ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 19, 2024

சூரியக் குடும்பத்தின் ஜாதகம்

ஜீவன் பெற்று கோளின் தன்மை ஆனாலும் சந்திரன் பூமியின் அணைப்பிலே தான் ஓடுகின்றது. பூமியின் அணைப்பிலே ஓடினாலும் சூரியனின் ஒளி பூமியில் பட்டு அதனுடைய நிழல் படும்பொழுது சந்திரனை முழு நிலவாக ஆக்குவதில்லை.

சூரியனின் ஒளியை பூமி தனக்குள் ஒரு பகுதி அதிகமாக எடுத்துக் கொள்கிறது. அத்தகைய பூமியின் நிழல் சந்திரனில் படும் பொழுது இருள் சூழ்ந்த நிலையாக அங்கே வளர்கின்றது.

இருப்பினும் இந்த சூரியனின் நிலைகள் கொண்டு மற்ற கோள்களின் சக்தியை அது உணவாக எடுக்கும் பொழுது புதனோ மற்ற கோள்கள் வரப்படும் பொழுது சூரியன் நேர் பார்வையாக வரும் நேரத்தில் பூமிக்கு நேரே அந்தக் கோள்கள் மறைத்துக் கொண்டால்
1.பூமிக்கு வரும் செவ்வாய்க் கோளின் உணர்வின்… அதாவது நாதங்களை எழுப்பும் உணர்வுகள் இதற்குக் கிடைப்பதில்லை.
2.ஒரு நிமிடம் மாறி விட்டால்… மனிதனாக விளைந்த நாத சுருதிகள் மாறும் பொழுது
3.இந்த மனிதனுக்குப் புத்தி பேதம் ஆகிவிட்டது என்று சொல்வார்கள்…
4.நாதங்கள் சுருங்கி விடுவதும்… பின் பல நோய்களும் வந்து விடும்.

மெய் ஞானிகள் இதை எல்லாம் தெளிவாக உணர்த்திய நிலைகள்.

ஒரு சூரியக் குடும்பத்தில் ஒதுங்கிய கழிவுகளை “வால் நட்சத்திரம்” என்று சொல்வார்கள்.

மற்ற நட்சத்திரங்களுடன் சேர்ந்து மற்ற கோள்களுடைய நிலைகள் பூமிக்குள் வராதபடி இந்த உணர்வின் அலைகள் உந்தப்பட்டு பிரபஞ்சமே அல்லாதபடி “ஒரு தனி இடத்திலே” அது ஒதுங்கி நிற்கும்.

ஒரு கட்டிடத்திலே சுழிக் காற்று அடித்தால் தூசிகள் எப்படி ஒரு பக்கம் ஒதுங்குகின்றதோ அது போன்று
1.மற்ற கோள்கள் உமிழ்த்தும் (கழிக்கும்) நிலைகள் அது எதனுடைய ஈர்ப்புக்குள்ளும் செல்லாதபடி
2.ஒவ்வொரு சூரிய குடும்பத்திலும் இடைப்பட்ட இடத்திலே சுழன்று கொண்டிருக்கும்.

மற்ற ஈர்ப்பு எதுவும் இல்லாதபடி “கடும் நஞ்சின் தன்மையாக” அடைந்திருக்கும் நேரத்தில்… அது போகும் பாதையில் ஏதாவது சூரியக் குடும்பம் எதிர்பட்டால் என்ன ஆகும்…?

பிற மண்டலத்தில் இருந்து குவிக்கப்பட்ட தூசிகளைப் போன்றே அதற்குள்… சூரியன் ஈர்ப்பு காந்தத்தால் இதனின்று கலந்த அந்த நிலைகளும் வால் நட்சத்திரத்தில் உண்டு.

சூரியன் அதைக் கலந்து இழுக்கப்படும் பொழுது சூரியனுக்குள் சென்றால் அந்த நஞ்சினை மாற்றி அமைத்து விடுகின்றது

ஆனால் நட்சத்திரத்திங்களுக்கும் சிக்காது அதிலிருந்து விலகி இடைப்பட்ட நேரங்களில் கோள்கள் இருக்கும் பக்கமாகச் சென்று அதற்குள் விழுந்தால் அங்கே “எரிமலையும்… வெடிப்பும்” ஏற்படும்.

அதே சமயத்தில் கோள்கள் தடுக்காதபடி நம் பூமி போகும் பாதைக்குள் நுழைந்து… பூமியின் ஈர்ப்புக்குள் வந்தால் அது எந்தப் பிரதேசமோ அங்கே அரசாட்சி செய்யும் அரசனுக்கு “ஆகாது…” போய்விடும்.

அதாவது
1.நஞ்சின் தன்மையாக அங்கே கலக்கப்பட்டு
2.அந்த நாடுகளுக்குள் மக்களிடையே கலவரங்களும் சோர்வடையும் நிலைகளும்
3.அரசர்களுக்குள் சிந்திக்கும் திறன் இழக்கப்பட்டு அதனால் நாட்டுக்கு நாடு போர் முறைகளும் மூளும்.

பூமிக்குள் வரும் போது நடு மையத்தில் கொதிகலனாக ஏற்பட்டு சிறுகச் சிறுக விளைந்து சில பகுதிகளில் பூகம்பங்கள் கிளம்பும். அதே சமயத்தில் ஹைட்ரஜன் என்று நீருக்குள் இந்தச் சக்திகள் கலந்து மோதப்படும் பொழுது சுழல் காற்றாக உருவாகிப் புயலாக மாறிவிடும்.

இதுகள் எல்லாம் “விஞ்ஞானிகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளை” நான் (ஞானகுரு) சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு விண்ணுலக ஆற்றலும் அதனின் அணுக்களின் செயலும் எவ்வாறு உருவானது…? என்பதை என்னால் அறிய முடிந்தது.

அதனின்று வடிக்கப் பெற்று உருப்பெறச் செய்யக்கூடிய தகுதி பெற்ற மனித உடலில்… இன்று ஜாதகம் என்ற பெயரால் மதம் இனம் குலம் என்ற பெயரால் நாம் வடித்துக் கொண்ட நிலைகள்
1.இந்த உடலில் இருந்து ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை இழந்து
2.மனித உருவையே அழித்து விடும் எண்ண உணர்ச்சிகள் வளர்ந்து விட்டது.

மதம் இனம் மொழி என்ற பேத நிலைகளாகி… நஞ்சின் தன்மை சுவாசிக்கப்பட்டு… பச்சிளம் குழந்தைகள் தவறே செய்யாத நிலை இருந்தாலும்… வெறி கொண்டு கொன்றிடும் நிலை வளர்ந்து கொண்டுள்ளது.

மனிதனுடைய உடலுக்குள் நஞ்சு கலந்து கலந்து அழித்திடும் உணர்வுகள் ஊடுருவிச் சென்று இந்தப் பூமியே முதுமை அடைந்து “மனிதனை மனிதனே கொன்று புசிக்கும் நிலை வந்து விட்டது…”

1.மனிதனைக் கொன்று அவன் வைத்திருக்கும் செல்வத்தைத் திருடுகின்றனர்
2.ஒரு மனிதன் கையில் சிக்கினால்… தன் பசியைப் போக்க அவனையே ரோஸ்ட் செய்து சாப்பிடும் நிலையும் இன்று வந்துவிட்டது.