ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2017

மற்றவருக்கு உதவி செய்தாலும் உதவி செய்த பலனை நாம் எப்படிப் பெறுவது...?

ஒருவர் இகழ்ந்துரைக்கிறார். அதைக் கண்டவுடன் “இப்படி ஆகிவிட்டதா…?” என்று நாம் ஆத்திரப்படுகின்றோம். நாம் செல்லும் நல்ல பாதைகளுக்கு இது தடையாகின்றது.

ஆத்திரம் அடைந்த பின்பு அதன் வழியில் பதிலுக்கு நாம் அவரை இகழ்ந்துரைக்க எண்ணினால் அந்த இகழ்ந்துரைக்கும் உணர்வுகள் நமக்குள்ளும் வளருகின்றது.

இதே சொற்கள் அவரை இகழ்ந்து பேசும் உணர்வுகள் வந்ததென்றால் அவருக்குள் பதிவாகி மீண்டும் அந்த பதில் எனக்கே வரும். உயர்ந்த எண்ணங்களைப் பதிவாக்கும் நிலைகள் அங்கே தடைபடும்.

அவர்கள் பெறாதவண்ணம் அங்கே தடைபடுகின்றது. அந்த உயர்ந்த நிலைகள் வளரும் நிலைகள் எனக்குள் தடைபடுகின்றது.

கீழ்க்கண்ட மூன்று வாக்கியங்களும் மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

1.புகழ் கண்டு மயங்காதே..!
2.புகழாரம் பாடாதே…!
3.புகழ்ந்துரைக்க எண்ணாதே…!
என்று ஆரம்பத்தில் குருநாதர் இதைச் சொன்னார்,

நம்மை ஒருவர் மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தால்… எந்த நன்மை செய்தாலும் “அது வீண் தான்”.

1.”எதிர்பாராது” நன்மைகள் பல செய்தோம் என்றால்
2.அது நம்மைப் பாதிக்காது
3.செய்த நன்மையின் தன்மை நமக்கு உயர்ந்த உணர்வைக் கொடுக்கும்.

ஒருவருக்கு உதவி செய்துவிட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் “நான் இத்தனை செய்தேன்… அவர் என்ன செய்தார்…?” என்ற நிலைகளை முன் வைத்தால் உதவி செய்ததற்கு “அர்த்தமில்லாமல்” போய்விடும்.

நாம் உதவிகள் செய்தும் பலனற்றுப் போய்விடுகின்றது.

அவரும் பெற முடியவில்லை. இரண்டு பக்கமும் பலன் இரண்டு பேருக்கும் இல்லாமல் போய்விடுகின்றது.

இதைப்போன்று நம் வாழ்க்கையில் எதைச் சீர்படுத்த வேண்டும்…? எதனைப் பெறவேண்டும்…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்பார்த்து ஒருவருக்கு ஒன்றைச் செய்வது.., அப்பொழுது எப்படியும் அவருடைய நிலைகளைப் புகழ்ந்து சொல்ல வேண்டும் என்றால் குறைகள் நிச்சயம் வந்தே தீரும்.

அந்த எதிர்பார்ப்பு இல்லாதபடி… “உயர வேண்டும்” என்ற எண்ணத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் அது உயரும்.

நாம் யாருக்கு உதவி செய்தாலும்
1.அந்த மெய்ஞானிகளின் அருள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
2.அவருக்குள் இருக்கும் நோய்கள் நீங்கவேண்டும்.
3.மெய்ப்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற
4.இந்த எண்ணத்தை நமக்குள் வளர்த்தால் அந்த உணர்வு நமக்குள் விளையும்.
5.விளைந்த உணர்வின் சொல்லாக அது பாயும்.

எந்தச் செடியின் சத்தை நாம் நுகர்கின்றோமோ அந்தச் செடியின் உணர்ச்சியின் தன்மைதான் நம்மை இயக்கும். எந்தக் குணத்தின் தன்மையை நாம் நுகர்கின்றோமோ அதன் செயலாகத்தான் நம் செயல்கள் இருக்கும்.

இதனால் தான் நாம் திருட வேண்டியது எது என்றால் “அருள் ஞானம்”.

திருடிய அந்த அருள் ஞானத்தைச் செலவழிக்க வேண்டும் என்றால் அருள் சொற்களைத்தான் நம்மைச் சொல்ல வைக்கும். தெய்வச் செயலைத்தான் நம்மைச் செய்ய வைக்கும்.

அதற்குத்தான் யாம் இதைச் சொல்வது.