ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2017

அன்று மெய் ஞான உணர்வு கலந்த மருந்தினைக் கொடுத்து… “மக்களை ஞானியாக்கினார்கள்… மகரிஷிகள்”

உதாரணமாக ஆஸ்த்மா போன்ற நோய்கள் வந்தால் இன்று மருத்துவர்கள் அதற்குண்டான மருந்துகளைக் கொடுப்பார்கள், மூச்சுத் திணறல் எல்லாம் நிற்கும்.

முதலில் ஒரு மாத்திரை கொடுப்பார்கள். பல மாதம் கழித்து இரண்டு மாத்திரை சாப்பிடச் சொல்வார்கள். இந்த மருந்தின் வேகத்தால்  அதிலிருக்கக்கூடிய நஞ்சு கட்டியாக இருக்கும் சளியை உடைக்கும் தன்மை வரும். ஆனால்
1.இப்படி மருந்தைக் கூட்டிக் கூட்டிக் கடைசியில்
2.அது எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நிலை ஆக்கிவிடும்.

இருந்தாலும் வாழக்கூடிய சிறிது காலத்திற்கு இந்த மருந்தின் உபகாரத்தில் நாம் வாழ முடிகின்றது. இரத்தத்தில் கலக்கப்படும் இந்த மருந்து அதில் இருக்கக்கூடிய வீரிய நஞ்சு நம்மைக் காப்பாற்றுகின்றது.

அப்படிக் காப்பாற்றினாலும் விஞ்ஞான அறிவால் கலந்த இந்த நஞ்சின் தன்மை நமக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து துரித நிலைகள் கொண்டு உடலில் விளைந்து உயிராத்மாவில் சேர்கின்றது.

உயிராத்மாவில் நஞ்சு சேர்ந்தால் மனிதன் மனிதனாகப் பிறக்காது அடுத்து நஞ்சின் உணர்வு கொண்ட உடலிலே நம்மை உயிர் உருவாக்கிவிடுகின்றது.

உதாரணமாக ஒரு வெள்ளாட்டை எடுத்துக் கொண்டால் எருக்கண் செடி மற்ற விஷச் செடிகளையும் அது உணவுக்காகச் சிறிது சிறிதாகக் கடித்துச் செல்கின்றது.

விஷச் செடிகளைக் கடித்தாலும் ஆட்டின் உடலில் இருக்கக்கூடிய உறுப்பின் தன்மைகளை அந்தச் செடியின் நஞ்சு ஒன்றும் செய்வதில்லை.

இதே போல ஒவ்வொரு தாவர இனச் சத்துக்குள்ளும் அதனதன் நிலைகளுக்குத் தக்க நஞ்சு இருக்கும்.
1.அந்த நஞ்சின் தன்மை கொண்டுதான்
2.ஒவ்வொரு தாவர இனமும் செழித்த நிலைகள் வளர்கின்றது.

பல பல தாவர இனச் சத்தை இணைத்து இதிலே மூன்று நஞ்சு கலந்த உணர்வின் சத்தை ஒருங்கிணைத்து நோயாக உள்ளவர்களுக்கு மருந்தாகக் கொடுக்கப்படும் பொழுது உணவுடன் கலந்து இந்த உணர்வுகள் உடலில் பரவி உடல் உபாதைகளை அகற்றுகின்றது.

அன்று மகரிஷிகள் தனக்குள் எடுத்துக் கொண்ட ஜெபப் பலனின் தன்மையை இந்தத் தாவர இனத்திற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனில் இணைத்தார்கள்.

தான் எடுத்துக் கொண்ட தீமைகளை அகற்றும் வலிமையான உணர்வைப் பாய்ச்சி நோயுற்றவர்களுக்கு அதை மருந்தாகக் கொடுத்தார்கள்.

அது உள் செல்லும்போது உடலிலுள்ள நோய்களை அகற்றுகின்றது.

அதே சமயத்தில் ஞானத்தின் தொடர் கொண்டு தாவர இனத்தில் செலுத்திய மகரிஷியின் உணர்வுகள்
1.அந்த நோயாளியின் உடலில் படரப்படும் பொழுது
2.அவர் உடலில் உள்ள மற்ற தீமைகளை அகற்றும் ஞானமும் வருகின்றது.

ஏனென்றால் மெய் ஞானிகள் மனிதன் உடலில் உள்ள தீமைகள் நீங்க வேண்டும் என்ற எண்ணக் கருத்தினைத் தனக்குள் ஓங்கி வளர்த்து அதனின் நினைவு கொண்டு… “தான் உருவாக்கிய மருந்தினை” நோய்வாய்ப்பட்டவர்களுக்குக் கொடுத்தார்கள்.

மகரிஷிகளின் எண்ணத்தின் அலைகள் பதிந்த அந்த மருந்தினைக் கொடுக்கப்படும் பொழுது இவனின் உணர்வலைகள் அங்கே இருக்கும் தீமைகளை அகற்றுவதோடு மட்டுமல்லாதபடி அந்த மெய்ஞானியின் உணர்வைக் கவரும் தன்மையும் அங்கே வருகின்றது.

மெய் ஞானியின் உணர்வைக் கவரும் அந்த மனிதனுக்குள் தன் வாழ்க்கையில் அறியாது சேரும்
1.இருளை அகற்றும் ஞானங்கள் பெருகுகின்றது.
2.அவனும் ஞானியாக வளர்கின்றான்.

இவ்வாறு தான் ஒவ்வொரு ஞானியும் தனக்குள் பெற்ற மெய் ஞானத்தை ஒவ்வொரு சாதாரண மக்களும் பெறும் வண்ணம் செயல்படுத்தினார்கள். தன் இன மக்கள் உயர்ந்த நிலை பெறுவதற்காக ஆலயங்களையும் உருவாக்கினார்கள்.

ஆனால் இன்றைய மருத்துவமும் சரி மற்ற நிலைகளும் சரி மனித உடலுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றார்களே தவிர
1.ஞானிகள் சொன்ன நிலையைச் சிந்திப்போரும் இல்லை.
2.ஞானிகளின் அரும் பெரும் ஆற்றல்களை எடுப்பாரும் யாரும் இல்லை.

குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை வெளிப்படுத்துகின்றோம். அருள் ஞானிகள் உணர்வுடன் நீங்கள் ஒன்றி வாழ்ந்தால் அவர்களைப் போன்று என்றுமே அழியாத நிலைகள் கொண்டு “வேகா நிலை” அடையலாம். 

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று போற்றித் துதிக்கும் அந்த அகஸ்தியனின் ஈர்ப்பு வட்டத்தில் அனைவரும் வாழ்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.