ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2017

தீமைகளை வேட்டையாட உங்களுக்குச் சரியான ஆயுதத்தைக் கொடுக்கின்றோம்...!

உடலில் எவ்வளவு வேதனைகள் நம்மைத் துன்புறுத்தினாலும் அந்த இருளை மாய்க்க உங்களுக்கு யாம் கொடுப்பது “ஆத்ம சுத்தி  என்ற ஆயுதம்.

புலி நம்மைத் தாக்க வரும்போது அதை வேட்டையாடுவதற்கு அம்பைக் கொண்டு எவ்வாறு எய்கின்றோமோ அல்லது ஒரு துப்பாக்கியைக் கொண்டு வீழ்த்துகின்றோமோ அதே போன்று
1.உங்கள் உடலுக்குள் நின்று உங்களை வேட்டையாட நினைக்கும்
2.தீய விஷ உணர்வுகளையும் வேதனைப்படச் செய்யும் உணர்வின் தன்மைகளையும் “வேட்டையாடுவதற்குத்தான்…”
3.இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதம்

“ஓ…ம் ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் இருக்கும் உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தி மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.

மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் உடல் முழுவதும் பரவச் செய்யுங்கள். இது தான் ஆத்ம சுத்தி.

இவ்வாறு செய்து உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் அந்த உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே அடக்கச் செய்யுங்கள். 

அப்போதுதான் அவைகள் அடங்கும்.

வேதனையாக இருக்கின்றது என்ற நிலையை மறந்துவிட்டு அந்த மகரிஷிகளின் அருள் ஒளியாலே எனக்குள் இருக்ககூடிய துன்பங்கள் நீங்கும் என்ற உணர்வைச் சுவாசியுங்கள்.

அந்த மெய் ஞானியின் அருள் உணர்வுகள் உங்களுக்குக் கிடைக்கும்போது அவர்கள் உடலிலே எப்படித் தீமையை மாய்த்து மெய் ஒளியின் தன்மையைப் பெற்றார்களோ அதன் வழியில் நீங்களும் பெற முடியும்.

இந்த ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்திற்குள் பல “இரகசியங்கள்…” இருக்கின்றது.

இந்தத் தியானத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் ஆற்றல் பெற்றபின் யார் துன்பப்பட்டு வந்தாலும் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
1.அவர்கள் உடலில் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க
2.அவர்களையும் அந்த “ஆத்ம சுத்தி செய்யப் பழக்குங்கள்.

யாம் எப்படி உங்களை நல்லதாக்க வேண்டுமென்று விரும்பி இந்த ஞானத்தின் வழி முறை கொண்டு உங்களுக்குள் சேர்க்கச் செய்கின்றோமோ இதைப் போன்று  நீங்களும் செய்யுங்கள்.

உங்கள் மூச்சாலும் பேச்சாலும் மற்றவர்களுடைய துன்பத்தைப் போக்கச் செய்யுங்கள். இதை உங்கள் அனுபவத்திலே நீங்கள் பார்க்கலாம்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.

நாம் எடுக்கும் தியானத்தின் மூலமாக ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெறமுடியும்.

1.யாரோ செய்து கொடுக்கிறார்
2.எவரோ செய்து கொடுப்பார் என்று எண்ணாதபடி
3.நாம் இதைப் பெறமுடியும்.
4.இந்த ஆற்றல் மிக்க சக்தி நம் உடலில் உண்டு,
5.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் பெறமுடியும் என்ற நிலைக்கு நாம் வரவேண்டும்.

உயிருடன் தொடர் கொண்டு அந்த அலையின் வரிசையில் இங்கே பாய்ச்சப்படும் போது ஒவ்வொன்றும் நல்லதாகும்.

“நம்மால் முடியுமா…!” என்ற பலவீனத்தை மட்டும் விட்டு விடுங்கள்.

1.எண்ணியதைப் படைக்கும் சக்தி
2.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும்
3.உங்களை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிருக்கு உண்டு

ஆக, அதனுடைய துணை கொண்டு அது எப்படி ஒளியாக நம்மை உருவாக்குகின்றதோ… நம் உணர்வின் செயலை உருவாக்குகின்றதோ… அதைப் போன்று நம் உணர்வுகள் அனைத்தும் அந்த ஈசனின் உணர்வின் ஒளி அலைகளாக மாறி அந்த உணர்வுகள் செயல்படும்.

“உயிர் நம்மை ஒளியாக இயக்கிக் கொண்டிருக்கும்… அந்த உணர்வாக” நாம் மாற்ற வேண்டும்.