ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2024

திரும்பும் இடத்தில் எல்லாம் விநாயகரையும் மாரியம்மனையும் ஞானிகள் வைத்ததன் நோக்கம் என்ன..?

விஞ்ஞான அறிவு வளர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் தான் வாழ்ந்திட… இளம் குழந்தைகளைத் திருடிச் செல்கின்றார்கள்.

திருடுவதற்கு எந்தப் பொருளும் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் அறியாத குழந்தைகளை ஏமாற்றிக் கடத்தி அழைத்துச் சென்று… கண்களை எடுத்து வியாபாரம் செய்கின்றார்கள்… மூளையையும் எடுக்கின்றார்கள்.

முதுமை அடைந்த மனிதனை இளமையாக்குவதற்கு அதை இன்ஜெக்ஷன் ஆக உருவாக்கப்பட்டு பொருளுக்குத் தக்கவாறு விஞ்ஞானிகள் இவ்வாறு செயல்படுத்துகின்றார்கள்.

1.பொருள் இருந்தால் போதும்
2.இந்தப் பூமியிலே வாழ்ந்தால் போதும்
3.இன்றைக்கு எனக்கு மகிழ்ச்சி தேவை என்ற நிலைகள் கொண்டு
4.ஒவ்வொரு மிருகமும் மற்றொன்றை எப்படி இரக்கமற்று வீழ்த்தித் தன் உணவுக்காகப் புசிப்பது போன்று தான்
5.இன்றைய மனிதனுடைய செயல்கள் வந்து விட்டது.

மிருகங்களோ ஒன்றை ஒன்று அடித்தாலும் அது பரிணாம வளர்ச்சியில் உள்ளது ஆனால் பரிணாம வளர்ச்சியில் வென்று முதிர்ச்சி பெற்றவன். இது போன்ற மிருக நிலைகளுக்கு நம்முடைய செயலாக்கங்கள் சென்றால் மீண்டும் இழி நிலையான கீழ் நிலைக்குத் தான் சென்ல்வோம்.

பௌர்ணமி தேய்ந்து கடைசியில் அது முழுமையாக இருள் சூழ்கின்றது. மீண்டும் சிறுகச் சிறுக ஒளி பெற்று மற்ற கோள்கள் மறைப்புகளிலிருந்து விடுபட்டு பூரண நிலைகள் பெறுகின்றது.

இதைப் போல மனிதன் மற்ற உணர்வின் எண்ணங்களுக்கு அடிமையாகி அதன் வழியில் தான் கீழ் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறான்.

இன்று உயிரைக் காக்கக்கூடிய படித்த டாக்டர்களாக இருந்தாலும் அவர் கண்டுபிடித்த விஞ்ஞான நுட்பங்கள் கொண்டு வருபவருடைய நோய்களை அறிந்து உறுப்புகளை மாற்றி குணப்படுத்தக்கூடிய வல்லமை உடையவர்களாக இருந்தாலும்
1.தொழில் அடிப்படை என்று வரும் போது பொருள் பணம்) வேண்டும் என்ற நிலையே அதிகமாக வளர்ந்து விட்டது.
2.பண வசதியற்றவன் ஒருவன் சிக்கினால் அவன் நோய் தீர்க்க என்று வரும் போது அவனுக்கு நோயே இல்லை என்றாலும்
3.அவனுக்குத் தெரியாமலே அவனுடைய உடலில் இருக்கக்கூடிய நல்ல உறுப்புகளை எடுத்து… கடைசியில் அவன் உயிரை வாங்கி விடுகின்றார்கள்.

இந்த அளவிற்கு விஞ்ஞான அறிவுகள் சென்றுவிட்டது.

தான் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தாலும் வாழ வேண்டிய மற்றவர்களின் உடல் உறுப்புகளைத் திருடி விற்கும் நிலைக்கு வந்து விட்டார்கள். திருடியதற்காக… கொடுக்கும் பணத்தை ஏற்றுக் கொள்கின்றான்

சிந்தித்து செயல்பட்டு மனிதனைக் காத்திடும் நிலைகள் கொண்டு வளர்ந்த டாக்டர்கள் இதையெல்லாம் செய்ய அனுமதிக்கிறார்கள். அதைப் பின் தொடர்ந்து நாட்டைக் காக்க வேண்டும் என்ற அரசியல்வாதிகளும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றார்கள்.

1.இந்த மனித உடல் வாழ்க்கை தான் சிறந்தது என்று எண்ணுகின்றனர்
2.ஆனால் உலகை விட்டுச் சென்றால் எங்கே போகின்றோம்…? எந்த நிலையில் இருப்போம் என்பதை அறவே மறந்து விட்டார்கள்.

