ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 4, 2017

பிறருடைய தீமை செய்யும் உணர்வுகளை அறியாத நிலைகளில் நாம் நுகர்ந்து விட்டால் “தோஷமாகின்றது” – அந்த தோஷத்தை எப்படி நீக்க வேண்டும்?

இந்த மனித வாழ்க்கையில் நாம் தவறே செய்ய வேண்டியதில்லை. ரோட்டில் போகும் பொழுது எத்தனையோ விதமான நிலைகளைப் பார்க்கின்றோம். விபத்துக்களையும் பார்க்க நேருகின்றது.

சந்தர்ப்பம் நமக்கு முன்னால் ஒருவர் போய்க் கொண்டிருப்பார். அதைப் பார்த்தபின் நம் கூட வரும் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருப்போம்.

பார்... எப்படி ரோட்டின் குறுக்கே போய்க் கொண்டிருக்கின்றான்...? கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா...!” என்போம்.

ஆனால் இப்படியே சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட இந்த உணர்வின் நிலைகள் நம்மையும் இயக்கி நாமும் நடு ரோட்டில் போய்க் கொண்டிருப்போம்.

நாம் போவது நமக்கே தெரியாது. நம் பக்கத்தில் பஸ் வரும் பொழுது தான் நாம் உணர முடிகின்றது.

இந்த உணர்வின் அலைகளைப் பின்னி வராதபடி தடுத்துக் கொள்வதற்குண்டான ஆற்றல் நமக்கு அந்தச் சக்தி இல்லை.

ஏனென்றால் அந்த விஷத்தின் அலைகள் கொண்டு எதிலே செல்கின்றோமோ அதன் வழியில் நம்மை அறியாமலே அழைத்துச் சென்றுவிடும்.

விஞ்ஞான அறிவுப்படி நீங்கள் எதை எடுத்துக் கொண்டாலும் பௌதீக நிலைகளில் எடுத்துக் கொண்டாலும் உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

நமது வாழ்க்கையில் நம்மையறியாது புகுந்திருக்கும் நிலைகளிலும் நாம் தவறு செய்யாது நஞ்சு கொண்ட உணர்வுகள் படர்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலைகளிலும்
1.பிறர் செய்யும் தவறுகளையோ
2.பிறர் செய்யும் குற்றங்களையோ
3.பிறர் படும் வேதனைகளையும் உற்றுப் பார்த்துப் பதிவு செய்து கொண்டால்
4.அதனதன் உடல்களிலிருந்து வெளிப்பட்ட உணர்வுகள் இங்கே வரத்தான் செய்யும்,
5.நம் முன் (ஆன்மாவாக) நிற்கத்தான் செய்யும்
6.சுவாசித்த உணர்வுகளை நம் உயிர் இயக்கி உணர்த்தத்தான் செய்யும்.
7.அது நமக்குள் தீமையின் விளைவாக விளையத்தான் செய்யும்.

இத்தகையை தீமையான விளைவுகளை மாற்றியமைக்கவில்லை என்றால் நம்முடைய நல்ல குணங்கள் வலுவிழந்து விடும். அப்பொழுது அதற்குத்தக்க தான் நாம் நியாயத்தைப் பேசுவோம்.

உலகம் கெட்டுவிட்டது. நல்லதுக்குக் காலமில்லை என்று நம் உணர்வுகளை இப்படி இயக்கிவிடும்.

ஆகவே எப்பொழுதுமே எங்கே சென்றாலும் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் “ஈஸ்வரா..” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்ல வேண்டும். பின்
1.எங்களுக்கு நல்ல எண்ணமும்
2.எங்களைப் பார்ப்பவருக்கு நல்ல எண்ணமும்
3.எங்கள் வழி நல் வழியாகவும்
4.எங்களுக்கு உன்னை என்றும் மறவாத எண்ணம் கொடு ஈஸ்வரா என்று வேண்டிவிட்டுச் செல்ல வேண்டும்.

இந்த உணர்வை நமக்குள் எடுத்துக் கொண்டால் பிறர் உணர்வுகள் நம்மை இயக்காது. நம்முடைய செயல்கள் அனைத்தும் “நல்லவைகளாகவே... என்றும் இருக்கும்”.