை நுகர்ந்தால் அந்த உணர்வுகள் உடலிலே வளர்ந்து அதிகமான பின் உடலை விட்டுச் சென்ற பின் என்ன செய்யும்...? 

பாம்பு மற்ற உயிரினங்கள் மீது விஷத்தை பாய்ச்சி அதைத் தன் உணவாக உட்கொள்கின்றது. ரசித்து அதை உணவாக உட்கொள்கின்றது.

அதைப் போல் இன்று நாம் மனிதனாக இருக்கின்றோம். பிறிதொருவரை வேதனைப்படுத்தி அதைக் கண்டு ரசித்து நம் உடலுக்குள் அந்த வேதனை உணர்வுகளைச் சேர்த்து கொண்டால் நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் அந்த வேதனைப்படுத்தும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.

அடுத்து நாம் மற்றதை வேதனைப்படுத்தி அதை ரசித்து உணவாக உட்கொள்ளும் பாம்பின் உடலுக்குள் தான் செல்வோம்.
1.இதைத் தான் நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ
2.அது தான் நம்மை ஆட்சி புரியும் என்று சொல்வது.

ஆக எந்தெந்தக் குணங்களை நாம் எடுக்கின்றோமோ... அதில் எதை அதிகமாகச்  சேர்க்கின்றோமோ... அதன் வழி ஆட்சியாகி மற்ற நல்லவைகளை வளர விடாதபடி அது தன் சாம்ராஜ்யத்தைப் பெருக்கத் தொடங்கி விடுகின்றது. 

கோபம் என்ற உணர்வின் தன்மையை நம் உடலிலே பெருக்கி விட்டால் அது மற்றதை அடக்கி ஆட்சி புரியும். அந்தக் கோபத்தின் உணர்வு நமக்குள் வளர்ந்து அதிபதியாகிவிடும். இப்படி எந்தெந்தக் குணத்தை எடுக்கின்றோமோ அது எல்லாம் நமக்குள் வளர்ந்து கொண்டே வரும்.

ஆனால் நாம் எப்படி வளர வேண்டும்...?

அகஸ்தியன் நஞ்சை வென்று தனக்குள் மகிழ்ச்சி என்ற உணர்வை ஊட்டி அதை உணவுடன் கலந்து இயற்கையில் விளைந்த நிலைகளை எல்லாம் வேக வைத்து மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக மாற்றிச் சென்றவன்.

அவன் மனிதனாக இருந்தான். மனித வாழ்க்கையில் முழுமை அடைந்து பிறவி இல்லா நிலை அடைந்து விட்டான். இன்று ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.

அவனைப் பின்பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மையை எவர் எவர் நுகர்ந்தனரோ அவர்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் ஆறாவது அறிவை ஏழாவது நிலையாக ஒளியாக மாற்றிக் கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்தும் வளர்ந்து கொண்டு உள்ளார்கள்.

அக்காலத்தில் அத்தகைய உண்மையின் உணர்வை அறிந்தவர்கள் எல்லாம் அங்கே சென்றார்கள்.

ஆகையினால் பச்சையாகக் காய்கறிகளைச் சாப்பிட்டாலும் மாமிசங்களை வேக வைத்துச் சாப்பிட்டாலும் நாம் மீண்டும் மீண்டும் இந்த உடல் பெறும் நிலையாக “பூமிக்குள் தான் சுழன்று கொண்டிருக்க முடியும்...!” இதிலிருந்து மீள முடியாது.

1.இன்னொரு உடல் பெறக் கூடாது என்றால்
2.அந்த அகஸ்தியனைப் போன்றே நாமும் நஞ்சை வென்று
3.இயற்கையில் விளைந்ததை எல்லாம் வேக வைத்து மாற்றி
4.உயிருடன் ஒன்றிய அழியா ஒளிச் சரீரம் பெறுதல் வேண்டும்.