காரணம்… இந்த வாழ்க்கையில் எதையெல்லாம் யாரையெல்லாம் எப்படி எல்லாம் இம்சிக்கின்றோமோ இம்சைப்பட்டவருடைய கண் கூர்மையான நினைவாற்றல் கொண்டு யாரால் ஏற்பட்டது என்று எண்ணப்படும் போது
1.யார் இத்தகைய திருட்டுத் தொழிலைச் செய்தாலும் அந்த உணர்வலைகள் ஊடுருவி
2.இந்த உடலுக்குள் இருக்கும் உயிர் அதிலே இருக்கக்கூடிய காந்தங்கள் நுகரப்பட்டுப் பதிவு செய்து
3.அவன் பட்ட இம்சையின் உணர்வுகள் உடலுக்குள் புகுந்து “அதே இம்சையைக் கொடுக்கும்…” என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

மற்றவர்களை இம்சிக்கலாம் அதை ரசிக்கவும் செய்யலாம் ஆனால் இந்த உணர்வுகள் நமக்குள் விளைந்த நிலைகள் கொண்டு உயிருடன் ஒன்றச் செய்து “நீ இதை அனுபவி…” என்ற நிலையில் இதைப் பல காலம் வேதனைப்படும்படியாக வரும்.

இந்த நிலையிலிருந்து மீட்டிக்கொள்ள… ஒவ்வொரு நொடியிலும் மகரிஷிகள் காட்டி அருள் வழியில் வழி நடந்திடல் வேண்டும்.

பக்தி என்ற நிலையில் மூட நம்பிக்கை கொண்டு… அசுரத்தனமான எண்ணம் கொண்டு… தெய்வத்திற்கு ஒரு குழந்தையைப் பலி கொடுத்தால் என்னை அந்தத் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும்… மற்ற உயிரினங்களைப் பலி கொடுத்தால் தெய்வம் காக்கும் என்ற நிலையிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள்.

கல்வியில் சிறந்து மனிதனைக் காத்திடும் நிலை வந்தாலும்…
1.தன்னைக் காத்திட “எதை வேண்டும் என்றாலும் செய்யலாம்…!” என்று
2.பிறருடைய துன்பத்தை அறியாது துன்பத்தை உருவாக்கும் நிலை தான் இன்று உருவாகிக் கொண்டுள்ளது.

அன்று ஞானிகள் ஊர் தோறும் முச்சந்தியிலே விநாயகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஒவ்வொரு தெரு மூலையை எடுத்துக் கொண்டாலும் மாரியம்மன் தெய்வத்தை வைத்திருக்கின்றனர்.

நாம் சிந்தித்துப் பார்க்கும் நேரங்களில்
1.தன்னை அறியாது ஏற்படும் தவறுகளையும்
2.நல்லது செய்தாலும் அதிலே இன்னொரு தீய விளைவுகள் எப்படி மாறி (மாரி) வருகின்றது…? அதை எப்படி நீக்க வேண்டும்…? என்பதை உணர்த்துவதற்கு
3.மாரியம்மனையும் விநாயகரையும் திரும்பும் பக்கம்… நினைக்கும் பக்கம்… பார்க்கும் பக்கம் எல்லாம் உருவாக்கிக் கொடுத்தார்கள் அன்றைய ஞானிகள்.

ஆனால் பின் வந்தோர் அனைவரும் என்ன செய்தார்கள்…?

தன்னக் காத்திட பூதகணங்களாக உருவாக்கி… அந்தப் பூதங்கள் தான் நம்மை காக்கும் என்று பலி பீடங்களை அமைத்து உயிர்ப் பலிகளை இடச் செய்து அது தான் நம்மைக் காக்கும் என்று அசுர உணர்வுகளை வளர்த்துக் கொண்டு மனித நேயமற்ற நிலைகளுக்குக் கொண்டு சென்று விட்டார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியன் நஞ்சு உருவாகும் உணர்வின் எண்ணங்களை அழித்து நஞ்சினைத் தனக்குள் அடக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்றான்.

விண்ணிலே உருப்பெற்ற உயிரணு பூமியின் ஈர்ப்புக்குள் வந்து உடல் பெற்ற பின் ஒவ்வொரு உடலிலும் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக அடுத்தடுத்து உடல்களை எப்படி மாற்றி வந்தது…?

ஒவ்வொரு நிலையிலும் தான் சுவாசித்த உணர்வுகள் மூஷிகவாகனா… அதாவது எண்ணி எடுத்துக் கொண்ட உணர்வின் மணங்களை நுகர்ந்து
1.அதுவே வாகனமாக இந்த உடலை அழைத்துச் சென்று அந்த உடலைக் காத்திடச் செய்தது
2.காத்திட்ட உணர்வுகளை எல்லாம் வினையாகச் சேர்த்து அதனின் அடிப்படையில் ஞானம் வளர்ந்து
3.அந்த உணர்வுக்கொப்ப உடலை மாற்றி அமைத்து மனிதனாக வந்தது என்பதை உணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வரும் தீய வினைகளை நீக்கி நல் வினையை நாம் எப்படிச் சேர்க்க வேண்டும்…? இந்த உடலுக்குப் பின் எப்படி விண் செல்ல வேண்டும்…? என்பதை சாதாரண மனிதனுக்கும் உணர்த்துவதற்கே திரும்பிப் பார்க்கும் இடங்களில் எல்லாம் விநாயகனை அன்று வைத்தார்கள் ஞானிகள்.