ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 15, 2017

நீங்கள் அனைவரும் “உலகுக்கு எடுத்துக்காட்டாக உத்தமஞானிகளாக வரவேண்டும்” என்பதே எமது பிரார்த்தனை

நான் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது சில குடும்பங்களில் சில உடல்களில் என்னென்ன நடக்கிறது? ஏவலினுடைய நிலைகள் என்ன? ஆவியினுடைய நிலைகள் என்ன? என்று அறிவதற்காக வேண்டி மூன்று இலட்சம் பேரைச் சந்திப்பதற்காகக் குருநாதர் எம்மை அனுப்பினார்.

ஏனென்றால் இயற்கையின் நிலைகள் எப்படியெல்லாம் நடக்கின்றது என்ற நிலைகளில் ஏவலினால் இயக்கப்படும் ஆவியின் செயல் தொடர்கள் எப்படி வருகின்றது? என்று நேரடி அனுபவமாக நமது குருநாதர் கொடுத்தார்.

இதையெல்லாம் நேரடி அனுபவமாகக் கண்ட பிற்பாடுதான் உடலுக்குப் பின் ஆவியினுடைய நிலைகள் எப்படி இருக்கின்றது? என்று தெளிவாக உணர்ந்த பிற்பாடுதான் உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்தச் சக்தியைக் கொடுக்கின்றோம்.

எத்தனையோ அவஸ்தைப்பட்டோம்.

1.ஒவ்வொரு மக்களும் எப்படி வாடுகிறார்கள்?
2.இன்னொரு ஆவியின் நிலைகளை வைத்து எப்படி இயக்குகின்றனர்? என்று அறிவதற்காக
3.அன்று குருநாதர் எமக்கு முழு சக்தியும் (FULL POWER) கொடுத்துத்தான் அனுப்பி வைத்தார்.

அந்த உண்மைகளையெல்லாம் தெரிந்து கொண்ட பிற்பாடுதான் இங்கே வந்து மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை ஆரம்பித்தேன்.

1.உங்கள் உணர்வை எப்படி இயக்க வேண்டும்?
2.இயற்கை எப்படி இயக்குகின்றது?
3.உங்கள் உயிரின் இயக்கம் எப்படி?
4.அதன் வழி கொண்டு எப்படி அருள் உணர்வுகளை நுகரவேண்டும்?
5.மகரிஷிகளின் அருள் ஆற்றலை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதனை
உங்களுக்குள் அனுபவ வாயிலாக இப்பொழுது கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம்.

பல ஆயிரம் பேரை இப்படிப் பார்த்து அந்த அனுபவ நிலையில் பெற்ற நிலைகளைத்தான் உங்களுக்கு இப்பொழுது சொல்கின்றோம். நான் ஏதோ சொல்கின்றேன்… நான் கல்வி அறிவு இல்லாதவன்… என்று எண்ண வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில், விண்ணுலக ஆற்றல் அனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.

நமது குருநாதர் எம்மிடம் சொன்னது:-
1.உன் உணர்வின் ஆற்றலை விண்ணிலே… “நீ வீசு…”
2.விண்ணுலக ஆற்றலை “நீ நுகர்ந்து அறிந்து கொள்”
3.அந்த உணர்வின் தன்மையை “உனக்குள் வளர்த்துக்கொள்”
4.தீமையற்ற நிலைகளாக நீ ஆக்கு
5.தீமைகள் இருக்கும் மனிதனுக்கு தீமைகள் நீக்க அது உதவட்டும் என்று
6.என் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ பொருள் தேவைக்கோ அல்ல. எனக்குப் பொருள் ஒன்றும் தேவை இல்லை. புகழும் தேவை இல்லை.

நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும். உங்களையறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும். உங்களின் மகிழ்ச்சியான உணர்வுகள் மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும். அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும்.

இது குருநாதர் இட்ட கட்டளை.

உயிரே கடவுள். அவன் வீற்றிருக்கும் இந்த உடல் ஆலயம். அருள் மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெற்று நம்மைக் காத்து மற்றவரையும் காத்து மெய் உலகைப் படைப்போம். மெய் உலகை உருவாக்குவோம்.

ஒவ்வொருவரும் “உங்களை நீங்கள் நம்புங்கள்.

இதைப் படிப்போர் அனைவரும்
1.உலகைக் காத்திடும் அருள் சக்தி பெற்று
2.அற்புதங்களை நிகழ்த்திடும் அருள் ஆற்றல் பெற்று
3.உலகுக்கு எடுத்துக்காட்டாக… உத்தம ஞானிகளாக… மெய்ஞானிகளாக வளர்ந்திட… எல்லா மகரிஷிகளையும் வேண்டுகின்றோம்.