ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 12, 2017

“நல்லது நடக்கவில்லையே… நல்லது கிடைக்கவில்லையே…” என்று சோர்வடையாதீர்கள் – அருள் சக்தியால் “காரிய சித்தி” அடையுங்கள்

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நிலைகளிலும் எத்தனையோ நிலைகளை இன்று நாம் பதிவு செய்து கொள்கின்றோம். உதாரணமாக
1.புத்திர பாக்கியம் வேண்டுமென்றால்
2.“புத்திர பாக்கியம் வேண்டும்…” என்று பதிவு செய்து கொண்டால்
3.அந்தப் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

ஆனால், அதற்கு மாறாக “புத்திர பாக்கியம் இல்லையே… இல்லையே… இல்லையே…” என்று இப்படிப் பதிவு செய்து கொண்ட பின்
1.அந்த உணர்வுகளே அதிகரித்து
2.அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைப்பது காலதாமதமாகி விடுகின்றது.

காரணம் சோர்வும் சஞ்சலமும் அதிகமாகச் சுவாசிக்கும் போது இந்த அணுக்கள் வீரியத் தன்மை அடைந்து கரு வளர்ச்சி பெறும் நிலைகளும் தடைப்படுகின்றது.

அது பலவீனம் அடைந்து விடுகின்றது.

இதைப் போன்றுதான் நாம் “பதிவு செய்து கொண்ட நிலைகள்” எல்லாம் நாம் மீண்டும் நினைக்கும் போது இயக்கத்திற்கு வருகின்றது.

இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்பது.

அதே மாதிரி ஒரு குழந்தைக்குத் திருமணம் ஆகவேண்டும் என்று எண்ணலாம். ஆனால் “திருமணம் ஆகவில்லையே…” வருபவர்கள் எல்லாம் வந்து வந்து செல்கின்றனரே…” என்றுதான் நாம் பதிவு செய்து கொள்கின்றோம்.

அந்தப் பதிவு மீண்டும் நினைவுக்கு வரும் போது நம் ஆன்மாவில் கலந்து
1.பெண் பார்க்க வருபவர்கள் நம் சோர்வின் நிலைகளை உற்றுப் பார்த்து
2.நம் சொல்லைக் கேட்கும் போது
3.அவர்களும் சோர்வின் நிலையை அடைகின்றார்கள்.

அப்பொழுது “நம் எண்ணமே…” பார்க்க வருபவர்களின் நிலைகளைச் சீராக பேச்சுத் தொடராதபடி அதன் வழியே அந்தத் திருமணங்கள் நடைபெறாது போய்விடுகின்றது.

நாம் எண்ண வேண்டியதை விட்டு விடுகின்றோம். ஆகவே நாம் எப்படி எண்ன வேண்டும்?

நமது பெண் “எங்கே” திருமணமாகிச் சென்றாலும்
1.அந்தக் குடும்பங்கள் நலமாக இருக்க வேண்டும்
2.அந்தக் குடும்பத்தில் தொழில் வளம் பெருக வேண்டும்.
3.அந்தச் சக்தி நம் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டும் என்று
4.அடிக்கடி நாம் எண்ணுதல் வேண்டும்.

பெண்ணும் இதே போல் எண்ணினால் துரிதமாக அதற்கு நல்ல வரனும் கிடைக்கும். அது தன் எதிர்காலத்திலும் நல் வாழ்வு வாழும். அதனுடைய பேச்சும் மூச்சும் அந்தக் குடும்பத்தை வாழ வைக்கும்.

மகரிஷிகளின் அருள் சக்தியை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்து கொண்டபின் “எப்பொழுதுமே…” வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியங்களுக்குச் செல்லும் போதும் ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்ல வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று எண்ணி உங்கள் உடலுக்குள் ஒரு ஐந்து நிமிடம் செலுத்துதல் வேண்டும்.

செலுத்திவிட்டு எந்தக் காரியத்திற்குச் செல்கின்றோமோ அவை அனைத்தும் காரிய சித்தியாக வேண்டும்.

எங்கள் சொல் மற்றவர்களை நல்லவராக்க வேண்டும். எங்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு நல்ல எண்ணம் வர வேண்டும் என்று எண்ணிப் பழகுதல் வேண்டும்.

உங்கள் குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்க வேண்டும் என்றால் பெண்கள் அடிக்கடி இந்த ஆத்ம சுத்தி செய்து உங்கள் எண்ணத்திற்கு வலுவைக் கூட்டி
1.குழந்தைகளுக்குத் திருமணம் ஆக வேண்டும்
2.அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலை அடைய வேண்டும்
3.குழந்தைகளுக்குச் சீக்கிரம் தொழில்கள் கிடைக்க வேண்டும்
4.வியாபாரம் பெருக வேண்டும்
5.வர வேண்டிய பாக்கிகள் வந்து சேர வேண்டும்
6.வாடிக்கையாளர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்று இப்படித்தான் எண்ணிப் பழக வேண்டும்.

நீங்கள் இவ்வாறு எண்ணும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறக்கூடிய தகுதியைப் பெறுகின்றீர்கள்.

இவ்வாறு எண்ணி வந்தால் உங்களுடைய காரியங்கள் சித்தியாகும்.