ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 14, 2017

மண்ணுக்குள் வைரம் விளைகிறது பாம்புக்குள் நாகரத்தினம் விளைகின்றது அகஸ்தியனோ அண்டத்தின் ஆற்றலை (நஞ்சை) உணவாக எடுத்து ஒளியின் சுடராக மாற்றி துருவ நட்சத்திரமானான் – அவனைப் பின்பற்றியவர்கள் “முப்பத்து முக்கோடி”

விஞ்ஞானிகள் அணுவைப் பிளந்து அணுவின் ஆற்றலைப் பெருக்கி அணு குண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் உருவாக்கி இன்று உலகையே அழிக்கும் நிலைகளுக்கு எல்லோரையும் பயமுறுத்திப் பெரும் அச்சுறுத்தலாக்கி விட்டனர்.

ஆனாலும் அந்த அணுவின் ஆற்றலைக் கொண்டு பலருக்கு நன்மை செய்யும் நிலைகளாக அதிக அளவு மின்சாரத்தை உருவாக்குவதற்கும் பயன்படுத்துகின்றார்கள்.

சிறிதளவே உள்ள யுரேனியத்தின் துணை கொண்டு பெரும் இயந்திரங்களையும் இயக்கி காந்தத்தின் தன்மையை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலைக்கு வந்துள்ளார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.

அன்று மெய்ஞானிகள் தான் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு
1.விண்ணுலக ஆற்றலைத் தன்னுள் அடக்கி
2.அதை உணவாக உட்கொண்டு தீமைகளை ஒடுக்கி
3.நஞ்சு தனக்குள் அடங்கி நிற்கும் நிலையாக
4.ஒளியின் சுடராக மாற்றி “வேகா நிலை” அடைந்துள்ளார்கள்.

ஒரு பாம்பினம் தான் உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்களின் மீது நஞ்சினைப் பாய்ச்சுகின்றது.

அந்த நஞ்சினை உணவுடன் சேர்த்துப் “பல பல நஞ்சு கொண்ட உயிரனங்களை உட் கொண்டு” இதற்குள் மீண்டும் மீண்டும் அந்த நஞ்சு சேர்ந்து அந்த நஞ்சே உறையும் தன்மையாக “நாகரத்தினமாக” மாற்றுகின்றது.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தன் உணர்வின் செயலால் அறிந்துணர்ந்திடும் ஆற்றல் கொண்டு நஞ்சினைத் தனக்குள் அடக்கி அடக்கி…, உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிடும் ஆற்றல் பெற்றான்.

1.நஞ்சினை ஒளியாக மாற்றி
2.உயிருடன் ஒன்றிய ஒளியின் ஒளி அலைகளாக
3.மின்னணுவின் இயக்கமாக நம் உடலில் இயக்குவது போல்
4.துருவ நட்சத்திரமாகச் சுழன்று கொண்டுள்ளான்.

உதாரணமாக வைரமோ நஞ்சின் தன்மை கொண்டது, அது தனக்குள் “பளீர்...” என்ற ஒளியைக் காட்டுகின்றது. ஒளியை மற்றவர்களுக்கு அறியச் செய்யும். ஆனால் அது “தான் இயங்காது”.

அகஸ்தியனோ உயிருடன் ஒன்றிய உணர்வின் தன்மை கொண்டு விண்ணின் ஆற்றலை உணவாக உட்கொண்டு ஒளியின் சுடராக இன்றும் வளர்ந்து கொண்டேயுள்ளான்.

27 நட்சத்திரங்களும் கடும் விஷத் தன்மை கொண்டது. ஒரு விஷத் தன்மை கொண்ட நட்சத்திரத்தின் ஒளிக்கற்றை எதிலும் சிக்காது நேரடியாகப் புவிக்குள் சிக்கிவிட்டால் பதிவாகிவிடுகின்றது.

இந்த நட்சத்திரத்தின் உணர்வலைகள் எதெனெதன் தாவர இனங்களில் கலந்ததோ அவை அணுக்களாக வளரப்படும் பொழுது அதனின் கருவைக் கவர்ந்து கொள்கின்றது.

பின் தன் வலுவால் மண் இனங்களுக்குள் கருவாகக் கூட்டித் தான் பட்ட நிலைகள் கொண்டு வைரங்களாக ஒரு பாறையாக உருவாகின்றது.

அந்த பாறைக்குள் துடிப்பின் நிலைகள் எடுத்து தன் ஒளியின் கவசமாக மாற்றிக் கொள்கின்றது. தனது வளர்ச்சியில் உணர்வின் தன்மை கவர்ந்து விளைகின்றது,

ஒரு கடுகளவு ஆகும்போது இந்த உணர்வின் தன்மை பெருகப் பெருக மற்றதைப் பிளந்து இது வெளி வந்துவிடும்.

ஏனென்றால் இதனின் வளர்ச்சி சிறுகச் சிறுக ஆகி தனக்குள் பாறையின் நிலைகள் வெடித்து அது வெளி வந்துவிடும். அதற்கு மேல் வளர்ச்சி இல்லை.

ஒரு நஞ்சு கொண்ட பாம்பினத்தின் செயலும் இதுவே.

முதிர்ச்சி அடைந்தால் பாம்பின் உடலிலிருந்தும் இத்தகைய மாணிக்கக் கல்லை எடுக்கலாம்.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியனோ தான் கவர்ந்த உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றினான். “உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு” என்றுமே அழியாத நிலைகள் கொண்டு துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

2000 சூரியக் குடும்பங்கள் ஒன்றாகச் சேர்த்து இணைத்து ஒரு பேரண்டமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது.

2000 சூரியக் குடும்பம்ங்களிலிருந்து வெளிப்பட்டு வரும் உணர்வின் நிலைகள் நம்  பிரபஞ்சத்திற்குள்ளும் வந்து கொண்டிருக்கின்றது. அதை இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் நம் பூமியும் கவர்கின்றது.

இவ்வாறு 2000 சூரியக் குடும்பங்களிலிருந்து வருவதை நம் பூமி  கவரும் அந்த எல்லையில் (அகஸ்தியன்) நின்று இதை நுகர்ந்து தான் உணவாக எடுத்து நஞ்சினையே ஒளியாக மாற்றிக் கொண்டுள்ளது “துருவ நட்சத்திரம்”.

நஞ்சினை ஒளியாக மாற்றிடும் உணர்வின் அலைகளாக அதிலிருந்து பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

1.அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றவர்கள் பல கோடி.
2.அவர்களைத்தான் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்று சொல்வது.
3.நாமும் அகஸ்தியன் சென்ற பாதையில் செல்வோம்.
4.அழியா ஒளியின் சரீரம் பெறுவோம்.