ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 11, 2017

கண்ணா… பரந்தாமா… ஆபத்பாந்தவா… அனாதரட்சகா…! – விளக்கம்

நாம் புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வரையிலும் ஒவ்வொரு சரீரத்திலும் கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.

தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக எதிலெல்லாம் நினைவைச் செலுத்துகின்றதோ
1.அந்த உணர்வின் நினைவலைகளை
2.கண் கருவிழி “ருக்மணி” முன்னாடி பார்த்து அது படமெடுக்கின்றது.

3.அதற்கு எதிர் நிலைகள் வரும் பொழுது “சத்தியபாமா”
4.அந்த உணர்வின் உண்மையினுடைய நிலைகளை அது ஈர்த்து
5.தனக்குள் சுவாசித்து இந்த உடலைப் பாதுகாக்கின்றது.

இந்தத் தத்துவத்தைச் சிறுகச் சிறுக எழுதி கண்ணன் மகாபாரதப் போரை நடத்தினான் என்று காவியம் எழுதினார்கள் ஞானிகள்.

நாம் ரோட்டிலே செல்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். நான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையிலே செல்கின்றோம்.

எந்த உணர்வின் நினைவைச் செலுத்துகின்றோமோ இந்த எண்ணம் நம் கண்ணிலே அந்த உணர்வுகளைச் செலுத்தியபின் அதைக் கொண்டு பார்த்துச் செல்கின்றோம்.

அப்பொழுது இடையிலே ஒரு மாடு மிரண்டு வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த மாடு மிரண்டு வருவதைக் கண்ணிலே இருக்கக்கூடிய
1.கருவிழியான இந்த ருக்மணி பார்க்கின்றது.
2.மாடு குதிப்பதை நம் கண்ணுக்குள் அழகாகக் காட்டுகின்றது,
3.மகிழ்கின்றது அந்த ருக்மணி.

ஆனால் மாடு மிரண்டு அதிலிருந்து வெளிப்படும் மூச்சலைகளின் உணர்வலைகளை
1.சத்தியபாமா அந்த உணர்வின் சக்தியை இழுத்து
2.என்னைச் சுவாசிக்கச் செய்கின்றது.

அப்படிச் சுவாசித்து உயிரிலே பட்டவுடனே எனக்குப் பயத்தை ஊட்டி என் உடலை அசைக்கச் செய்கின்றது. இதற்குப் பெயர்தான் சத்தியபாமா, “உண்மையைச் சொல்கின்றது”.

இதுதான் கண்ணா பரந்தாமா. நம் கண் இங்கே பரவிக் கிடப்பதை அனைத்தையுமே தமதாகக் காட்டுகின்றது.

கண்ணா, பரந்தாமா, ஆபத்பாந்தவா, அனாதரட்சகா. நாம் ரோட்டில் போகும் பொழுது அந்த மாடு மிரண்டு வருவதை இந்தக் கண் நமக்குக் காட்டி அந்த உணர்வின் சத்தை அது இயக்கிக் காட்டுகின்றது.

1.மாடு முட்டுவிடும் என்ற அந்த உண்மையை உணரச் செய்து
2.எனக்குள் பயத்தை ஊட்டி அந்தப் பாதைக்குப் போகாதபடி
3.பயமான உணர்வலைகள் பட்டவுடனே என் கண் மங்கலாகி
4.இந்தப் பக்கமாகத் திரும்பி என்னைப் பாதுகாக்கும் நிலைகளுக்குத் திசை திருப்புகின்றது.

அதைத்தான் கண்ணனை – ருக்மணி சத்தியபாமா என்று இரண்டு பேரில் ஒருத்தி ஒரு பக்கம் இழுக்கின்றாள் ஒருத்தி இன்னொரு பக்கம் இழுக்கிறாள் என்றார்கள்.

இந்த இரண்டு சம்சாரத்திடமும், “கண்ணன் படுகிற பாடு பெரும் அவஸ்தை” என்று அதற்கு ஒரு கதையை எழுதி நமக்கெல்லாம் புரியும்படி வைத்திருக்கிறார்கள்.

ஏனென்றால் “சத்ரு மித்ரு” – எலெக்ட்ரிக்கினுடைய நிலைகள் எப்படி பாசிடிவ் நெகடிவ் என்ற நிலைகள் இயங்குகிறதோ அதே போல மனிதன் வாழ்வதற்கு இத்தகைய சக்தி தேவை.

நமக்குத் தெளிவான நிலைகளில் அதை உணர்த்துவதற்குக் காவியப்படைப்பாக நமக்குப் படைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

ஞானிகள் கொடுத்த இந்த மூலங்கள் கொண்டு மகாபாரதத்தைப் படித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உணர்வுகளுக்குள் உடலுக்குள் எத்தனை போர் முறைகள் இயங்குகிறது?

கண்களின் துணை கொண்டு அதை நாம் எப்படித் திரும்பத் திரும்ப அந்த நினைவுகளைக் கொண்டு வந்து இயக்குகின்றோம்?

புதுப் புது எண்ணங்கள் எப்படி வருகின்றது? உணர்வுகள் எப்படி மாறுகின்றது? உணர்ச்சிகளை எது எப்படித் தூண்டுகிறது? உணர்ச்சிக்கொப்ப நம் உடலின் செயல்கள் எப்படி மாறுகின்றது என்பதை நம்மை நாம் அறிய முடியும்.

கண்ணன் தான் மகாபாரதப் போரை வழி நடத்துகின்றான் என்று தெளிவாக அன்று வியாசர் காட்டியுள்ளார்.

அதே கண்களின் துணை கொண்டு தீமைகளை நாடாது அருள் ஒளியின் தன்மையைப் பெற்று இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும் என்பதையும் நாம் அறிய முடியும்.