ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2017

தவறு நடந்துவிட்டது என்று அறிந்த பின் மிகுந்த வேதனைப்படுகின்றோம் மற்றவர்களுக்கும் அதனால் வேதனையாகின்றது – “இதை நிறுத்த என்ன உபாயம் வைத்திருக்கின்றோம்…!”

இப்பொழுது ஒரு பாத்திரமோ ஒரு பொருளோ கீழே விழுந்து உடைந்துவிட்டது. நல்ல விலை கொடுத்து வாங்கி வந்திருக்கின்றோம். பையன் தூக்கி இழுத்துப் போட்டு உடைத்து விடுகிறான்.

அப்பொழுது என்ன ஆகின்றது?

பையன் மேல் வெறுப்பு வருகின்றது. இவ்வளவு பணம் போய்விட்டதே என்று வேதனைப்படுகின்றோம்.

அப்பொழுது நீங்கள் வேதனைப்படுகின்றீர்களா இல்லையா?

அந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. பொருளும் போய்விட்டது, அதனால் நமக்குள் வேதனையும் வந்துவிடுகின்றது.

ஆனால் அந்த வேதனை நமக்குள் வராமல் தடுக்க வேண்டுமா இல்லையா?

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று சொல்லிக் கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு நொடிக்குள் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

பையன் பொருளை உடைத்திருந்தாலும்
1.அவன் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும்
2.அறியக்கூடிய ஆற்றல் அவன் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
3.குழந்தை அவன் அறியாத நிலைகளில் செய்துவிட்டான். அறியக்கூடிய ஆற்றல் அவன் பெறவேண்டும் என்று
இப்படித்தான் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

இப்படி எண்ணி நாம் சுவாசிக்கும் இந்த உணர்வால் நமக்குள் சாந்தமும் விவேகமும் வருகின்றது.

அவன் மேல் வரக்கூடிய கோபமோ வேதனையோ வராது தடுத்து விடுகின்றது.

நாம் எப்படி சமையல் செய்யும்போது பலவிதமான பொருள்களைக் கலந்து சுவையாக ஆக்குகின்றோமோ அதே மாதிரி துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்துவிட்டோம் என்று சொன்னால் அவன் செய்த தவறை இங்கே “குறைக்கின்றது”.

பொருளை பையன் உடைத்திருந்தால் அவன் செய்த தவறை இப்படிச் சரி செய்து பையன் மேல் நிலைகளை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.

நாமே அந்தப் பொருளை வாங்கிக் கொண்டு வருகிறோம். கை தவறி விழுந்து உடைந்தால் என்ன ஆகும்?

“இப்படி… ஆகிவிட்டதே” என்று உடனே அந்தக் கிறக்கம் வரும். இவ்வளவு பணம் போட்டு வாங்கினேன்… எல்லாம் போய்விட்டதே…! என்ற உணர்வு வரும்.

1.தவறிக் கீழே விழுந்துவிட்டது.
2.ஆனால் மனது தாங்கவில்லை.
3.அப்பொழுது வேதனை என்ற “விஷமான உணர்வுகள்” சேர்கின்றது.
4.அந்த விஷமான உணர்வை நமக்குள் வராமல் தடுக்க வேண்டுமா இல்லையா?

அந்தச் சந்தர்ப்பத்தில் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு உடல் முழுவதும் படரவேண்டும் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் இது சந்தர்ப்பம். தவறி விழுந்து விட்டது நாமும் கவனிக்கவில்லை.

சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட இந்த நிலையால் நமக்குள் வேதனையைச் சுவாசிக்க நேருகின்றது. அந்த வேதனை நம் சாப்பாட்டுடன் கலக்கின்றது.

பொருள் உடைந்தது நம் கணவருக்குத் தெரிந்தால் சங்கடம்தான் அவர் ஏதாவது சொல்வார். அதற்கப்புறம் மாமியார் ஏதாவது சொல்வார்களோ என்று இப்படி இரண்டு நிலை ஆகும்.

கை தவறி பொருளைப் போட்டு அது உடைந்தவுடன் இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் வரும்.

பணத்தைச் செலவழித்து வாங்கிய பொருள் மீது கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருந்தால் இப்படிச் செய்வாயா என்று கணவர் சப்தம் போடுவார். இப்படி அவர் கேட்டவுடன் இரண்டு பங்கு வேதனை ஆகிவிடும்.

