ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2017

பிள்ளைகள் மீது மிகுந்த பாசமாக இருந்து கடைசியில் “வேதனை… வேதனை…” என்று வேதனைப்படும் நிலைக்கு வந்துவிட்டால் அடுத்து “மாடாகத்தான்” பிறக்க நேரும்

நம் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிடுகின்றோம். ஆனால் புகுந்த வீட்டில் பல தொல்லைகள் வருகின்றது.

தொல்லைப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது பிள்ளை மேல் உள்ள பாசத்தால் “பாவிகள்…! என் பிள்ளையை இப்படிச் செய்கிறார்களே…” என்று எண்ணி மிகுந்த வேதனைப்படுவோம்.

வேதனை அதிகமாகிக் கடைசியில் நோயாகி அதே ஏக்கத்திலேயே உடல விட்டுப் பிரியும் நிலை ஆகின்றது. பிரிந்த பின்
1.எந்தப் பிள்ளையைப் பாசத்தால் எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தோமோ
2.அந்த உடலுக்குள் தான் போவோம்
3.அங்கே சென்று இந்த உடலில் பட்ட வேதனையைப் பிள்ளை உடலிலும் உருவாக்கிவிடும்.

பின்… யார் யாரெல்லாம் பிள்ளைக்குத் துன்பம் கொடுத்தார்களோ அவர்களை வெறுக்கச் செய்து வெறுப்பின் நிலைகள் அதிகமாகி பிள்ளை உடலிலும் நோயை உருவாக்கும்.

இப்படி பாசத்தால் வளர்த்த பிள்ளைக்குள் சென்று சீரழிந்த நிலைகளாக நோயாக்கி… “குழந்தையையும் அழித்துவிடுகின்றோம்”.
1.பிள்ளை மேல் மிகுந்த பாசமாக இருக்கின்றோம் என்றாலும்
2.வேதனையுடன் செல்லும் பொழுது
3.பிள்ளையைக் காக்க முடியவில்லை.

இதைத்தான் மெய்ஞானிகள் “சித்திர புத்திரனின் கணக்கு” என்று காவியப்படைப்புகளில் காட்டியுள்ளார்கள்.

சித்திரம் என்பது நாம் கண்களால் பார்ப்பது எல்லாமே “சித்திரம்”.

ஒரு நல்ல படத்தைப் பார்த்தவுடன் மகிழ்கின்றோம். சரியில்லாத படத்தைப் பார்த்தவுடன் முகத்தைச் சுழிக்கின்றோம்…, வெறுக்கின்றோம்.

இதைப் போன்று தான் மற்றவர்களின் செயல்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது அவர்களைப் படமாகப் பதிவாக்குகின்றோம்.

அவர்கள் செய்வது தவறாக இருக்கும் பொழுது அவர்களையே மீண்டும் மீண்டும் எண்ணிச் சுவாசிக்கின்றோம். அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுடன் சத்தாகும் பொழுது சித்திரம்…, “புத்திரனாக… அணுவாக… உருவாகிவிடுகின்றது”.

எந்தக் குணத்தை எண்ணி எண்ணிச் சுவாசித்தோமோ நம் உடலுக்குள் விளைந்து “குழந்தையாக… அந்தக் குணம்” என்னுடன் இயங்கத் தொடங்குகின்றது.

உடலுக்குள் அது விளைந்தபின் என் உயிராத்மாவில் போய்ச் சேர்கின்றது. உயிராத்மாவில் சேர்ந்தபின் அது சித்திர புத்திரனின் கணக்காகப் போய்விடுகின்றது.

ஆகவே பிள்ளை மேல் பாசமாக இருந்து “வேதனை…வேதனை…” என்று வளர்த்தால் அந்தக் கணக்கின் பிரகாரம் தன் உடலையும் வீழ்த்தி பிள்ளைக்குள் சென்று அந்த உடலையும் வீழ்த்தி கடைசியில் மனிதனல்லாத மாடோ மற்ற மிருக உடலாகவோ தான் பிறக்க நேரும்.

இதையெல்லாம்
1.உடலை விட்டுப் பிரிந்து செல்லும் உயிரான்மா
2.அணுவிற்குள் அணு சென்று (ஒரு உடலுக்குள் சென்று) அது எவ்வாறு செயல்பட்டது என்று
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நேரடியாகவே எமக்கு (ஞானகுரு) உணர்த்தினார்
4.என் கண்ணாலேயே பார்க்கச் செய்தார்.

இந்த மனித வாழ்க்கையில் நாம் எப்படி வாழ்கிறோம்…! என்பதைப் படம் பிடித்தது போல் குருநாதர் காட்டியதை யாம் பார்த்ததை உங்களிடம் வெளிப்படுத்துகின்றோம்.

இயற்கையின் உண்மை நிலைகளை குருநாதர் எமக்கு எப்படி உணர்த்தினாரோ அவர் காட்டிய அருள் வழிப்படியே உங்களுக்குள்ளும் உணர்த்துகின்றோம்.

ஏனென்றால் உங்களையறியாமல் ஆட்டிப்படைக்கும் தீய உணர்வுகளிலிருந்து மீண்டு அந்த மெய் ஒளியான மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவதற்காகத்தான் இதைச் செயல்படுத்துகின்றோம்.
1.இந்தக் கணக்குக் கூடினால் இனி அடுத்து…
2.நாம் இன்னொரு உடலுக்குள் செல்ல மாட்டோம்.

ஆகவே நாம் மனிதர்களாகப் பிறந்தவர்கள் உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலையாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும்.

அது தான் மனிதன் அடைய வேண்டிய எல்லை.