ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 22, 2024

“மேல் நோக்கிய சுவாசத்தால்” மட்டும் தான் உயர் நிலை பெற முடியும்

 

பரமாத்மா என்று உரைத்திட்ட உரையின் உட்பொருள் என்ன…?

“நிலைபெற்ற நித்திய நிலை எதுவோ” அதுவே பரவிப் படர்ந்த… எங்கும் நிறைந்த மின் காந்தமாக… ஒளி காந்த சக்தியாக வியாபித்து… நிறம் மணம் குணம் என்ற வகையில் உதிக்கும் கோடான கோடி உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து…
1.பிறிதொன்றை உருவாக்கிச் செயல்படும் சூட்சமத்துள்
2.மூலம் எதுவோ அதுவே பரமாத்ம தத்துவம்.

செயல்படும் செயலைப் பிரம்மம் என்று ஒளியின் ஊடே பரவிப் படரும் “உஷ்ணம்” செயலுரும் தன்மையால் ஆத்ம நிலை பெறும் உயிரணு… தன் எண்ணம் கொண்ட சுழற்சியில் “உயிராத்மாவாகின்றது…”

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள நுண் மின்காந்த சக்தியில் “தன் இச்சையாகப் பெற்றிடும்…” ஈர்ப்பின் நிலை கொண்டு பெற்றிடுவது ஆத்மா.

அதுவே பேரருள் செல்வம் என்றிட்ட ஆத்மாவின் “மூலம்…!”

உயிரணு தன் சுழற்சியின் செயல் நிலையால் எண்ணம் கொண்டிட்ட சுவாசமாக… தான் எவ்வித அமில குணங்களில் உதித்ததுவோ அதற்கொத்த அமிலக் கூறுகள் சுவாசம் கொண்டு ஈர்த்து… எண்ணம் கொண்ட சுழற்சியில் வலுப்பெற்று… அவ்வலுவின் வலுவால் உயரிய ஜீவன் கொண்ட ஜீவாத்மாவாக… தன் எண்ணத்திற்கொப்ப பிறப்பிற்கு வருகின்றது.

பிறப்பின் ஜீவித பரிணாம முதிர்வு கொண்டிட்ட பஞ்சபூத இயற்கை தத்துவ வளம் பெற்றிட்ட நம் சூரியக் குடும்பத்தில்
1.இந்தப் பூவுலகில் ஜீவாத்மாவாகப் பிறப்பிற்கு வரும் தொடரில்தான்
2.ஆத்மா அனுபவ விசேஷ காரிய நிலைகளுக்கு உட்பட்டு
3.அலசிப் பிழிந்த தன் எண்ணத்தின் உயர்வால்
4.பிறப்பிற்கு வந்திட்ட புவியீர்ப்பின் பிடிப்பிலிருந்து விடுபடும் பயன்
5.மேல் நோக்கிய சுவாசத்தால் நன்னிலை பெறுவதே.

“ஆதிசக்தி எனும் பேரருள் செல்வத்தில் கலந்து பிறவாமை பெறுவது…” உதித்திட்ட ஜீவனின் ஆக்கம்.
1.மனிதன் என்ற பிறப்பின் தொடருக்கு வந்திடும் உயிரணு ஜீவ பிம்ப சரீரம் பெற்றிட்டு
2.தன் வளர்ச்சியின் செயலில் தன்னைத்தான் உணர்ந்திடும் பக்குவம் பெற்று
3.தன்னை உணர்ந்திடும் தியானத்தின் மூலம்.. ஒழுக்க நன்நெறியாக வாழ்வியலில் பண்பு நிலை கொண்டு
4.மனம் பக்குவப்படுத்தப்பட… தூண்டப்படும் அறிவின் ஆற்றல் கொண்டு “சுவாச கதியில்” அறிந்திடுவது முதல் படி.