அங்கே இருந்து மாமியார் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். “ஏன் அம்மா? நீ தான் அக்கறையோடு வாங்கி வந்தாயே… சூதானமாக வைக்கத் தெரியாதா…? உனக்கு எதற்கு இந்தப் பொருள்…?” என்று அவர்களும் கேட்கத்தான் செய்வார்கள்.

கேட்பார்களா இல்லையா?

யாராக இருந்தாலும் கேட்பார்கள். நீங்களாக இருந்தாலும் கேட்பீர்கள் நானாக இருந்தாலும் கேட்கத்தான் செய்வேன். அந்தச் சந்தர்ப்பம் அதைக் கேட்கச் செய்கிறது.

அப்பொழுது அவர்கள் கேட்கும்போது இங்கே வேதனை இன்னும் அதிகமாகின்றது. அதே சமயத்தில் அவர்களையும் வேதனை அடையச் செய்கிறது.

கீழே விழுந்து பொருள் உடைந்த இந்தச் சந்தர்ப்பம் கேட்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் இத்தகைய விஷமான உணர்வுகளை நுகரச் செய்து விடுகின்றது.

ஏனென்றால், நுகர்ந்த சந்தர்ப்பம் நமக்குள் இது வருகின்றது. நுகர்ந்த உணர்வுகள் நம் உயிரில் பட்டு இது தெரிகின்றது. நாம் தெரிந்து கொள்கிறோம்.

ஆனால் நாம் யாராவது அதைத் துடைக்கின்றோமா?

அதற்குத்தான் “ஓ…ம் ஈஸ்வரா..” என்று சொல்லி அந்த நிமிடமே உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கிவிட்டு உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.

இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில்
1.எனக்குச் சிந்தித்துச் செயல்படக்கூடிய ஆற்றல் வேண்டும்
2.எனக்கு மன பலம் வேண்டும்
3.நாளை நான் செய்வதெல்லாம் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று
4.அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனை என்ற விஷம் நமக்குள் வராது.

வீட்டில் மாமியார் கேட்கும்போது ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தை எடுத்துச் சுத்தப்படுத்திக் கொண்டு சந்தர்ப்பம் இந்த மாதிரி ஆகிவிட்டது என்று நடந்த உண்மையைச் சொல்லலாம்.

அப்பொழுது நமக்குள் அந்த வேதனை வராதபடி சுத்தப்படுத்திக் கொள்ளலாம்.

மாமியாராக இருப்பவர்களுக்கும் மருமகள் இப்படிச் செய்துவிட்டது என்று அங்கே அவர்களுக்கு வேதனை வருகின்றது. ஏனென்றால் ஒருவருடன் இது போய்விடுவதில்லை.

1.வேதனையைச் சுத்தப்படுத்தவில்லை என்றால்
2.”அத்தனை பேருக்கும்…” இதனால் புதிதாக நோய்கள் உருவாகக் காரணமாகின்றது.

இந்த மாதிரி நிலைகளுக்குத்தான் பொதுவான நிலைகளில் காலையில் எழுந்தவுடன் 6.00 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்து நாங்கள் பெறவேண்டும் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெறவேண்டும் என்று பேட்டரியைச் சார்ஜ் ஏற்றுவது போல் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுது இந்த மாதிரி வேதனைகள் வரும் போது ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் தீமைகள் புகாது தடுத்து உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் செலுத்தி அந்தத் தீமைகள் விளையாமல் தடுத்துவிடலாம்.

அதற்குத்தான் இந்த “உபாயத்தைக் கொடுப்பது”.

பல கோடிச் சரீரங்களில் நஞ்சை நீக்கி நீக்கி இந்த மனித உடலை உருவாக்கியது நம் உயிர்தான் என்ற உண்மையை உணர்ந்து இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் பக்குவப்படுத்தும் நிலைக்கு நாம் அனைவரும் வர வேண்டும்.

ஞானிகள் இந்தப் பேருண்மைகளை எல்லாம் நாம் தெரிந்து கொள்ளும் நிலைகளுக்குத்தான் ஆலயங்களையும் காவியங்களையும் படைத்துள்ளார்கள்.

அதை எல்லாம் நீங்கள் தெரிந்து உங்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழவேண்டும் மகிழ்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.