ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 24, 2024

மகரிஷிகள் காட்டிய வழி நடந்தால்… வாழ்க்கையில் வேதனைப்பட வேண்டியதே இல்லை

மனித வாழ்க்கையில் கஷ்டங்களும் சிரமங்களும் ஏற்பட்டால் அதைத் தீர்க்க “சாங்கிய சாஸ்திரத்தின்படி” இன்று முயற்சிக்கின்றார்கள்.
1.இங்கே கேட்டால் எனக்கு நல்லதாகும்… அங்கே கேட்டால் என்னுடைய கஷ்டங்கள் தீரும்
2.இன்ன இடத்தில் அல்லது இன்ன ஆலயத்தில் யாக குண்டம் இறங்கினால் எனக்கு நல்லதாகும்
3.கற்பூரத்தைக் கொளுத்தினால் எனக்கு நல்லதாகும் என்று
4.தனக்குள் எண்ணும் இத்தகைய எண்ணங்களை வலுக்கூட்டி விட்டு…
5.இன்றைய நிலைகளுக்கு (பிழைப்புக்கு) இதைப் பெற்றால் நல்லதாக இருக்கும் என்று எண்ணுவது “அது தீமையே…”

நெருப்புக்குள் ஒரு பொருளைப் போட்டால் அந்த மணம் சிறிது சிறிது நேரத்திற்கே இருக்கும்… அடுத்த கணம் மறைந்துவிடும்.

அதைப் போன்று தான் நம் உயிரின் நிலைகள் கொண்டு மேலே சொன்ன வழியில் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் பொழுது… இந்த உணர்வலைகள் படரும்… நினைவுகளைக் கூட்டும்… ஆனால் அடுத்து அது எல்லாமே அழிந்துவிடும்.

ஆனால் ஞானிகள் காட்டிய சாஸ்திர விதிப்படி நாம் செயல்படுவோம் என்றால்
1.மகரிஷிகள் சென்றடைந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.
2.அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ வேதனைப்படத் தேவையில்லை
3.பொருள்களை (செல்வம்) நாம் விரயமாக்க வேண்டியது இல்லை.
4.எங்கெங்கோ தேடிச் சென்று அவர் செய்வாரா…? இவர் செய்வாரா…? என்ற எதிர்பார்ப்பில்
5.மற்றவர்களை நாட வேண்டியதில்லை… அவர்களை எண்ணி ஏமாறவும் வேண்டியதில்லை.

ஞானிகள் உருவாக்கிக் கொடுத்த சாஸ்திர விதிப்படி ஒவ்வொரு ஊரிலும் தெருக்களில் மாரியம்மன் உண்டு… தெருவின் மூலைகளில் விநாயகனையும் அமைத்து இருப்பார்கள்.

முறைப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா…! என்று எண்ணினாலே போதும்…! மெய் ஞானிகள் காட்டிய சாஸ்திரங்களின் உண்மைகள் உங்களுக்குள் பதிவாகி
1.உங்கள் எண்ணங்கள் வலுவாகி… மகரிஷிகளின் உணர்வை உங்களுக்குள் வலுப்பெறச் செய்து… தீமைகளைச் சுட்டுப் பொசுக்க உங்களால் முடியும்.
2.மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் நுகரப்படும் பொழுது உங்கள் உயிரே கடவுளாக நின்று
3.தீமைகளைப் போக்கும் சக்தியாகப் பரப்பித் தீமையற்ற உணர்வாக மாறும்.

துருவ மகரிஷியுடனும் சப்தரிஷி மண்டலங்களுடனும் உங்கள் நினைவு கூர்மையாகி (கூர்மை அவதாரமாக) அது வலுவாகும் போது வராகனாக மாறி தீமையான நிலைகளைப் பிளந்து விடும்.

என்றும் அழியாத நிலைகள் கொண்டு பெரு வீடு பெரு நிலை என்ற நிலைகளில் தெளிவாக நாம் அடைய முடியும். ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள்.

மனிதனாக உருவாக்கிய உயிர் நீங்கள் நுகர்ந்த உணர்வின் அறிவையே எண்ணங்களாக “ஓ…” என்று ஜீவனாக்கி… இயக்கி… உடலாக மாற்றிவிடுகிறது.

மனிதனான பின் எதைச் செய்ய வேண்டும் என்ற நிலையைக் கண்டுணர்ந்த மகரிஷிகள் தனக்குள் வலிமைமிக்க சக்திகளைப் பெற்று தீமைகளிலிருந்து நீக்கிடும் நிலைகளைக் காட்டினார்கள்.
1.அதை நாம் அனைவரும் எளிதில் பெற முடியும்
2.தீமைகளை நாம் எளிதில் அகற்ற முடியும்
3.அந்த மகரிஷிகளுடன் ஒன்றாக இணைய முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டு உங்கள் வாழ்க்கையைச் செயல்படுத்துங்கள்.