ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 20, 2017

கூர்ந்து பதிவாக்கும் உணர்வுகள் தான் நம்மை இயக்குகின்றது – ஞானிகளின் உணர்வைக் கூர்மையாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள் “நீங்கள் ஞானியாக ஆக முடியும்”

நான் கல்வியறிவு அற்றவனாக இருப்பினும் அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு உணர்வின் இயக்கங்கள் இயங்குகின்றது என்ற நிலையை குருநாதர் எனக்கு உணர்த்தினார்.

அண்டத்தை அவர் கண்டுணர்ந்து அவருக்குள் விளைந்த நிலையை விளைவித்த உணர்வின் தன்மையைச் என் செவிப்புலனால் கேட்கச் செய்து உணர்ச்சிகளால் உந்தப்பட்டு அதனைக் கவனித்துக் கூர்ந்து உற்று நோக்கும்படி செய்தார்.

1.நான் அவர் சொல்வதைக் கவனித்துக் கூறவில்லை என்றால்
2.அதற்காக என்னைத் தூண்டுதலாக உணர்ச்சியின் நிலைகளைத் தூண்டச் செய்து
3.அதை எனக்குள் பதியச் செய்யும் நிலையாகப் பதியச் செய்வார்.

மேலும் இயற்கையில் மனிதனுக்குத் துயரங்களும் வேதனைகளும் வெறுப்புகளும் எவ்வாறு ஏற்படுகிறது என்ற நிலையை அனுபவபூர்வமாக எமக்குள் ஏற்படுத்திக் காட்டினார்.

அதனின் துணை கொண்டு அறிந்துணர்ந்த நான் உங்களுக்கும் இதைப் பதிவு செய்யும் நோக்கிலே இதைச் சொல்கின்றேன்.

சொல்லும் நேரத்தில் உங்கள் நினைவலையை வேறு எங்கோ செலுத்திவிட்டுச்
1.“சாமி சொல்வது... எனக்குப் புரியவில்லை...!” என்ற உணர்வைனைத் தடுத்து நிறுத்திவிட்டால்
2.கேட்டும் பலனில்லாமல் போய்விடும்.

அப்படிப் பயனற்ற நிலைகளில் செல்லாது இந்த மனித வாழ்க்கையில் மெய் ஞானிகளைப் பற்றிய உணர்வுகளைப் பெறும் நோக்குடன் “உங்கள் ஞானக் கதவுகளைத் திறந்து வையுங்கள்”.

ஏனென்றால் விஞ்ஞான உலகில் இன்று மனித எண்ணங்களை அழித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் “பதியச் செய்து” உங்கள் பொன்னான அருள் சக்தியான மனித உணர்வுக்குள் விளைந்த ஆற்றல்மிக்க உணர்வின் நிலைகள் தீமையை நீக்கிடும் ஆற்றலாகப் பெருக வேண்டும்.

மெய் உணர்வைக் கண்டுணர்ந்த நிலைகள் என்றும் அழியா ஒளியின் சரீரம் பெறும் அவ்வாறு பெற்ற அந்த ஞானியின் உணர்வலைகள் உங்களுக்குள் விளைய வேண்டும் என்ற ஆசையில் தான் இதைப் பதிவு செய்கின்றோம்.

ஆகையினால் உங்கள் கவனங்கள் வேறு எங்கும் செலுத்தாது “எதைச் சொல்கிறோம்…” என்று கூர்ந்து கவனித்து இதைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

பதிவு செய்து கொண்டபின்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது
2.அதை மாற்றிடும் நிலையாக உங்களுக்குள் உள் நின்று இப்பொழுது பதிவு செய்யும் உணர்வுகள்
3.மீண்டும் தன்னிச்சையாகவே உங்களைக் காக்கும்.

அந்த நிலை பெறவேண்டும் என்று தான் இதை உபதேசிக்கின்றேன். இதை ஏன் சொல்கின்றேன் என்றால் சொல்லும்போது கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டால் இது வராது.

ஒரு முலாம் பூசிய நாடாவில் அதிலுள்ள காந்தப் புலன் கவர்ந்து மீண்டும் நாம் காந்த ஊசியைச் செருகும்போது அது நமக்குள் அந்த ஒலி அலைகளை அது ஒலிபரப்புச் செய்கின்றது.

இதைப் போல இப்பொழுது பதிவு செய்த நினைவை உயிருடன் ஒன்றச் செய்யும் பொழுது அந்த ஒலி அலைகளைப் பரப்பி மெய் உணர்வை நீங்கள் கண்டுணர்ந்து தீமைகளை அகற்றிடும் சக்தியாக உங்களின் செயலின் ஆற்றல் வரும்.

அருள் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கி அதை மீண்டும் மீண்டும் நினைவாக்கி அதன் வழியில் வளர்த்துக் கொண்டதால் தான்
1.மூன்றாம் வகுப்பு கூட முழுவதும் படிக்காத என்னால்
2.இயற்கையின் பேருண்மைகளை அறிய முடிந்தது
3.அதை உங்களுக்கு வெளிப்படுத்தவும் முடிகின்றது.