ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 2, 2017

எல்லா உயிர்களையும் மகிழச் செய்பவர்கள் “மகரிஷிகள்” – அகஸ்தியர் உணர்வைக் கவர்ந்தவர்கள் அனைவரும் இன்று மகரிஷிகள் ஆகிவிட்டார்கள் – நீங்களும் அவ்வாறு மகரிஷியாகலாம்

மகரிஷிகள் என்பது ஆறாவது அறிவின் தன்மை கொண்டு ஏழாவது ஒளியாகத் தனக்குள் சிருஷ்டித்துக் கொள்பவர்கள். உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியின் தன்மையாக மாற்றியவர்கள்.

தன் வாழ்க்கையில் அறியாது வந்த துன்பங்களை விலக்கி ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று அதைத் தூய்மைப்படுத்தி ஒளியாக மாற்றியவர்கள் தான் மகரிஷிகள்.

1.மகரிஷிகள் என்றால் எல்லாவற்றையும் சேர்த்து விண்ணுலகம் சென்றவர்கள்.
2.அனைத்தையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

பொதுவாக எல்லோரையும் மகரிஷி என்று அழைக்கின்றோம். மகரிஷிகள் எண்ணிலடங்காதோர் உண்டு. ஒவ்வொருடைய பேர்களையும் தனித்துச் சொல்லி எடுக்க முடியாது.

அந்த மகரிஷிகள் நல்ல உணர்வின் தன்மையை எவ்வாறு பெற்றார்களோ அது பொதுத் தன்மை. மனித உடலிலிருந்து விடுபட்டு பிறவியில்லா நிலை அடைந்து விண்ணுலகம் சென்றவர்கள் தான் மகரிஷிகள்.

இன்று மனிதனாக இருந்து கொண்டு மகரிஷிகள் என்று பெயர் வைப்பதல்ல. இதெல்லாம் புகழுக்கு என்று பெயரை வைத்துக் கொள்ளும் நிலை. மனிதர்களை... “மகரிஷிகள்” என்று சொல்ல முடியாது.

1.மகரிஷி என்பது “மகம்” ஒவ்வொரு உயிரையும் மகிழச் செய்பவர்கள்.
2.விண்ணுலக உணர்வின் ஆற்றலைத் தமக்குள் ஜீரணித்து
துன்பமோ கஷ்டமோ மற்றவை அனைத்துமே அதையும் கலந்து தமக்குள் எடுத்து அந்த உணர்வாலே
3.மற்றவர்களின் துன்பத்தைப் போக்கி மகிழ்ந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று
4.உயிராத்மா ஒளியாகி வெளியே சென்ற பின் தான் மகரிஷி என்ற பெயர் வருமே தவிர மனித உடலுக்கு வராது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தின் கண்டுணர்ந்து உணர்த்திய விண்ணுலக உணர்வுகள் அனைத்தும் இன்றும் நம் பூமியில் பரவிப் படர்ந்துள்ளது.
1.அந்த அகஸ்தியரின் உணர்வை நுகர்ந்தவர்கள் அனைவருமே
2.”மகரிஷிகள்” ஆகின்றார்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று தனக்குள் வரும் நஞ்சினை அடக்கி ஆட்சி செய்யும் நிலை பெறுவோர் எவரோ அவர் மகரிஷியாகின்றார்.

ஆகையினால் தான் மகரிஷிகளின் அருள் சக்தி நாம் பெறவேண்டும் என்று ஏங்க வேண்டும்.

எனக்குள் வந்த அசுத்தங்களை நீக்குவதற்காக குருநாதர் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்தார்.

அவர் பெற்ற அற்றலின் தன்மையைக் கண்டுணர்ந்து அதை உணர்வதற்கும் அவரின் உணர்வின் ஆற்றலையும் குரு அருளால் என்னால் பெற முடிந்தது.

அதைப் போன்றுதான் உங்களுக்கும் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்திகயைப் பதியச் செய்கின்றோம். நீங்கள் நினைக்கும் பொழுதெல்லாம் அவர் பெற்ற ஆற்றல் மிக்க சக்தியைப் பெறுவதற்காக இதைச் செய்கிறோம்.

ஆகையால் அவர்களின் நினைவு கொண்டு “ஓ...ம் ஈஸ்வரா...” என்று புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் தொடர்பு கொண்டு மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எங்கித் தியானியுங்கள்.

உங்கள் உடல் முழுவதும் மகரிஷிகளின் அருள் சக்தி படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள். உடல் உறுப்புகள் முழுவதும் படரவேண்டும் என்று உள்முகமாகச் செலுத்துங்கள்.

இதைப் பழகிக் கொண்டீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே தியானமாகின்றது.