ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 10, 2017

ஈசனுக்கு உண்மையான மகிழ்ச்சி எது? ஈசனுக்குச் செய்யும் சேவை எது?

நாம் கற்றுக் கொண்ட எந்த மெய்ஞானிகளின் நிலைகள்
1.நம் குடும்ப வாழ்க்கையிலும் சரி
2,நம் எதிரியாக இருந்தாலும் சரி
3.நம் சொல்லின் நிலைகள் அங்கே இனிமைப்படுத்த வேண்டும்.

மற்றவர்கள் காரமான நிலைகளில் பேசினாலும் நாம் எடுத்துக் கொண்ட ஜெபத்தின் பலன் பிறர் காரமாக பேசக்கூடிய உணர்வுகளைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலாகப் பெறவேண்டும்.

இதை ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஆற்றல் பெறுவதற்கு, சதா நீங்கள் “ஆத்ம சுத்தி” என்ற ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உயிரை ஈசனாக மதித்து ஆலயங்களில் “பாலாபிஷகம்” செய்வது போன்று உங்கள் ஈசனுக்கு அந்த மெய்ஞானியின் அருள் சக்தியான நிலைகளை நீங்கள் சுவாசித்து அபிஷேகிக்க வேண்டும்.

அந்த மெய் ஞானிகளின் உணர்வின் மணங்கள் உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்காக
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதித்து
2.அந்த அபிஷேகத்தை யாம் செய்து கொண்டே இருக்கின்றோம்.

உங்கள் உயிரான ஈசனுக்கு இந்த அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒவ்வொரு நிமிடமும் இந்த ஆத்ம சுத்தியைச் செய்யுங்கள். உயிரான நிலைகளுக்கு மகரிஷிகளின் அருள் ஒளியைச் சுவாசித்து உங்களுக்குள் மகிழச் செய்யுங்கள்.

இதைப் போல ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் எடுத்துப் பிறருக்குச் சொன்னாலும்
1.அவர் உடலில் இருக்கக்கூடிய உயிரான ஈசனிடம்
2.நாம் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளை அவர்கள் சுவாசித்து
3.ஒலிகள் மூலம் உயிரிலே பட்டு அந்த உணர்வுகள் தூண்டப்படுகின்றது.

ஈசனுக்குச் செய்யும் சேவை இது தான்.

நாம் பேசிய உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் நிலைகள் அந்த உடலை இயக்கச் செய்து நம்மைப் பக்குவப்படுத்துவதோ நன்மை சொல்லச் செய்வதோ  இதைப் போன்ற நிலைகள் ஏற்படுகின்றது.

ஆகையினாலே இதையெல்லாம் கண்டுணர்ந்த நாம் மகரிஷிகள் அவர்கள் எப்படி மகிழ்ச்சியின் நிலைகளில் கலந்து உறவாடினார்களோ அதைப் போன்ற பாச அணைப்புடன் இதைச் செயல்படுத்துதல் வேண்டும்.

உதாரணமாக நம் சிறு குழந்தை தவறு செய்தாலும் நாம் பாசத்துடன் அணைத்துக் கொள்கின்றோம்.

நம் உடலிலே ஒரு வேதனையாகும் பொழுது நமக்குள் ஒரு அசுத்தம் பட்டுவிட்டால்
1.அசுத்தம் என்ற நிலைகளை எண்ணாதபடி
2.அதைத் துடைக்க முற்படுகின்றோம்.

அதைப் போன்று பிறருடைய எண்ணங்களில் அசுத்த சொற்கள் வந்தாலும் நாம் எண்ணத்தாலே துடைக்கும் பக்குவத்தைப் பெறவேண்டும்.

அசுத்தமான நிலைகள் இருந்தாலும் அதை எப்படி மனமுவந்து துடைக்கின்றோமோ அதைப் போன்று
1.பிறரிடமிருந்து அசுத்தமான உணர்வின் எண்ணங்கள் தோற்றுவித்தாலும் 
2.ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நாம் பயன்படுத்தி
3.அவருடைய அசுத்தத்தை நீக்கும் ஆற்றலை நாம் செய்து பழகுவோமேயானால்
4.நமக்குள் ஐக்கியமாகும் நிலைகள் பிறக்கும்
5.ஈசனுக்கு மகிழ்ச்சி என்பது இது தான்.

இதன் மூலம் நாம் அனைவரும் ஏகாந்தமாக மகிழ்ந்து வாழலாம். அந்த மகரிஷிகள் சென்ற எல்லையை அனைவரும் எளிதாக அடைய முடியும்.