ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2017

புத்திர பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் செய்ய வேண்டியது...

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இருக்கிறார்கள். இனி புத்திர பாக்கியமே ஏற்பட வழி இல்லை என டாக்டர்களால் கைவிடப்பட்ட தம்பதிகளும் இருக்கின்றார்கள்.

இவர்கள் அறிய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.

“திருஞான சம்பந்தரின்... தாய்க்கு” வெகு காலமாக புத்திர பாக்கியமே இல்லை. இருந்தாலும் அந்தத் தாய் வேதனைப்பட்டு மூலையில் முடங்கியிருக்காமல் தனக்குப் புத்திர பாக்கியம் வேண்டும் என்று பல ஊர்கள், கோவில்கள் என்று யாத்திரை செல்கிறாள்.

குழந்தைப் பாக்கியம் வேண்டும் என்று பல கடவுள்களை வேண்டுகின்றாள்.

1.அந்தத் தாய்ஏங்கி எடுத்த உணர்வுகள்தான்
2.அந்தத் தாயினிடத்தில்கருவை உண்டாக்கும் அணுக்களை... விளையச் செய்கின்றன.

பின் கரு உண்டான பின் பல திருத்தலங்களுக்குச் செல்கின்றாள். அங்கே மகிமைகள் பலவற்றைப் பார்த்தும் கேட்டும் அந்த உணர்வுகளைத் தன்னுள் பதிவு செய்கின்றாள்.

அவைகளையெல்லாம் தன் கருவில் வளரும் குழந்தையும் பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குகின்றாள்.

அந்தத் தாயினிடத்தில்ஒன்றிலிருந்து தொண்ணூறு நாள்கள் சேர்ந்த இந்த வினைகள் கருவில் இருக்கும் குழந்தைக்குப் பூர்வ புண்ணியமாகச் சேர்கின்றன.

அவ்வாறு பிறந்த குழந்தை வளரும்போது வயதுக்கு மீறிய அறிவுடனும் பல்வேறு ஆற்றல்களுடனும் வளர்கின்றது. இவ்வாறு
1.புத்திர பாக்கியம் இல்லாத பெண்மணி
2.தான் ஏங்கி எடுத்த உணர்வுகளால்தான் புத்திர பாக்கியம் பெறுகிறாள் என்பதை
3.நாம் மனதில் பதிய வைக்க வேண்டும்.

ஒரு உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மா தான் சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப பிறிதொரு உடலில் இணைந்து விட வாய்ப்புண்டு.

அல்லது மந்திரவாதிகள் கையில் சிக்கி ஏவல் பில்லி சூனியங்களுக்குப் பயன்பட்டுப் பின் கீழான பிறவிக்குச் சென்றுவிடவும் வாய்ப்புண்டு.

இது போன்ற சமயங்களில் புத்திரர்களாக இருப்பவர்கள் தங்களுடைய உணர்வின் எண்ணத்தைப் பயன்படுத்தி உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாவைப் பிற உடல்களில் புகுந்து விடாதவாறும் மந்திரவாதிகளின் கையில் சிக்கி விடாதவாறும் தடுத்து சப்தரிஷி மண்டல ஒளி அலையுடனும் இணைத்து விண்ணுக்குச் செலுத்த உதவ முடியும்.

ஆகவே இது போன்ற சமயங்களில் புத்திரர்களின் உதவி மிகவும் அவசியம்.

எனவே பிள்ளைப் பெறு இல்லாதவர்கள் பிள்ளைப் பெறு வேண்டி ஏக்கமுடன் கீழ்க்கண்டவாறு ஆத்ம சுத்தி செய்து தியானித்து வருவீர்கள் என்றால் நீங்கள் வெகு சீக்கிரமே... “பிள்ளைப் பெறு பெறும் தகுதி” பெற வாய்ப்புண்டு.

அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.

அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்க அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை ஏக்கமுடன் எடுத்துத் தியானிக்கவும்.

மேலே கூறிய ஆத்ம சுத்தியை கணவன் மனைவி இருவரும் ஒரு இடத்தில் அமர்ந்து ஒரே ஏக்கத்துடன் தியானித்து வருவீர்களானால் பலனை வெகு சீக்கிரமே பெற முடியும்.

கணவன் மனைவி இருவரும் இந்த ஆத்ம சுத்திப் பயிற்சியை சாப்பிடுவதற்கு முன்னும் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னும் கடைப்பிடித்து வருவது சாலச் சிறந்தது.

புத்திர பாக்கியம் ஏற்படாததன் காரணம் என்ன என்றால் புத்திர பாக்கியத்தை உண்டாக்கும் அணுக் கருக்கள் நம் உடலில் வீரியம் பெறாத நிலைகளினால் தான்.

ஏனென்றால் பல சந்தர்ப்பங்களில் நாம் சுவாசித்த எண்ண உணர்வுகள் “எதிர்மறையான அணுக்களாகி” நம் உடலில் புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழித்துவிடுகின்றது.

கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தியானித்து இந்த ஆத்ம சுத்தியை தினசரி காலை மாலை இரவுகளில் செய்யும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அருளாற்றல் மிக்க சக்தி உங்கள் இருவரின் உடலிலும் சேர்கின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் பெருகப் பெருக
2.புத்திர பாக்கியம் உண்டாக்கும் அணுக் கருக்களை அழிக்கும் அணு செல்களில்
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகள் படர்ந்து
4.அதனின் செயலாக்கம் வலுவிழக்கின்றது.

நமக்குப் புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு... என்ற நம்பிக்கை கொண்டு மன வலுவுடன் தியானித்தால் உறுதியாகக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

நலம் பெறுக வளம் பெறுக
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரும் பெறுக.