ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2024

“மறைபொருள் விளக்கம் பெறும் கட்டத்தில் இருக்கின்றோம்…!”

வரலாற்றின் தொடர்பு தொடர்ந்து வந்தாலும் அதனுள் காட்டப்படும் சூட்சுமப் பொருட்கள்… “காரண காரிய விளக்கங்கள்” அதனின் ஆய்வில் சிந்தனை செயல் கொண்டிடல் வேண்டும்.

ஏனென்றால் “அனைத்துமே” பால்வெளி எனும் ஆகாய சம்பந்தம் கொண்டது…!

ஜீவ பிம்ப சரீரம் பெற்றிடும் தொடர்பில்
1.பூமியின் ஈர்ப்புப் பிடிப்புக்குள் அகப்பட்டுவிடும் ஜீவன்
2.தேகம் கொண்ட செயலாக ஆனந்த இலயத்தை மாயை மறைக்கின்றது.

வித்து வித்துக்களாக விளைந்திடும் நிலையில்
1.அவ்வானந்த இலயத்தை நாட்டம் கொண்டிடும் மனது
2.”ஆகாய சம்பந்தம்” கொள்கின்றது.

வித்துக்கள் பூமியில் ஊன்றப் பெற்று முளைத்து தழைத்து… பின் கிளைத்து உயர்ந்தோங்கல் எனும் மரமாக வளர்ந்துற்றாலும்… ஊன்றப்பட்ட அதே வித்தே கனிகளாகத் தோன்றி வித்துக்கள் அதன் அடக்கம் கொண்டு தோன்றிட்டாலும்… “மரத்தின் கனியில் உண்டாக்கிய வித்துக்கள் ஆகாய சம்பந்தம் கொண்டது…”

அந்த வித்துக்கள் மரத்துடன் ஒன்றிக் கனிந்து முதிர்ந்த நிலை பெற்றவுடன் அந்த மரத்திலிருந்து வேறுபட்டு பூமிக்கு வருகின்றது. காரணம் மரத்தின் தொடர்புடன் ஆகாய சம்பந்தம் கொண்டது.

அந்த மரமானது புவி ஈர்ப்பின் சக்திக்குள் அடக்கம் பெற்றிட்டதால்… கிளைதனில் விளைந்த “ஆகாய சம்பந்த வித்து…” ஈர்ப்பின் செயலில் வித்தாக வருகின்றது.

1.சரீரம் பெற்ற மனிதன் இதே சூட்சுமத் தத்துவங்களில் தான் பிறப்பின் நிலை கொள்கின்றான்
2.தேகம் கொண்ட பின்… ஆனந்த இலயம் கெட்டது
3.தன்னை உணர்ந்த பொழுது… அப்பேரானந்த இலயம் ஆட்கொண்டது.

வளர்ச்சி கொண்டிட்ட செயல் அனைத்தும் ஜீவனின் வளர்ப்பு தான்.

1.ஞானக்கண் விழிப்பால் பிடரிக் கண் தெளிந்த பொழுது
2.கவனம்… மூலாதார அக்கினியில் இலயிக்கின்றது.

இங்கு தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

மூலாதாரத்தின் சிவலிங்க அணுக்கள்… நீர் சக்தி எனும் விந்து ஒளி கொண்டு மேல் எழுகின்ற செயல் “மூலாதாரத்தில் இலயித்த கவனம்” மேல் எழும்புகின்ற ஊர்த்துவ சக்தியின்.. “உந்துகின்ற எண்ணம் அதுவும் கவனம்…”

மூலமும்… ஆண் பெண் குறி ஸ்தானங்கள் கொண்ட இடமும்… மூல ஆதாரம் எனும் இடமாகத் தோன்றிடும்… தோன்றி நிலை கொண்டிடும் ஜோதி சொரூப சக்தி… மேல் எழுந்திட சிரசின் நெற்றிப் பகுதி என உரைத்திடும் சதாசிவ மண்டலம்... அந்த மண்டலத்தின் ஈர்ப்பிற்கே ஊர்த்துவமாகச் செல்கிறது.

1.நாபியில் நிலை பெற்றுப் பின் இதயத்தில் நிலை கொள்கின்றது
2.பின்னும் மேல் எழுந்து கண்டத்தில் கடைவாய்ப் பற்கள் அமைவு கொண்ட இடத்தில் மறைமுகச் சக்தியில் கலந்து “தேஜோமயமாக” விளங்குகின்றது.
அ3.ச்சக்தியே அறுகோணச் சக்கரத்தில் நடித்திடும் சிவத்துள் விளக்கம் தோன்றிட
4.முதலில் கண்ட சக்தியுள் கலந்து எழும் சக்தியே நாவின் அடிப்பாகத்தில் ஓ…ம் எனும் பிரணவத்துள் கலந்து
5.ஓமின் அந்த ஒலி நாதத்தை மேலெழும் சக்தியாக… நெற்றிப் பொட்டின் அறுகோணத்துள் அமைவுறச் செய்திடல் வேண்டும்.

ஓ…ம் என்னும் ஒலி நாதம் நாவினுள் கிளர்ந்திடும் பொழுது… உதடுகள் அசைவதும் அன்றி பிரிந்திடவோ செயல் கொள்ளல் தகாது.

1.நெற்றிப் பொட்டில் ஆரோகணிக்கும் அச்சிவசக்தி தியானத்தின் வலு வீரியம் பெற்றிடுங்கால்
2.சரீரத்தில் இருக்கும் கோடான கோடி உயிரணுக்கள் உயிராத்ம சக்தியின் வசப்பட்ட எண்ணத்தின் செயலுக்கொப்ப
3.இயங்கிக் கொண்டிருக்கும் உயிர் சக்தி எவ்விடத்திலும் சென்று மீண்டிடும் “சூட்சும சித்து” இதனால் அடக்கம்.

தெளிவாக விளங்கிட இதற்கு ஒரு சித்திரம் காட்டிடல் வேண்டும். நிறைகுடம் தளும்பாது.

கடைபிடிக்கப்படும் காரியங்களில்…
1.எண்ணத்தின் சிதறல் ஊசி முனை அளவாக இருந்தாலும்
2.அந்தச் சிறு துவாரம் வழியாக… பெற்றிடும் சக்தியின் உயர்வைக் குறைத்து விடும்.

அதே போல்…
1.சிதறுகின்ற எண்ணங்களின் அந்தச் சிறு வழியை அடைத்து விட்டால் நிறை குடமாக ஆகும்
2.வாழ்வின் எந்த நிலையிலும்… எத்தனை சந்தர்ப்பங்கள் வசமாயினும் நிறை குடம் தளும்பிடாது.